வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37,751 பேருக்கு மருத்துவப் பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37,751 பேருக்கு மருத்துவப் பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

featured image

சென்னை,டிச.8– நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை உள்ளிட்ட 4 மாவட் டங்களில் ‘மிக்ஜம்’ புயலால் பாதித்த பகுதிகளுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்கு நரகத்தின் சார்பில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தேவை யான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது வரை இந்த வாகனத்தின் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37 ஆயிரத்து 751 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுதவிர நிவாரண மய்யங்களில் 275 சிறப்பு மருத்துவ முகாம்களும், நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களில் 172 மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
`மிக்ஜம்’ புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக் குட்பட்ட அடையார் ஆற்றங்கரை யோர பகுதிகளான திடீர் நகர், கோதா மேடு, சலவையாளர் காலனி, அண்ணா நகர், அன்னை சத்யா நகர், லேபர் காலனியில் உள்ள 7 தெருக்கள் மற்றும் வண்டிப்பாதை ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.12.2023) வீடு வீடாகச் சென்று ஒரு லிட்டர் பால் மற்றும் 2 பாக்கெட் பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

No comments:

Post a Comment