தனது கோவிலையே காப்பாற்றாத சாயிபாபா பட்டாசு வெடித்ததால் கோபுரம் எரிந்து நாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 13, 2023

தனது கோவிலையே காப்பாற்றாத சாயிபாபா பட்டாசு வெடித்ததால் கோபுரம் எரிந்து நாசம்

சென்னை, நவ.13 சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலை பொறுத்தவரை பிரசித்தி பெற்ற கோவிலாம்.வியாழக்கிழமைகளில் அரசியல், சினிமா முக்கிய பிரபலங்கள் இந்த கோவிலுக்கு வந்து அருள் பெறுவார்களாம். ஆனால் நடந்தது என்ன? 

 மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் அதன் காரணமாக ஓலைகளால் சுற்றி மறைப்பு கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஓலையில் தீபாவளிக்கு வைத்த ராக்கெட் பட்டாசு பறந்து வந்து விழுந்ததில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட்டது. 12.11.2023 அன்று மாலை 6.15க்கு இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகவும் சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால் தீ மேலும் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த தீ விபத்தில் யாரேனும் காயம் அடைந்தார்களா, பாதிப்புகள் என்ன என்பது பற்றிய விவரங்களை தீயணைப்புத்துறையும், காவல் துறையும் இன்னும் வெளியிடவில்லை. 

பிரபலங்கள் எல்லாம் வருகிறார்கள் சக்தியுள்ள சாயிபாபா என்று கதைவிட்ட கோவில் நிர்வாகம் - இந்த சாயிபாபா தனது கோவிலில் பற்றிய தீயை அணைக்க சக்தியில்லாமல் போனது. அதனை தமிழ்நாடு அரசு தீயணைப்பு படைவீரர்கள் வந்துதான் அனைத்தனர்.  இருப்பினும் கோவில் நிர்வாகம் தீவிபத்தால் ஏற்பட்ட சேதத்தை மறைத்து விட்டது. முழுமையான விபரம் வெளிவந்தால் சாயிபாபாவின் சக்தி சந்தி சிரிக்கும் என்ற அச்சமோ என்னவோ.


No comments:

Post a Comment