மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் உரை

அறிவுலக ஆசான் தந்தை பெரியார்,  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர், அய்யா ஆசிரியர் போன்ற மாபெரும் சமூகநீதி சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலுடன் வருணாசிரம தர்மத்தையும், ஸநாதன தர்மத்தையும், அதன்வழியில் குலக்கல்வித் திட்டமாயினும், குலத்தொழில் திட்டமாயினும் எதிர்த்திடுவோம்!

மதுரை, நவ.12 அறிவுலக ஆசான் தந்தை பெரியார்,  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர், அய்யா ஆசிரியர் போன்ற மாபெரும் சமூகநீதி சிந்தனையாளர் களின் வழிகாட்டுதலுடன் வருணாசிரம தர்மத்தையும், ஸநாதன தர்மத்தையும், அதன்வழியில் குலக்கல்வித் திட்டமாயினும், குலத்தொழில் திட்டமாயி னும் எதிர்த் திடுவோம் என்றார் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள்.

‘‘விஸ்வகர்மா யோஜனா”வா? ‘‘மனுதர்ம யோஜனா”வா? என்ற கேள்வியுடன் நாகப்பட்டினம் தொடங்கி மதுரை வரை நடைபெற்ற 8 நாள் பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு நாளான நவ.5 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நிறைவு விழாக் கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் குலத்தொழிலைத் திணிக் கும் ‘‘மனுதர்ம யோஜனா'' என்கிற சதித் திட்டத்தை எதிர்த்துத் தொடர் பயண பரப்புரையின் நிறைவு விழாவில் சிறப்புரை வழங்க வருகை தந்துள்ள நீண்ட நெடிய பொதுவாழ்விற்குச் சொந்தக்காரர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸநாதனவாதிகளின் மற்றும் ஒரு நச்சு செயல்தான் இந்த மனுதர்ம யோஜனா!

வருணாசிரமம், ஸநாதன தர்மம் என்பதின்மூலம் மதத்தையும்,ஜாதியையும் காப்பாற்ற, பாதுகாத்திட ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல திட்டங்களையும், அதனைத் தொடர்ந்து சட்டங்களையும் இயற்றி மனிதர் களுக்குள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன் என வேற்றுமைப்படுத்தி, ஆதிக்க மனப்பான்மையுடன் ஆட்சி நடத்தும் ஹிந்து ஸநாதன வாதிகளின் மற்றும் ஒரு நச்சு செயல்தான் இந்த மனுதர்ம யோஜனா என்கிற குலத்தொழில் திட்டம்.

அவரவர் அப்பன் தொழிலை செய்திடவேண்டும்; அதற்கு நிதியுதவி அளித்திடுவோம் என்பது ஆட்டிற்கு ஓநாய் இரை தேடித் தருவதற்குச் சமமாகும்.

அனைவருக்கும் வேலை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் தந்தை பெரியார் மண்!

தொழில் இழிவைக் களைந்து அவமானம், தற்குறித் தனத்தை உடைத்தெறிந்து இன்று அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தந்தை பெரியார் மண் இது.

இந்தப் பெரியார் மண்ணின் வன்மையோடு, அறி வுலக ஆசான் தந்தை பெரியார், பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர், அய்யா ஆசிரியர் போன்ற மாபெரும் சமூகநீதி சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலுடன் வருணாசிரம தர்மத்தையும், ஸநாதன தர்மத்தையும், அதன்வழியில் குலக்கல்வித் திட்ட மாயினும், குலத்தொழில் திட்டமாயினும் இந்தப் பிற்போக்குத்தனத்தை எதிர்த்திடுவோம்.

பல்வேறு தொழில்கள் செய்தவர்களின் பிள்ளை களாகிய நாம், இன்று மருத்துவராக, பொறியாளராக, வழக்குரைஞராக, நீதிபதிகளாக, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் என பல்வேறு ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து நமக்கான ஆட்சியை அமைத்துள்ளோம்.

எனவே, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசின் இதுபோன்ற அபத்தமான திட்டங்களை முறியடிப்பதில் நாம் விழிப்புணர்வுடன்  ஆயத்தமாயிடுவோம் - அனைவரும் ஒன்று கூடுவோம், வெற்றி காண்போம்!

இவ்வாறு மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் உரையாற்றினார்.

No comments:

Post a Comment