வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கால செயல்பாட்டு மய்யத்தில் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கால செயல்பாட்டு மய்யத்தில் ஆய்வு

சென்னை,நவ.15- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (14.11.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திலிருந்து கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை - முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் நேற்று (14.11.2023) கள ஆய்வு மேற்கொண்டு நிவாரண நடவடிக் கைகளை அமைச்சர்கள் விரைந்து மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங் கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 14.11.2023 வரை 221.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை யளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 14.11.2023 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 8 மாவட்டங் களில் இயல்பான மழைப்பொழிவும், 22 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, அனைத்துத் துறை அரசு அலுவலர் களுக்கும் அறிவுரை வழங்கினார்கள்.

இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் 13.11.2023ஆம் நாளிட்ட அறிவிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கும் முதலமைச்சர் அறிவுரை

* கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 13.11.2023 அன்று அறி வுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

* கனமழை பெய்யக்கூடும்என்று தெரிவிக்கப் பட்டுள்ள கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சர் பெருமக்களை அனுப்பி வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

* திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர் புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன் னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* மாநில / மாவட்ட அவசரகால செயல்பாட்டு மய்யங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.

* பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

முதலமைச்சர் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திலிருந்து கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கன மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட் டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பாலச்சந்தர் அவர்களை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான எச்சரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது ஆய்வின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் , தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூடுதல்தலைமைச் செயலாளர் / வளர்ச்சி ஆணையர் மற்றும் முதலமைச்ச ரின் செயலர் எம்.முருகானந்தம், மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி.அ.ராமன் ஆகிய அலு வலர்கள் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment