தீபாவளியால் பொருள் நட்டம் - மூடநம்பிக்கைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

தீபாவளியால் பொருள் நட்டம் - மூடநம்பிக்கைகள்!

பட்டாசு வெடிவிபத்து 
பொருட்கள் எரிந்து நாசம்

அய்தராபாத், நவ.12 தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது. 

தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று (11.11.2023) இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர். 

இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு தீ பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கும் தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது. கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராஜேந்திரா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களிடையே இப்படியும் அச்சம் தீபாவளிகொண்டாடினால் திருமணத்தடை  

அய்தராபாத், நவ.12 ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டத்தில்  ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின் றனர். இதில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினர் உள்ளனர். 

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் தீபாவளியை   கொண்டாடி யுள்ளனர். அன்று தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்தது. இதில் அந்த குழந்தை இறந்தது. மேலும் தீபாவளி கொண்டாடிய பிறகு 3-ஆவது நாளில் 2 காளைகள்  இறந்தனவாம். இது அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

இந்த சம்பவங்களால் அந்த கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடினால் 'துரதிர்ஷ்டம்' வந்துவிடும் என்று நம்பத் தொடங்கினர். இதனால் ஆண்டுதோறும் அவர்கள் தீபாவளியை கொண்டாடுவ தில்லை. தலைமுறை தலைமுறையாக எப்பொ ழுதும் தீபாவளி  கொண்டாட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

மேலும்  கிராமத்தில் தீபாவளி  கொண் டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை. அங்குள்ளவர்கள்  "தீபாவளி கொண்டாட எங்களுக்கு தைரியம் இல்லை" என கூறுகின்றனர். வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் தலை தீபாவளி கொண்டாடுபவர்கள்  அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாமாம். ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாது. 

 இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் புன்னனா நரசிம்மலூ (வயது 66) என்பவர் கூறியதாவது:  எங்கள் கிராமத்தில் தீபாவளி மற்றும் நகுல சவிதி பண்டிகை களைக் கொண்டாடக் கூடாது என விதி உள்ளது. நான் பிறந்து வளர்ந்தது முதல் தீபாவளி  கொண்டாடி பார்த்ததில்லை. 

என் மகன் தேர்வில் தோல்வியடைந்த தால் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் நான் தடையை மீறி தீபாவளி கொண்டாட முயன்றதால் அவன் இறந்து விட்டான் என கிராமத்தில் வதந்தி பரவி விட்டது. கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக எங்கள் கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி  கொண்டாடாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment