"தீபாவலி' பற்றித் தமிழறிஞர்கள் கருத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

"தீபாவலி' பற்றித் தமிழறிஞர்கள் கருத்து!

தொகுப்பு :குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் 

”தீபாவலிப் பண்டிகை தமிழர்க்கு எவ்வகை யிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்ப னைகள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும்,  ஆராய்ச் சிக்கும்,  அனுபவத்திற்கும்,  உண்மைநிலைக்கும்,  இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும் தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கத்த வர்களாகிய நாமும் ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகவே நாட்டிலே பேசியும், ஏட்டிலே எழுதியும் அறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். என்றாலும், நாம் எதிர்பார்த்தவாறு மக்கள் இன்னும் திருந்தி தெளிந்த அறிவு பெற்றார்கள் இல்லை. தீபாவலி மோகம் மக்களை இன்னமும் வாட்டி வதைத்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் நமது பகுத்தறிவு நாத்திக இயக்கத் திற்கு முற்றிலும் மாறுபாடான, வேறுபாடான எண்ணம் கொண்ட தமிழக ஏழு பெருந்தமிழ் அறிஞர்களின் கருத்துரைகள் நமது கொள்கைக்கு வலுவூட்டி அரண் செய்வதாக அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் அத் தமிழறிஞர்களின் கருத்துரைகள் “தீபாவலி தமிழர்விழா அன்று” என்பதையும், “தீபாவலிக்கு இலக்கியச் சான் றுகள் ஏதும்இல்லை” என்பதையும் நன்கு தெளிவு படுத்துகின்றன. தீபாவலி கொண்டாடி மகிழும் பக்த அன்பர்களாம், தமிழ்ப் பெருமக்கள் மதிநலமும், மானஉணர்வும் பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அத்தமிழ் அறிஞர் களின் கருத்துகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.

1. தீபாவலி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவலிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப் பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலில், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

தமிழறிஞர்: “கா. சுப்பிரமணியன் பிள்ளை” அவர்கள் எழுதிய “தமிழர் சமையம்” என்ற நூல் பக்கம்: 62

2.வடநாட்டுப் பண்டிகையே தீபாவலி!

தீபாவலி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தி யாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழ கத்தில் தீபாவலிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவலிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவலி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரி களுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வரு கிறார்கள். தீபாவலி அன்று புதுக்கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவலி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப - ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவலி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவலி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள்; புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவலி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்தத் திருநாள் அன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென்தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்படப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவலியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்தது இல்லை.

பேராசிரியர், “அ.கி. பரந்தாமனார்” அவர்கள் எழுதிய “நாயக்கர் வரலாறு” என்னும் நூலில் பக்கம்; 433-434

3. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவலி!

வட நாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழுமுதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறியபின் தீபாவலித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ்மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவலித் திருநாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ்மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவலி என்னும் சொற்றொடரின் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்குவரிசை என்றே பொருள்தரும் ஆதலால், தீபாவலி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

சைவப் பெரியார் “மறைமலை அடிகள்” எழுதிய ”தமிழர் மதம்” என்ற நூலில் பக்கம்: 200-201

4. அகராதிக் குறிப்பில்

இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க (மறைக்க) விஷ்ணு மூர்த்தி சுவேதவராக (பன்றி) உருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பாயைப் போல் சுருட்டினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்துத் தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது). (169)

நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன். (934)

சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்தனர் தேவர். (சுரா பானம் என்பது ஒருவகை மது; அதை உண்டதால் அவர் சுரர் ஆனார்) (705)

அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந் தும் ஆரியப் பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென்நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)

ஆசிரியர்: சைவப் பேரறிஞர் “ஆ.சிங்காரவேலு முதலியார்” தொகுத்து எழுதிய “அபிதான சிந்தாமணி” என்னும் நூல்.

5. சமண சமயப் பண்டிகையே தீபாவலி!

தீபாவலி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கிஇருந்தபோது அங்குக்குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கே அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்தவிழா (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற் காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவலி என்ற பெயரில் விடியற் காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற் காலையில் நீராடியபின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர்புரிவது பண்டைக் காலத்துப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர்வீரர்கள்  நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடிவந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவுநாள் தீபாவலி என்பதில் அய்யமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனமில்லாமல் புதியதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

கல்வெட்டாராய்ச்சி அறிஞர் “மயிலை சீனி வேங்கடசாமி” அவர்கள் எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில் பக்கம்: 79-80)

6. அறிவுக்குப் பொருத்தமற்ற கதை!

வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தாம் இருந்த இடத்திலேயே வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்தது; எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடுபெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றிவைத்து விழாக்கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவலி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவலியைக் கொண் டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவலியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

(டாக்டர் ”மா. இராசமாணிக்கனார்” அவர்கள் எழுதிய “தமிழர் நாகரிகமும், பண்பாடும்” என்ற நூலில் பக்கம்: 33-34)

7. அசுரர் கொலைக்கு விழாவா?

தீபாவலியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார். அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவலி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவலி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்கவேண்டும். (ஆனால் அவ்வாறு  இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவலிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவலி ஏற்பட்டதன்று.

“குகஸ்ரீ திருமுருகக்  கிருபானந்தவாரியார்” சுவாமிகள் எழுதிய “வாரியார் விரிவுரை விருந்து” என்ற நூலில் பக்கம் 95


No comments:

Post a Comment