மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங் சிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 26, 2023

மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங் சிலை

சென்னை, நவ.26 மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.11.2023) திறந்து வைக்கிறார். 

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் உள்ள உள் நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.

முத்தமிழறிஞர் கலைஞர், சமூகநீதி காவலர் வி.பி.சிங் பற்றி குறிப்பிடும் போது “அரசியல் நாகரிகத்துக்கும், பண்பாட் டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கியவர்” என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாக வும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங்.

இத்தகைய சிறப்புமிக்க மேனாள் பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.11.2023) காலை 11 மணியளவில் திறந்து வைக்கிறார். 

நிகழ்ச்சியில் உ.பி. மேனாள் முதலமைச் சர் அகிலேஷ் யாதவ், அமைச்சர்கள், குடும்பத்தினர், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.


No comments:

Post a Comment