ஆளுநர்கள் மக்களின் பிரதிநிதிகளா? உச்சநீதிமன்றம் நறுக்கென்று கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

ஆளுநர்கள் மக்களின் பிரதிநிதிகளா? உச்சநீதிமன்றம் நறுக்கென்று கேள்வி!

புதுடில்லி,நவ.7- மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளு நர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தாங்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரு கிறது. ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 27 மசோதாக்களில் 22-க்கு மட் டுமே ஆளுநர் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

பண மசோதாக்களுக்கு ஆளு நர் ஒப்புதல் வழங்கினால்தான் பேரவையில் தாக்கல் செய்ய முடி யும். இந்தநிலையில், மாநில அரசு 3 பண மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. 

கடந்த அக்.20ஆம் தேதி கூடிய 4ஆவது சிறப்பு நிதிநிலை கூட்டத் தொடரில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டி மிட்டிருந்தது.

ஆளுநரால் நிறுத்திவைப்பு

ஆனால், அதற்கு முந்தைய நாளான அக்.19ஆ-ம் தேதி முதல மைச்சருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், 3 மசோதாக்களையும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டி ருந்தது.

நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுவது சட்டவிரோதம் என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து, 20ஆம் தேதி கூடிய சிறப்பு கூட்டத்தொடர் சில மணி நேரங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த நவ.1ஆம் தேதி 2 பண மசோதாக்களுக்கு மட்டும் ஆளு நர் ஒப்புதல் வழங்கினார்.

பஞ்சாப் அரசு மனு தாக்கல்

இதற்கிடையே, பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்தாமதம் செய்வதாக, பஞ்சாப் மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அமர்வில் இந்த மனு நேற்று (6.11.2023) விசார ணைக்கு வந்தது. அதன் விவரம்:

நீதிபதிகள்

சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன் றத்தை அணுக வேண்டிய கட்டா யத்துக்கு மாநில அரசுகள் தள்ளப் பட்டுள்ளன. இது கவலை அளிப் பதாக உள்ளது.

இப்பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். இதற்கு முன்பு, தெலங்கானா மாநில அரசு மனு தாக்கல் செய்த பிறகு, கிடப்பில் இருந்த மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித் தார். இதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக் களை ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதேநேரம், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

தாங்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந் துவிடக் கூடாது. ஆளுநர்களும், மாநில அரசுகளும் மோதல் போக்கை கடைப்பிடிப்பது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி

 நிதி மேலாண்மை, ஜிஎஸ்டி திருத்தங்கள், குருத்வாரா நிர் வாகம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் கடந்த ஜூலை மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் இது வரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், அரசு நிர்வாகம் பாதிக் கப்பட்டுள்ளது.

பஞ்சாப் ஆளுநர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

மசோதாக்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். மாநில அரசு தேவையின்றி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த விவரங் களை வரும் 10ஆம் தேதி தெரி விக்கிறேன்.

அறிக்கை அளிக்க உத்தரவு

நீதிபதிகள்: மசோதாக்கள் மீது பஞ்சாப் ஆளுநர் உரிய நட வடிக்கை எடுத்து வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் கூறி யுள்ளார்.

இது தொடர்பான அறிக் கையை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடு கிறோம்.

இந்த வழக்கு வரும் 10ஆம் தேதி மீண்டும் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மூத்த வழக்குரைஞர், மேனாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால்

இதே விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள ஆளு நர்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகளும் மனுக்கள் தாக் கல் செய்துள்ளன.

அந்த மனுக் களையும் வரும் 10ஆம் தேதி விசாரிக்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, ‘‘பஞ்சாப் அர சின் மனுவுடன், கேரளா, தமிழ் நாடு அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும் 10ஆ-ம் தேதி விசாரணை நடைபெறும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, 8-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் தர வில்லை என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment