பருவநிலை மாற்றம் - மனித குலத்துக்கு எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

பருவநிலை மாற்றம் - மனித குலத்துக்கு எச்சரிக்கை!

உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அய்பிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்பு நூறு ஆண்டு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட உயர்வு, 2050க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார்.

இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங் கடல் மட்டம் உயர்ந்தது.

அய்பிசிசியின் இந்த ஆய்வறிக்கையை  195 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த நாடுகள்தான் பருவநிலை மாற்றத்தின் இயல்பு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் எவ்வாறு காரணமாகிறார்கள் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

வரும் நவம்பர் மாதம், கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு முன்பாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அந்த கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக, நவீன கால பருவநிலை மாற்ற அறிவியல் அணுகுமுறை ஆலோசனைகளை தமது அறிக்கையில் இந்த குழு உலக நாடுகளுக்கு வழங்கியி ருக்கிறது.

பருவநிலை மாற்றம் மீது மனிதர்கள் விளைவித்த மோசமான இந்த தாக்கம், யதார்த்தமான உண்மை என்று அய்பிசிசி குழுவின் இணை தலைவர் வெலரீ மெஸ்ஸன் டெல்மோட் கூறியிருக்கிறார்.

பசுங்குடில் வாயு வெளியேற்றம் காரணமாக, பூமி 1.5 டிகிரி வெப்பமாக உயரும்போது கடலின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரிக்கும் என்றும் 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்ளாக பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரியாகலாம் என்ற கூற்றை ஒதுக்கி விட முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதே சமயம் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்ற அளவை குறைக்கும் முயற்சிகளை கடுமையாக பின்பற்றினால், பூமியின் வெப்பநிலை மேலும் உயராமல் நிலையாக இருக்கலாம் என்ற புதிய நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்டிக் பெருங்கடல் 2050க்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையாவது பனி இல்லாத நிலையை அடையும்.

1.5 டிகிரி வெப்பமயமாதல் நிலைமை நிலவும்போதும், “வரலாற்றில் இதுவரை ஏற்படாத வகையில், சில தீவிர பருவநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட நிகழ்வுகள் 2100அய் உலகம் எட்டும்போது, குறைந்தபட்சம் அதிக அலை சீற்றத்தை அளவிடும் இடங்களில் பாதியளவை எட்டும்.

பல பகுதிகளில் காட்டுத்தீ உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

துரிதமாக அறிய வேண்டிய குறிப்புகள்

பூமியின் தட்பவெப்பம், 1850-1900க்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் இருந்ததை விட 2011-2020க்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் 1.09 டிகிரி உயர்ந்துள்ளது.

1850ஆம் ஆண்டு முதல் இல்லாத வகையில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் பூமி மிகவும் வெப்பமாக உள்ளது.

1901 முதல் 1971ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமை யுடன் ஒப்பிடும்போது சமீபத்திய கடல் மட்டத்தின் உயரம் சுமார் மும்மடங்கு உயர்ந்திருக்கிறது.

1990களில் இருந்த நிலையை விட ஆர்டிக் பனிக்கடல் உருகுவதற்கும் உலக அளவில் பனிச்சிகரங்கள் உருகுவதற்கும் மனிதர்களின் தாக்கமே மிக அதிக வாய்ப்பாக கருதப்படுகிறது.

அனல் காற்று உள்பட வெப்பமயத்துடன் தொடர்புடைய பல கடுமையான சூழ்நிலைகள், 1950களில் இருந்ததை விட அதிகமாகி இருப்பது போல, குளுமையான பருவநிலை குறைவதும் அதன் மூலம் ஏற்படும் கடுமையும் குறைவாக பதிவாவதும் நிதர்சனம்.

இந்த ஆரம்பநிலை அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்து வரும் மாதங்களில் தொடர்ச்சியாக பல்வேறு பருவநிலை விளைவுகளை விவரிக்கும் அறிக்கைகள் வெளியாகவிருக்கின்றன.

அந்த வகையில், 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பருவநிலை மாற்ற அறிவியல் முயற்சிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முதன்மையான முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

“மனிதகுலத்துக்கு ஓர் அபாய எச்சரிக்கை”

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அய்.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ், “அய்பிசிசி  வெளியிட்டுள்ள செயல் திட்டக்குழுவின் முதலாவது அறிக்கை மனிதகுலத்துக்கு ஓர் அபாய சமிக்ஞை,” என்று கூறியிருக்கிறார்.


No comments:

Post a Comment