உடல் தோற்றத்தைப் பார்த்து கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

உடல் தோற்றத்தைப் பார்த்து கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி

மங்களூரு, நவ.15 மருத்துவ இணையரின் மகள் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவி உடல் பருமனாக உள்ளதால் உடன் படிப்பவர்கள் ஏளனம் செய்ததால் கல்லூரியின் விடுதி மாடியில் இருந்து விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

கருநாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி  (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2ஆ-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம் ஆடானி ஆகும். இவரது தந்தையும் டாக்டராக பணியாற்றி வருகிறார். பிரக்ருதி  கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். அவரது அறை முதல் தளத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று (14.11.2023) அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி   தங்கும் விடுதியின் 6-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலை தரையில் பட்டு சிதறி ரத்த வெள்ளத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த நிகழ்வு பற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நிகழ்விடத் திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தற்கொலை செய்த மாணவி பிரக்ருதியின் உடலை மீட்டு  உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரக்ருதி   தங்கியிருந்த அறையில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது பிரக்ருதி ஷெட்டி தற்கொலைக்கான காரணம் பற்றிய  கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், "எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது இதனை உடன் படிக்கும் அனைவரும் ஏளனம் செய்துவந்தனர். இதனால். உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற் கொண்டேன். 

ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வரு கிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்" என உருக்கமாக எழுதி வைத்திருந்தார். 

மேலும் இந்த நிகழ்வு குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் பருமன் பிரச்சினையால் உடன்பயில்பவர்கள் ஏளனமாக பேசியதால் மருத்துவ மாணவி 6-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment