மருத்துவமனைமீது தாக்குதல்: மனிதம் மரத்துப்போய்விட்டதா? காசா மீதான போரை நிறுத்தவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

மருத்துவமனைமீது தாக்குதல்: மனிதம் மரத்துப்போய்விட்டதா? காசா மீதான போரை நிறுத்தவேண்டும்!

அனைத்துலக நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, அக்.19- காசா பகுதியில் நடைபெறும் போரை உடனடியாக நிறுதத அனைத்துலக நாடுகள் ஓரணியாக நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போர் என்பதே கொடூரமானது!

அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப் பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாள்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப் பட்ட குடியிருப்புகளும், கடும் காய மடைந்த குழந்தைகளின் அழுகுரலும்,  குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. 

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந் துள்ளார்கள். 

மனிதம் மரத்துப் போய்விட்டதா?

உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. 

அய்க்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment