பெண்கள் இட ஒதுக்கீடு - ஒரு கண் துடைப்பு நாடகம் : கனிமொழி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

பெண்கள் இட ஒதுக்கீடு - ஒரு கண் துடைப்பு நாடகம் : கனிமொழி பேட்டி

சென்னை,அக் 12 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், பெண் களை ஏமாற்ற கொண்டு வரப்பட் டுள்ளது என்றும் கனமொழி எம்.பி. தெரிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நாளை மறுதினம் (14.10.2023) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி யின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் மேனாள் எம்.பி. சுஷ்மிதா தேவ, பீகார் மாநில உணவுத் துறை அமைச்சர் லேஷி சிங், டில்லி சட்டமன்ற துணைத் தலைவர் ராக்கி பிட்லான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் சுபா ஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மகளிரணி பொதுச்செயலாளர் ஆனி ராஜா உள்பட "இந்தியா'' கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத் தில் தி.மு.க. துணை பொதுச்செய லாளர் கனிமொழி   தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாநாடு நடைபெற உள்ள சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை கனிமொழி  நேற்று (11.10.2023) பார் வையிட்டார். அவருடன் மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர். பின்னர் கனிமொழி கூறியதாவது:-

இந்த மாநாடு கலைஞரின் நூற்றாண்டின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நாட்டில் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றியும், மணிப்பூரில் இன்றும் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும், பெண்களுக்கான வேலைவாய்ப் புகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தவும் வலியு றுத்தப்படும். வாக்காளர்களில் சரி பாதியாக இருக்கக்கூடிய பெண் களின் குரலை பதிவு செய்யக்கூடிய மாநாடாக இது நடக்கிறது. 

எல்லோரும் ஆதரித்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா. தொடர்ந்து அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கலைஞரும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி வரும் மசோதாவாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2 முறை ஆட்சிக்கு வந்த பிறகு இப்போதுதான் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீ ரென்று மசோதாவை நாடாளு மன்றத்தில் கொண்டுவந்தார்கள். அதனை கொண்டு வரும்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு முடிய வேண்டும். அதன் பிறகு தான் செயல்முறைக்கு வரும் என்று சொல்கிறார்கள். இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதையேதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சொன்னார். தேர் தலுக்கு முன்னதாக பெண்களை ஏமாற்றுவதற்கு ஒரு கண்துடைப்பு நாடகமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு மகளிர் இடஒதுக்கீட்டு மசோ தாவை கொண்டுவந்துள்ளது.

5 மாநிலங்கள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 'இந்தியா' கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக இருக்கிறது. மக்கள் இன்னும் ஏமாறாக தயாராக இல்லை. இவ்வளவு ஆண்டுகளாக வாக்குறுதிகள் எதையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றாத சூழ் நிலை உள்ளது. மேலும் மதத்தை அரசியலுக்காக மட்டும் பயன் படுத்தி மக்களை ஏமாற்றி கொண் டிருக்கிற நிலையை மக்கள் ஒதுக்க தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment