வீடுகள் ஜனநாயகமானவையா - ஓர் ஆய்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

வீடுகள் ஜனநாயகமானவையா - ஓர் ஆய்வு!

இந்தியச் சமூகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த ஆரோக்கியமான ஆய்வு கள் இன்றைய காலகட்டத்தின் தேவை. பெண் கல்வி, சொத்துரிமை, மறுமண உரிமை, பொருளாதாரச் சுதந் திரம் என்று ஆணுக்கு இணையான உரிமைகளைச் சட்டம் வாயிலாகவும் நடைமுறைச் செயல்பாடுகள் மூலமாகவும் நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும் நடைமுறை வாழ்க்கையில் இத்தகைய உரிமைகள் பெரும்பாலான பெண்களுக்குக் கானல் நீராகவே இருக்கின்றன.

கல்வியும், பொருளாதாரமும் பெண்ணை விடுதலை செய்துவிட்டதா என்கிற கேள்வியினூடாக இச்சிந்த னையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவோம். ஆணுக்கு இணையாகப் பெண் கல்வி கற்றுப் பெரும் போராட்டங்களை எதிர்கொண்டு உயர் பதவிகளில் அமர்ந்தாலும் வீடு என்பது பெண்களின் கால் விலங்காக இருப்பதை மறுக்க முடியாது. வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டு வேலைகள், குழந்தைப் பராமரிப்பு, சமையல் என்று அனைத்தையும் மேற் கொண்டு நிறைவு செய்து, அதன்பின் தன் அலுவலகப் பணிக்குத் தலைதெறிக்க ஓடும் நிலையை சமூக அவலம் என்பதாகத்தான் குறிக்க வேண்டியுள்ளது. விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம்.

தன் மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சுமக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண், வீட்டு வேலைகளில் பெரும்பாலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. அவை பெண்களுக்கானவை என்றே இப்போதும் ஆண்கள் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இது நாகரிகச் சமூகமா?

கல்வியறிவும், பொருளாதார நிலையும் ஆணின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தனர். ஆணுக்கு இணையாகப் பெண் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என்று அனைத்தையும் பெற்ற பிறகும் வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று நினைக்கும் அவலம் நாக ரிகச் சமூகத்துக்கு அழகில்லை. வெளி வேலைக்குச் செல்லும் பெண்கள் தினமும் அய்ந்தரை மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்வதாகக் குறிப்பிடுகின்றது ஓர் ஆய்வு. வீட்டிலும் வேலைச்சுமை, பணியிடத்திலும் வேலைச்சுமை என்று எல்லா நிலைகளிலும் பெரும் அழுத்தத்தைச் சுமக்கும் பெண்கள் உடல், மனம் சார்ந்து பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதையும் மறுக்க முடியாது.

இன்றைய அறிவியல் யுகத்திலும் பெண்ணை, ஆண் இரண்டாம் பாலினமாகப் பார்க்கும் நிலையோடு தனக்கு வாய்த்த நல்ல அடிமையாகப் பார்க்கும் அவல நிலையையும் எவ்வாறு மாற்றியமைப்பது? குழந்தை கள், குடும்பம் என்று அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்பொறுப்பில், கடமையில் பங்கெடுக்க ஆண் விரும்பாதது எதனால்? ஆணாதிக்கக் கருத்தியல்கள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் கைக்கொண்டு தொடர்ந்து பெண்ணைச் சுரண்டலுக்கு உட்படுத்துவதை எவ்வாறு ஏற்க முடியும்?

கல்வி, வேலை என்று ஒரு ஆணைப் போலவே வளரும் பெண்ணுக்குத் திருமணத்துக்குப் பிறகு வாழ்க் கைச் சூழல் முற்றிலும் மாறுபடுகிறது. பெரும் மாற்றங் களற்ற வாழ்க்கையைத் திருமணத்துக்குப் பிறகும் ஆண் மேற்கொள்கிறான். இவ்வாறு இருவேறு கருத் தாக்கங்களுடன்குடும்பங்கள் அறமற்று இயங்குவதை சமன் செய்ய வேண்டிய கடமை ஆணுக்கு இருக்கிறது.

குடும்பத்தின்மீதான அக்கறை என்பது மனைவியின் கனவுகள், விருப்பங்கள், லட்சியங்கள் மீதான அக்கறை யும்தான் என்பதைக் கணவன் புரிந்துகொள்ளவேண்டும். காலையில் செய்தித்தாள்கள் ஆண்களின் வாசிப் புக்காக மட்டுமல்ல, நம் வீட்டுப் பெண்களின் வாசிப்புக் காகவும் காத்திருக்கின்றன என்பதை ஆண்கள் புரிந்துகொண்டு வீட்டு வேலைகளைப் பகிரும்போது மட்டுமே இச்சமூகம் வளர்ந்த நாகரிகச் சமூகமாக அடையாளம் பெறும்.

பணிப் பகிர்வற்ற சமூகமாக இது தொடர்ந்து இயங்குவது வரும் தலைமுறைக்குப்பெரும் ஆபத்தாக முடியும். இனியாவது நம் வீடுகளை ஜனநாயகப் படுத்துவோம்.

No comments:

Post a Comment