திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியசாமி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 29, 2023

திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியசாமி சிறப்புரை

 உங்கள் பயணம் வெல்லும் - நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம்
செங்கொடி உங்களோடு நின்று வாழ்த்தும்!

நாளை  ஆசிரியர் அவர்களுடைய பயணம் - ‘இந்தியா' கூட்டணியின் மகத்தான வெற்றியாக நிறைவு பெறும்!

திருச்சி, அக்.29 நாளை  ஆசிரியர் அவர்களுடைய பயணம் - ‘இந்தியா' என்ற பெயரில் அமைந்திருக்கிற இந்தக் கூட்டணியின் மகத்தான வெற்றியாக நிறைவு பெறும் என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி அவர்கள்.

ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

கடந்த 20.10.2023 அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பெருந்துறை மேனாள் சட்டமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பெரியசாமி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேரன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்கள் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தார்கள்.

கடந்த 4 ஆம் தேதி, இந்தத் திருச்சி மாநகரில், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாடு நடை பெறுகிற நேரத்தில், அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இங்கே  வருகை தந்த நேரத்தில், அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு, இந்தத் திருச்சி மாநகரில் உள்ள மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 18 ஆம் தேதிவரை அவர் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பி யிருக்கிறார்.

இந்தத் திருச்சி மாநகர மக்களும், மாண்புமிகு அமைச்சர் அவர்களும், வணக்கத்திற்குரிய மேயர் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர்களும், அவருடைய உடல்நலனைப் பேணி பாதுகாத்து, இல்லத்திற்கு அனுப்பி வைத்தமைக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அவர்களுக்கெல்லாம் இந்த மேடையிலிருந்து நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அய்யா வீரமணி அவர்கள், முத்தரசன் அவர்களுடைய உடல்நலனை தொடர்ந்து விசாரித்து வந்தார்கள். அய்யா கலி.பூங்குன்றன் அவர்கள் தொடர்ந்து விசாரித்து வந்தார்கள். மேலும் பல நண்பர்கள் அவருடைய நலனைப்பற்றி விசாரித்து வந்தார்கள்.

ஏன் அப்படி விசாரித்து வந்தார்கள் என்றால், திராவிடர் கழகத்தினுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறபொழு தெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்வார்கள், ‘‘நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இங்கே வந்து பேசுவதைக் காட்டிலும், அய்யாவின் மகனாக நின்று பேசுகிறேன்; இந்தக் கழகத்தின் தொண்டனாக நின்று பேசுகிறேன்'' என்று சொல்வார்.

அப்படிப்பட்ட உணர்வோடு உள்ளவர், இன்னும் 15 நாள்களுக்குப் பேசக்கூடாது; யாரும் பார்க்கக்கூடாது என்று, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மிகக் கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கின்ற காரணத்தினால், இந்தக் கழக மேடையிலிருந்து விசாரித்த அனைவருக்கும் நன்றி கூறி, அனைவரும் இன்னும் 15 நாள்கள் பொறுங்கள் என்ற வேண்டுகோளை வைக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஆசிரியர் அய்யா அவர்கள், 10 வயதில் தொடங்கிய பயணத்தை, அந்தத் தொடர் பயணத்தை 90 ஆண்டுகள் ஆன பிறகும் தொடங் குகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. இன் னொரு 90 ஆண்டுகளா குமா? அல்லது 10 ஆண்டு களில் முடியுமா? நாளையே முடியுமா? என்றெல்லாம் ஆருடங்கள் சொல்ல இய லாது.

மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி நடத்தப்படுகிற 

ஒரு ஜனநாயக நாடுதானா இது?

ஏனென்றால், நாட்டின் அரசியல் நிகழ்ச்சிப் போக் குகளைக் கவனிக்கிற பொழுது, நாம் மகிழ்ச்சி கொள்வதாக அமைய வில்லை. இந்திய ஒன்றியத் தின் தலைநகரில் நடை பெறுகின்ற காரியங்களைப் பார்க்கின்றபொழுது, இந்த நாடு மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட, மக்கள் பிரதிநிதி களால் ஆட்சி நடத்தப்படு கிற ஒரு ஜனநாயக நாடு தானா?

நம்முடைய அரசமைப் புச் சட்டம் வலியுறுத்துகின்ற படி, இது குடியரசு நாடு தானா? என்ற அச்சம் ஏற் படுகிறது.

நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், ஊட கவியலாளர்கள் வேட் டையாடப்படுகிறார்கள். எங்கெல்லாம் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆதரவு குரல் எழுப்பப்படுகிறதோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் அந்த ஆதரவுக் குரலை அடக்கி ஒடுக்குகிற ஓர் எதேச்சதிகாரம் பாசிச வகையில் வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டினுடைய அதிபரை, அராஜகத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆதரிக்கிறது!

உலக அரங்கில்கூட, இந்தியாவின் இறையாண்மைக்குக் கேடு விளைவிக்கக் கூடிய முறையில், இதுகாறும் நம்முடைய நாடு கடைப்பிடித்து வந்த அயலுறவு கொள்கைக்கு அவமதிப்பை ஏற்படுத்தக் கூடிய முறையில், இந்திய நாட்டினுடைய புகழ்மிக்க தலைவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கிய ஓர் இனவெறியை ஆதரிக்கின்ற வகையில், இஸ்ரேல் நாட்டினுடைய அதிபரை, அராஜ கத்தை ஆதரிப்பதின்மூலம் இந்த நாடு தேடிக் கொண்டிருக்கிறது.

எங்கோ ஒரு நாட்டில் இருப்பவர்களை, இங்கே இருப்பவர்கள் சதி செய்து கொன்றுவிட்டார்கள் என்று ஒரு நாடு, நம்முடைய நாட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ராஜதந்திர அதிகாரிகளை நீக்கிக் கொள்கிற கேவலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவேதான் அய்யா, 90 வயதானாலும் நாம் சோர்ந்துவிடக் கூடாது; நாம் சோர்விலாத தொடர் பயணம் செய்யவேண்டும். அந்தப் பயணமும் ஈரோட்டுப் பாதையில்தான் அமையவேண்டும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தி வருகிறார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்கூட இங்கே சொன்னார்கள், ‘‘ஓய்வுபெறும்படி, எல்லாத் தலைவர்களும் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்; நாங்கள் அதைச் சொல்ல பயப்படுகிறோம்; இருந்தாலும், நீங்கள் சொன்னதைச் சொல்லுகிறோம்'' என்று இங்கே குறிப்பிட்டார்கள்.

ஒருமுறை மன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்தரசன் அவர்களே குறிப்பிட்டார்.

ஸநாதனத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துகின்ற வரையில்...

நான் பார்த்த காட்சி, பல நாள் பட்டினி கிடந்த சிங்கம், பிடரி சிலிர்த்தால் அந்த முகம் எப்படி இருக்குமோ,  அப்படி இருக்கும். வீரமணியினுடைய கடைசி மூச்சு இருக்கும்வரை ஓய்வு கிடையாது; ‘‘நான் சிலிர்த்தெழுந்து போராடுவேன்; என்னுடைய சக்தி முழுவதையும் ஸநாத னத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி, அய்யாவின் கொள் கையை அரியணையில் ஏற்றுகிற பொழுதுதான் பயணம் நிறைவடையும்'' என்று எழுச்சி கண்டார்.

இன்றைக்கு அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவு கருத்துகளையும் பல தளத்திற்கும் எடுத்துச்செல்லவேண் டிய கடமை இருக்கிறது. அதையெல்லாம் விரிவாகச் சொல்லுவதற்கு இது உகந்த நேரமல்ல. ஆசிரியர் அய்யா விற்குக் கொடுக்கப்பட்ட வாகனங்கள் நின்றுவிட்டன; ஆனால், அய்யா நிற்கவில்லை.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது!

நாளை அவருடைய பயணம் - ‘இந்தியா' என்ற பெயரில் அமைந்திருக்கிற இந்தக் கூட்டணியின் மகத்தான வெற்றியாக நிறைவு பெறும் என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

நான் சார்ந்திருக்கின்ற கட்சியின் சார்பாக, பல நேரங்களில் டில்லிக்குச் செல்லுவது உண்டு. பல மாநிலங் களுக்கும் செல்லுவது உண்டு. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் என்ற முறையில், பல மாநிலங்களில் உள்ள தோழர்களோடு உரையாடுவது உண்டு.

முன்பெல்லாம் பெரியாரைப்பற்றிச் சொன்னால், இராமசாமி நாயக்கர் என்று சொல்லுவார்கள்; ஈ.வெ.இராமசாமி என்று சொல்லுவார்கள். அவரை அறிமுகம் செய்வதற்கே கொஞ்சம் சிரமப்படுவார்கள்.

ஆனால், இப்பொழுது டில்லியாகட்டும், கொல்கத்தாவா கட்டும், வேறு மாநிலங்களாக ஆகட்டும் - நான் அங்கே போனால், பெரியாருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் தாருங்கள், நாங்களும் படிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

பெரியார் வென்று வருகிறார்; இன்று மட்டுமல்ல, நாளையும் வெல்வார்!

ஒருமுறை ஆசிரியர் அய்யா அவர்களின் தலைமையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. மகாராட்டிரத்தில் இருந்து வந்த பேராசிரியர் ராம் பகட்டி என்ற தலைவர், ஆசிரியரோடு கைதாகி, சிறைக்குச் சென்றுவிட்டார். பிறகு, விடுவிக்கப் பட்டார்.

இப்பொழுது மராட்டியத்தில் மாநாடு நடத்த விருக்கிறோம், பெரியாரைப்பற்றி பேசவேண்டும் நீங்கள் வாருங்கள் என்று சொன்னார். பெரியார் வென்று வருகிறார்; இன்று மட்டுமல்ல, நாளையும் வெல்வார்!

அந்த வெற்றிப் பயணத்தைத்தான் நம்முடைய ஆசிரியர் தொடங்குகிறார். அப்படி தொடங்குகின்ற வெற்றிப் பயணத்தை, அரசியலில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள் - எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் - மேடு பள்ளங்கள் அத்தனையையும் தாண்டி, மகத்தான சாதனை யாளராக, தமிழ்நாட்டின் அடையாளமாக நிற்கின்ற நம்முடைய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் நேரு அவர்களின் கைகளில் பெற்றிருக்கின்ற பரப்புரை பயண ஊர்தியின் சாவி, கண்டிப்பாக வெற்றிப் பயணச் சாவியாக அமையும்; இந்த வாகனம் வெற்றி தருகிற வாகனமாக அமையும் என்கிற உறுதியான நம்பிக்கையோடு, நான் கர்ணனைப்பற்றி படித்திருக்கிறேன்; பார்த்ததில்லை;  பார்ப்பதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால், இங்கே 40 கர்ணன்கள் இருக்கிறார்கள். நீங்கள் கொடுத்த தொகை என்பது, உங்களுக்கு சிறிய தொகையோ, பெரிய தொகையோ - ஆனால், அது சமுதாயத்திற்குச் செய்த தொண்டு இருக்கிறதே, அது சாதாரண தொண்டல்ல. அது மிகப்பெரிய தொண்டாகும். ஆகவே, உங்களை வாழ்த்த நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம்  செங்கொடி உங்களோடு நின்று வாழ்த்தும்!

அதுபோலவே, ஓட்டுநராக 26 ஆண்டுகாலம்; நிழற்பட கலைஞராக 28 ஆண்டுகாலம்; இந்த இயக்கமே உண் டென்று வாழ்கின்ற தொண்டர்களை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனதார வாழ்த்தி, உங்கள் பயணம் வெல்லும் - நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம் செங்கொடி உங்களோடு நின்று வாழ்த்தும் என்று கூறி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.

- இவ்வாறு பெருந்துறை தொகுதியின் மேனாள் சட்டமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பெரியசாமி உரையாற்றினார்.

No comments:

Post a Comment