அறிவிலோ - வீரத்திலோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

அறிவிலோ - வீரத்திலோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமா?

*தந்தை பெரியார்

சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய ‘விதவா விவாக விளக்கம்’ என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப்பிராயத்தை எழுதுமாறு எழுதி யிருந்தார். விதவாவிவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய சமயமும்  அவகாசமும் வாய்த்திலாமையால் அஃதினை ஊன்றிப் படித்து விரைவில் எனது கருத்தினை வெளியிடவியலாது போயிற்று, பிறகு அந்தப் புத்தகம் முடிவு பெற்று புத்தக ரூபமாய்க் கிடைக்கப் பெற்றேன். அஃதினை அமைதியுடன் படித்து எமக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன்.

அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண் களுக்குள் ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி பெண்டிரிலும் சரி, முறையே அறிவாளிகளும், ஆண்மை யுடையோரும் அறிவிலிகளும், பேடிகளும் உண்டு. இவ்வாறிருக்க, திமிர் படைத்த இந்த ஆண் உலகம் சாந்த குணபூஷணமான பெண்ணுலகைத் தாழ்த்தி அடிமைப் படுத்தி வருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.

 இந்து மத ஆண் உலகம் தங்களது பெண் உலகத்தின் மாட்டுப் பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றில் இங்கு நாம் விதவைகளைப் பற்றி மட்டும் கவனிக்க வேண்டி யுள்ளது.

உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும், தன் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த - எழில் பொருந்திய இளஞ் சகோதரிகளையே தன் மனத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றான். ஆயின் ஒரு பெண் மகள் தன் கொழுநனை இழந்துவிட்டால், அவள் உலக இன்பத்தையே சுவைத்தறியாதவளா யிருப்பினும் தன் ஆயுட்கால முற்றும் அந்தோ தன் இயற்கைக் கட்புலனை இறுக மூடி, மனம் நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகிறது. என்னே அநியாயம்!

 நம் நாட்டில் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாகாதென்னும் வழக்க மிருப்பது பாரபட்சம் நிரம்பிய கொடுமையான செயலாகும். தன் மனைவியை இழந்த கிழவன் மறுமணம் செய்து கொள்ளலாமென்றும், தன் கணவனை இழந்த மகப்பேறு பெறாத இளமங்கை மறுமணம் செய்து கொள்ளலாகாதென்றும் கூறுவது நடுநிலைமை கொண்ட அறச்செயலாகாது.

விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் கற்புக்குப் பங்கம் விளைப்பதாகும் எனக் கூறினால் அது பொருந்தாது. விதவைகளை மறுமணம் செய்விக்கா திருத்தலினாலேயே அவர்கள் கற்பழிந்து மாய்கின்றனர். காமச்சுவை கருதும் இளங்கைம்பெண்கள் படிற்றொழுக் கத்தில் வீழ்ந்து, அதனால் கருப்பந்தரித்து இரண்டோர் திங்களுள் சிசுஹத்தி தோஷத்திற்கு உள்ளாகின்றார்கள். இப்பாவம் யாரைச் சாரும்? விதவைகளை மறுமணம் செய்து கொள்ளல் ஆகாதென்று கட்டாயப்படுத்தி வரும் பெற்றோர்களையே சாரும். மறுமணம் விரும்பாத பெண்களைத் தவிர்த்து ஏனைய கைம்பெண்களுக்கு மறுமணம் செய்வித்தலே நன்று.

விதவைகளின் கலியாணத்தைப் பற்றி இவ்வாறு எழுதும் நான் எழுத்தளவோடும், சொல்லளவோடும் ஆதரிக்கின்றேனா அன்றிச் செய்கையிலும் ஆதரித்துள்ளேனா என்ற அய்யம் அன்பர் களுக்குத் தோன்றலாம். இதன் பொருட் டேனும் எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன்.

 நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும், வைணவ சம்பிரதா யத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும் பம். இப்படியிருந்த போதிலும் என்னுடைய 7-ஆவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு, தாழ்வு கற்பித்தலையும், ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு யாரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும்  சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னை, இளம் போதிலிருந்தே எங்கள் வீட்டு ஆக்குப் புரைக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. நான் தொட்ட சொம்பை எனது தகப்பனார் தவிர மற்றையோர் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள். எங்கள் குடும்ப ஆச்சார அனுஷ்டானங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் என்னைப் பார்த்துச் சாந்தியடைந்து விடுவார்கள். “நாயக்கருக்கு அவர்கள் ஆச்சாரத்திற்கேற்றாற் போல்தான் ஒரு பிள்ளை என்றாலும் பிள்ளை நவமணியாய்ப் பிறந்திருக்கிறது” என்று சொல்லுவார்கள். என்னுடைய 16-வது வயதிலேயே பெண் மக்களைத் தனித்த முறையில் பழக்குவதும் அவர் களுக்கெனச் சில கட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய் வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்று நினைத்து வந்தேன்.

இவ்வாறாக, என் தங்கை தனது இளம் வயதிலேயே ஒரு பெண் குழந்தையையும், ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள். அவற்றுள் (‘அம்மாயி’ என்றழைக்கப் பெறும்) அப் பெண் குழந்தைக்கு அதன் 10-வது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கலியாணம் செய்து வைத்தோம். கலியாணம் செய்த 60-ம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13-வயதுள்ள சிறு பையன் பகல் 2 மணிக்கு விஷபேதியால் விண்ணுற்றான். அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை என்னிடம் ஓடி வந்து, “மாமா! எனக்குக் கலியாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே” என்று ஓவென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில் மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது. துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண், பெண் உள்பட சுமார் 600,700 பேர்கள் அக்குழந்தையையும் என்னையும் பார்த்த வண்ணமாய் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடித்தனர். எனக்கும் அடக்க வொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால் கீழே கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்து தூக்கும் போதே அதற்கு மறுபடியும் கலியாணம் செய்து விடுவது என்கிற உறுதியுடனேயே தூக்கினேன்.

பிறகு அந்தப் பெண் பக்குவமடைந்த ஒரு வருஷத்திற்குப் பின் அதற்குக் கலியாணம் செய்ய நானும் எனது மைத்துனரும் முயற்சி செய்தோம். இச்செய்தி எனது பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டவே அவர்கள் இதைத் தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்து விட்டது போலக் கருதி பெரிதும் கவலைக்குள்ளானவர்களாகி நாங்கள் பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் எனது மைத்துனரின் இரண்டாந்தாரம் மைத்துனரைப் பிடித்துச் சரிசெய்து, எவரும் அறியாவண்ணம் பெண்ணையும் மாப்பிள்ளையை யும் சிதம்பரத்திற்கழைத்துச் சென்று அங்கு கோயிலில் கலியாணம் செய்வித்து ஊருக்குக் கூட்டி வந்தனர். ஆனால் நான் அங்கு போகாமல் ஊரிலேயே இருக்க வேண்டிய தாயிற்று. ஏனெனில், அவர்கள் போயுள்ள செய்தியைச் சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது மாப்பிள்ளையைத் தடை செய்து விடுவார்களோ என்கிற பயத்தால், நான் ஊரி லிருந்தால் கலியாணத்திற்காக வெளியூருக்குப் போயி ருக்கிறார்களெனச் சந்தேகமிருக்காது என்கிற எண்ணங் கொண்டேயாகும். இக் கலியாணத்தின் பலனாக இரண்டு,  மூன்று வருட காலம் பந்துக்களுக்குள் வேற்றுமையும் பிளவும் ஏற்பட்டு ஜாதிக் கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிபட்டுப் போயின. 

எவ்வளவோ இடருக்குள்ளகப்பட்டு அக்கலியாணத்தை முடித்து வைத்தோம். ஆனால் கடைசியில் அந்த இரண்டாவது கணவனும் மரிக்கவே விதவா விவாக விஷயத்தில் தீவிரமாகத் தலையிட வேண்டுமென எனக்கிருந்த கருத்துக்குப் பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாயிற்று.

விதவைகளின் விஷயம் நினைவிற்கு வரும் போதும், நேரில் காண நேரும் போதும், உலக இயற்கை எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதல்லாமல் வேறல்ல வென்றே முடிவு செய்வேன். நமது இந்து சமூகம் எந்தக் காலத்தில் எவருடைய ஆதிக்கத்தில் கட்டப்பட்டதோ, அன்றி மதமில்லாமல் முறையில்லாமலிருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் சுயநலத் திற்குத் தக்கபடித் திருப்பிக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும் பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து மதமும் இந்து சமூகமும் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து.

அரசியல் என்றும் சமூகவியல் என்றும் ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும் பெண்மக்கள் முன்னேற்றமென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற்றைத் தங்களது வாழ்வுக்கும், கீர்த்திக்கும், சுயநலத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளுவோராக இருக் கிறார்களே தவிர, உண்மையில் அக்கருத்துக் கொண்டு உழைப்பவர்கள் அரிதினுமரிதாகி விட்டனர் என்று சொல்லுவதை மன்னிக்க வேண்டுகிறேன். அன்றியும் இவ்விதத் துறைகளிலும் சீர்திருத்தங்களிலும் பாடுபடு பவர்களாய்க் காணப்படுவோரில் பெரும்பாலோர் தாங்கள் செய்வது சரியென்ற தீர்மானம் தங்களுக்கேயில்லாமல் உலகமெச்சலுக்குச் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். பெண்மக்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் வீட்டுப் பெண்களைப் படுதாவுக்குள் வைத்துக் கொண்டும், விதவா விவாகத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளைக் காவல் போட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்களே தவிர உண்மையில் ஒரு சிறிதும் தங்கள் நடவடிக்கையில் காட்டுவதில்லை. இதன் காரணம் என்னவெனப் பார்க்கும் போது, பெண்மக்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் அடிமை, நமக்கடங்கி னவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது என்றே நினைக்கிறோம். இதனாலேயே அவர்களை விலங்குகளைப் போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரங் கொடுப்பது என்கிற விஷயத்தை நினைக்கும் போது செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையைச் செய்ய நினைக்கிறது போலவே தோன்றுகிறது. அதனால் மனித சமூகத்தில் சரி பகுதியான எண்ணிக்கைக்குப் பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பதுதானே இதன் பொருள்? ஆடவருக்குப் பெண்டிரை விடச் சிறிது வலிமை அதிகமாக ஏற்பட்ட குற்றந்தானே இம்மாதிரி ஒரு சரி சமமான சமூகத்தை சுதந்திரமில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ் டிக்க வேண்டியதாயிற்று. இந்தத் தத்துவமே வரிசைக்கிரமமாக மேலோங்கி எளியோரை வலியோரால் அடிமையாக்கச் செய்கிறது.

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.

உலகிலேயே மிகப் பெரிய சீர்திருத்தக்காரரான  காந்தியார் இந்து விதவைகளைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் சென்ற ஆண்டு ‘நவஜீவன்’ பத்திரிகையில் காந்தியார் எழுதியிருக்கும் விஷயத்தைக் கவனித்தால் விதவைகளின் விடுதலை சம்பந்தமாய் காந்தியார் எவ்வளவு தூரம் உழைக்கிறார் என்பது புலனாகும். அக்கட்டுரையின் ஒரு சில பாகமாவது:-

“பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பது போன்று இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றும் இல்லை என்பது எனது திடமான நம்பிக்கை. விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகாது. பலாத்காரத்தினால் அனுஷ்டிக்கச் செய்யும் எவ்விதச் செயலும் அறமாகாது. பலாத்காரத்தினால் நடத்தும் விதவை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒரு பால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது, அவ்விதமாகச் சொல்லுவோரின் கொடூரச் சுபாவத்தையும் அறியாமையையுமே விளக்குகிறது” என்று எழுதிவிட்டு விதவைகள் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென் பதாகத் தன் உள்ளன்போடும் ஆவேசக் கிளர்ச்சியோடும் மகாத்மா கூறிய மணி வாசகங்களில் ஒரு சிலவற்றைக் கவனிப்போம்.

“அமைதியுடன் தங்களுடைய துக்கத்தைச் சகித்துக் கொண்டு தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான இதிரீ, புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால் தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் உடனே விவாகம் செய்து கொள்ளட்டும். அதுவரையில் யோக்கியமான புருஷனை அடைய தமயந்தி, சாவித்திரி முதலியவர்கள் போல் தவம் செய்வதே ஏற்ற வழியாகும் விதவைகளின் போஷகர்கள் இவற்றைச் சரிவரக் கவனியாவிடில் பின்னால் பச்சாதாபப் படுவார்கள். ஏனெனில் நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரத்தையே பார்த்துக்கொண்டு வருகிறேன். விதவை களைப் பலாத்காரமாய் தடுத்து விதவைத் தன்மையை அனுஷ்டிக்கச் செய்வதால் விதவைகளுக்காவது, குடும்பத் திற்காவது அல்லது விதவா தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்துவங்களும் நசிந்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக் கொண்டி ருக்கிறேன். பால்ய விதவைகளே! நீங்களும் உங்களைப் பலவந்தப்படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் இதிரீ, புருஷ வர்க்கங்களும் இதை அறிவீர்களாக” என்று எழுதியுள்ளார்.

  விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜராம் மோகன்ராய், ஈசுவர சந்திர வித்யாசாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி வீரேசலிங்கம் பந்துலு, மகாதேவ கோவிந்தரானடே, வேமண்ணா, சர். கங்காராம்  முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர். இது போழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பாஞ்சாலத் தலைவர்கள் பலர் இறங்கி உழைத்து வருகின்றனர்.

நமது நண்பர் திருசிரபுரம் திரு.சி.பி.இராஜகோபால நாயுடு விதவைகளை ரட்சிப்பது என்னும் பரோபகாரத் துறையில் இறங்கி, ‘ஆச்சாரம்’ ‘வழக்கம்’ என்று உளறும் வைதிகப் பைசாசங்களின் பலமான எதிர்ப்புக்கிடையே நுணுகிய ஆராய்ச்சியுடனும் அனுபவத்துடனும் “விதவா விவாக விளக்கம்” என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதில் நம்நாட்டுப் பெண் மக்களுக்கு இருக்கும் கஷ்டமும் கொடுமையும், அவர்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படும் அபகீர்த்தியையும், விதவைத் தன்மையைக் காப்பாற்றும் பொருட்டு பெரிய பெரிய இழிச்சொல்லையும் சகித்துக் கொண்டிருக்கும் சாதனையையும், விதவைத் தன்மையைக் காப்பாற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வித அபகீர்த்தி நேருகிறபடியால் இது உலக வழக்கம் என்று சமாதானப்படுத்திக்கொள்ளும் தன்மையையும் எவ்வளவு தைரியமாயும் தெளிவாயும் அனுபவமாயும் தெரிவிக்கக் கூடுமோ அதற்கும் மேலாகவே அனைவரும் சரி என்று ஒப்புக்கொள்ளத்தக்க வண்ணம் விவரித்து எழுதி யிருக்கிறார். இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் எவ்வளவுதான் ‘ஆச்சாரம்’, ‘பழக்கம்’, ‘வழக்கம்’ என்னும் மூடநம்பிக்கையில் ஈடுபட்ட கல் நெஞ்சர்களாயிருந்தாலும் அவர்கள் மனதை இளக்கி விதவைகள் பால் கருணை காட்டும்படி செய்து விடுமாதலால், புத்தகம் சிறியதாயிருப்பினும் உலகிற்குப் பயன்படக் கூடிய வகையிலிருப்பதால் இதைப் பெரிய நூல் என்றே கூறவேண்டும். இப்புத்தகத்தால் திரு.நாயுடு நம் நாட்டிற்குப் பெருந் தொண்டு செய்தவராகிறார். இதுபற்றி திரு.நாயுடு அவர்களுக்கு நமது நாடும், இந்து மதமும், பெண்டிருலகமும் நன்றி  செலுத்தப் பெரிதும் கடமைப் பட்டுள்ளது.

- குடிஅரசு -  நூல் மதிப்புரை - 22.08.1926


No comments:

Post a Comment