தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்த விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்த விமர்சனம்

ஒரு தெளிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட 'ஒருவரால் தான் இந்த மாதிரி ஒரு ஆழ்ந்த கருத்து செறிவு உள்ள நூலை எழுத முடியும்!!

பெண் ஏன் அடிமையானாள்? : தந்தை பெரியார்

எனக்கு அடிக்கடி ஒரு பெருத்த சந்தேகம் எழுவதுண்டு. பொதுவாழ்க்கையில் இருக்கும் நிறைய ஆளுமைகள் தங்கள் பெயருக்கு முன்னால் ஒரு டாக்டர் பட்டம் வாங்கிப் போட்டுக் கொள்வதை பார்த்திருக்கிறோம். தகுதியுடையோர் சிலர் தகுதியற்றோர் பலர் எனினும் அதை நாம் பெரிதாக கருதவில்லை. ஆனால் உள்ளபடியே அகிய உலக அளவில் முன்வரிசையில் வைக்கத்தக்க பழுத்த சிந்தனையாளர் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ஏன் வழங்கப்படவில்லை. அவரது இந்தப் பெண் ஏன் அடிமையாளாள் என்கிற ஒரு நூலின் பத்து அத்தியாயங்களும் தனித்தனியே ஒரு முனைவர் பட்டம் வழங்க தகுதியானவை என்பதை மறுக்க இயலுமா?

கற்பு

இந்த ஒரு சொல்லை வைத்து பூச்சாண்டி காட்டியபடியே தானே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தச் சொல்லின் ஆணிவேர் வரை சென்றும் மாற்று மொழியில் உள்ள இணைச் சொற்களின் வழி நின்றும் ஆய்ந்து பார்த்தவரையில் எங்குமே இந்த வார்த்தை பிரத்தியேகமாக பெண்களை மட்டும் குறிக்கும் என்கிற தகவல் இல்லாதபோது மோசடியாக இதனை பெண்களை மய்யப்படுத்தி குறிக்கும் வார்த்தையாக மாற்றியது ஆரிய கைங்கர்யம் என்று "பதிவிரதை" என்கிற வார்த்தை கொண்டு ஓங்கி அடிக்கிறார். மேலும் ஆண்களை கற்புடையவர்கள் என்பதற்கு தனி வார்த்தைகள் இல்லாமல் இருப்பதற்கு ஆணாதிக்கம் அன்றி வேறு காரணம் இல்லை என்கிறார்.

வள்ளுவரும் கற்பும்

வாழ்க்கைத் துணைதலம் மற்றும் பெண்வழிச் சேறல் என்ற அதிகாரங்களில் வரும் குறட்பாக்களின் பொருள் வழி வள்ளுவரையும் "அவர் ஒரு வேளை பெண்ணாக இருந்திருந்தால் இந்த வகையில் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பாடல் எழுதியிருப்பாரா என  கேள்வி எழுப்பவும் தவறவில்லை. "பெண்வழிச் சேறல்" என்ற அதிகாரத்தில் "இமையாரின் வாழினும்" எனத் தொடங்கும் பாடல் மனைவிக்கு அஞ்சுபவன் ஆண்மையற்றவன் என்று கூறும் அதே வேளை கணவன் காலடியை தொழுது நிற்பவள், பெய் என்றதும் மழை பெய்யும் என்றல்லவா காலடியை தொழுது கூறுகிறார்.

காதல்

கண்டதும் காதல், காணாமலே காதல் என்றெல்லாம் கலர் கலராக கதைகளைக் கட்டி காதல் என்கிற ஒன்றைப் பற்றி ஒரு தெய்வீக பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தனது கைத்தடியால் அந்த பிம்பத்தை "டமார்" என்று உடைத்து நொறுக்குகிறார். விக்ரமன் பாணி "பூ ஒரு முறைதான் பூக்கும் என்பதையெல்லாம் முற்றாக  நிராகரிக்கிறார். காதல் என்பது நிலையில்லாதது - யார் மீது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். மேலும் அது மாறாத ஒன்று அல்ல என்கிறார். இது காதல் அல்ல, அது காதலுக்கு விரோதம், இது காம இச்சை. இது விபச்சாரம் என்றெல்லாம் காதலை கூறி அடக்குமுறைக்கு முயற்சி நடப்பதால் காதல் குறித்தும் இந்த ஆய்வில் எழுதிச் சென்றிருக்கிறார்,

கல்யாண விடுதலை

அன்பு மற்றும் புரிதலில் பேதம் ஏற்படுகையில் காதலில் இருந்து விடுவித்துக் கொள்ள அஞ்சக் கூடாது என்று போன அத்தியாயத்தில் கூறிய பகுத்தறிவு பகலவன் சேர்ந்து வாழ இயலாத ஒரு குழலில் பெண்கள் கையில் மட்டும் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்" என்ற பழமொழியை திணித்து விட்டு சமூகம் வாளாவிருப்பதை பெரியார் ஏற்கவில்லை. பொருத்தப்பாடு இல்லாத குழலில் கல்யாண விடுதலை பெற்று இருவரும் பரஸ்பர சுதந்திர தன்மையுடன் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளக் கடவது என்கிறார்.

மறுமணம் தவறல்ல

மணமுறிவு செய்து கொண்ட ஒரு பெண் தனக்கு பொருத்தமான ஒரு துணை கிடைக்கும் போது செய்து கொள்ளத்தான் வேண்டும். பொருந்தாத வாழ்க்கையை சகித்துக் கொண்டு சமூக சுட்டுப்பாட்டையும் மாண்பையும் பெண்களைக் கொண்டு தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு ஆண்கள் மட்டும் இஷ்டத்திற்கு செயல்படும் பித்தலாட்டத்தை கண்டிக்கிறார்.

விபச்சாரம்

விபச்சாரத்தைப் பொறுத்தவரை இதில் ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப் பட்டிருந்தாலும் மொத்த பழிப்புக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகிறவர் பெண் தான். (விபச்சார வழக்குகளில் கூட பெண்களைத் தான் காவல்துறை கைது செய்கிறது) ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் கூடும் பெண்களை விளிப்பதற்கு இந்தச் சொல்லாடல் இழிவாக பயன்படுத்தப்படும் அதே வேளை ஆண்களின் பல பெண்கள் சேர்க்கை வீரத்தின் கம்பீரத்தின் ஆண்மையின் அடையாளமாக விதந்தோதப்பட்டு வந்துள்ளது. "தேவிடியா" என்கிற வார்த்தை மிகப் பிரபலமாக இன்றளவும் புழக்கத்தில் இருக்கும் வசைச் சொல், ஒரு பெண்ணின் தூய்மையை கேள்விக்கு உள்ளாக்க பயன்படுத்தப்படுகிறது. அதே போல ஆண்களைக் கூறி வசை பாட முடியுமா? அப்படிக் கூறினால் அதை பாராட்டாக எடுத்துக் கொள்ளும் கண்றாவியான சூழல் தானே சமூகத்தில் இன்றளவும் உள்ளது. 

விதவைகள் நிலை

அந்தக் காலத்தில் பதினைந்து வயதுக்குள்ளாக திருமணம் செய்து கொண்டு விதவை நிலையடையும் பெண்கள் குடும்ப கவுரவம் மற்றும் நம்பிக்கை என்கிற பித்தலாட்டங்களால் தங்கள் வாழ்க்கையையே வெறுமையாக கழிப்பது குறித்து மிகுந்த சினமும் கவலையும் கொள்கிறார். காந்தியாரும் இந்த நிலை ஒழிய வேண்டும் என்று தனது பத்திரிகையில் எழுதியதை மேற்கோள் காட்டி மறுமணம் தவறல்ல என்கிறார். நம்பிக்கைகளை காரணமாக காட்டி ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையையே வெறுமையாக்குவது முற்றிலும் தவறு என்கிறார்.

சொத்துரிமை

இது குறித்த சட்டம் இயற்றப்பட்ட போது "எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம்" என்று பெண்களை வைத்தே முழக்கம் போட வைத்த வெட்க கேடு அரங்கேறி இருக்கிறது. அதற்கெல்லாம் பல  ஆண்டுகளுக்கு முன்பே பெண் ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றால் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டாக வேண்டும் என்றும் இதற்கு முன்னோடியானதொரு சட்டம் மைசூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டி கூறுகிறார். ஆனால், சங்கர மடமோ "அவாளுக்கு சொத்துலே பங்கு கொடுத்தா இஷ்ட்டப்பட்டவாள இழுத்துண்டு ஓடத்தான் போறா என்ன பண்றது ஓய் கலி முத்திடுத்து" என்று அங்கலாய்த்தது வரலாறு.

கர்ப்பத்தடை

பெண்களை பிள்ளை பெற்றுப் போடும் கருவியாக கருதிய நிலை இருந்த அந்தக் காலகட்டத்தில் கர்ப்பத்தடை என்கிற வார்த்தையை உச்சரித்தாலே பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டது. அப்படி செய்வது தெய்வ நிந்தனையாக கருதப்பட்டது. கர்ப்பத்தடை விஷயத்தில் முற்போக்கு சிந்தனையாளர் முத்துலட்சுமி அம்மையார் தனக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இன்று சர்வ சாதாரணமாக நடக்கும் கர்ப்பத்தடை அன்றைய முற்போக்கு சிந்தனையாளர் ஒருவரே தவறு என்று கருதிய விஷயம் பெரியாரால் முன்மொழியப் பட்டிருக்கிறது என்றால் அவரது தொலைநோக்கு பார்வை எவ்வளவு விசாலமானதாகவும் வியப்புக்குரியதாகவும் இருந்திருக்கிறது.

பெண் விடுதலைக்கு "ஆண்மை" அழிய வேண்டும்

எந்த ஒரு ஆணும் பெண் விடுதலைக் காக முழுமையான ஈடுபாட்டுடன் போராடமாட்டான். எனவே பெண்கள் தாங்களே தங்கள் விடுதலைக்காக துணிந்து போராட வேண்டும். பெண்கள் தங்களை ஆண்களை விட கீழானவர்கள் என்று எண்ணிக் கொள்வது பெரும் பிழை என்று கடிந்து கொள்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் பிள்ளை பெற்றுக் கொள்ளும் வேலையினால் ஆண்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்த வேண்டும். இந்த சமத்துவமற்ற சமுதாயம் பெருகவில்லை என்றால் என்ன கேடு? என்று அறச் சீற்றத்தோடு முடிக்கிறார்.

பாலின சமத்துவம் சார்ந்து பெரியார் கூறிய பல விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால் அவர் அது குறித்து கருத்துகளை வெளியிட்ட காலகட்டத்தில் நிலவிய பொது சமுதாய சிந்தனைப் போக்கை கவனித்தோம் என்றால் பெரியாரின் கருத்துகள் எவ்வளவு புரட்சிகரமானவை என்பது விளங்கும், பாலின சமத்துவம் சார்ந்த சிந்தனையில் முன்னோடியாக இருக்கும் இந்த "பெண் ஏன் அடிமையானாள்?" என்கிற ஆய்வு நூல் ஆயிரம் டாக்டர் பட்டங்களுக்கு தகுதியானது என்றால் மிகையில்லை.

(கட்டுரையாளர்: அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்) 

நன்றி: ஓபிசி வாய்ஸ், அக்டோபர் 2023

No comments:

Post a Comment