ஒரு மாதத்தில் 16 நாட்கள் விடுமுறையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

ஒரு மாதத்தில் 16 நாட்கள் விடுமுறையா?

அக்டோபர் மாதம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத விழா நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களுடன் சேர்த்து மொத்தம் 16 நாட்களை விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அதேபோல், மகாலயத்தை (Mahalaya) முன்னிட்டு அக்டோபர் 14-ஆம் தேதி வங்கிகள் மூடப்படும். மேலும் அக்டோபர் 18ஆம் தேதி கதிபிஹு (Kati Bihu) விழாவை முன்னிட்டு அசாமில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

சில நாட்களை அனைத்து வங்கிகளுக்கும் அல்லாது சில மாநில வங்கிகளுக்கு மட்டும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. ஆனால் காந்தி பிறந்த நாள், மஹாலயா, கதி பிஹு, துர்கா பூஜை, தசரா, லக்ஷ்மி பூஜை, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆகிய நாட்களில் அக்டோபர் மாதத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தசரா போன்ற பல விழாக்களின் காரணங்களால் அக்டோபர் மாதம் பல வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் தேசிய விடுமுறை நாட்களிலும், உள்ளூர் விழாக்களுக்கான பிராந்திய விடுமுறை நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 2023க்கான வங்கி விடுமுறை நாட்கள்:

1. அக்டோபர் 2 (திங்கட்கிழமை) : காந்தி ஜெயந்தி

2. அக்டோபர் 14 (சனிக்கிழமை) : மஹாலயா - கொல் கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

3. அக்டோபர் 18  (புதன்கிழமை) : அசாமில் கதிபிஹு - வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

4. அக்டோபர் 21 (சனிக்கிழமை) : துர்கா பூஜை (மகா சப்தமி) - திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் வங்காளத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

5. அக்டோபர் 23 (திங்கட்கிழமை) : தசரா (மகாநவமி) /ஆயுதபூஜை/துர்கா பூஜை/விஜய தசமி- திரிபுரா, கருநாடகா, ஒரிசா, தமிழ்நாடு, அசாம், ஆந்திரா, கான்பூர், கேரளா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

6. அக்டோபர் 24 (செவ்வாய்க்கிழமை): தசரா  (விஜய தஷ்மி)/துர்கா பூஜை- ஆந்திரா, மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப் பட்டிருக்கும்.

7. அக்டோபர் 25 (புதன்கிழமை): துர்கா பூஜை (தாசைன்) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

8. அக்டோபர் 26 (வியாழன்): துர்கா பூஜை (தாசைன்) சேர்ப்பு நாள் - சிக்கிம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

9. அக்டோபர் 27 (வெள்ளிக்கிழமை): துர்கா பூஜை (தாசைன்) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

10. அக்டோபர் 28 (சனிக்கிழமை): மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை - வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

11.  அக்டோபர் 31 (செவ்வாய்க்கிழமை): சர்தார் வல்ல பாய் படேலின் பிறந்தநாள் - குஜராத்தில் வங்கிகள் மூடப் பட்டிருக்கும்.

இப்படி ஒரே மாதத்தில் இத்தனை நாட்கள் விடுமுறை என்று எந்த நாட்டிலாவது உண்டா?

மத விழாக்கள் என்ற பெயரில் ஏராளமான விடுமுறை நாட்கள். மதம் என்பது அரசுக்குச் சம்பந்தமில்லாதது. யாருக்காவது மத விழாக்கள் தேவை என்றால் சம்பந்தப் பட்டவர்கள் மட்டுமே விடுப்பு எடுத்துச் செல்லலாமே! மத விழாக்களுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் வீட்டில் பேன் குத்திக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமா?

ஒரு மாதத்தில் மட்டும் 16 நாட்கள் விடுமுறை என்றால் அதனால் ஏற்படக் கூடிய பொருளாதார இழப்பு எத் தகையது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

மத நம்பிக்கை மக்களின் பொருளாதாரத்திலும் புகுந்து விளையாடுவதை அனுமதிப்பது - பொறுப்பற்ற செயலே!

No comments:

Post a Comment