இஸ்ரேலில் இருந்து 147 பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளனர் அயலக தமிழர் நலத்துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

இஸ்ரேலில் இருந்து 147 பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளனர் அயலக தமிழர் நலத்துறை தகவல்

சென்னை, அக்.20- இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தமிழ்நாடு திரும்பியுள்ளதாக அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அத்துறை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டன.

அவர்களுடன் அயலகத் தமிழர் நலத்துறை மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியப்பட்டன. அதன் அடிப்படையில், இதுவரை 4 கட்டங்களாக டில்லி வந்த 98 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டு, இல்லங்களுக்கு அனுப்பப் பட்டனர்.

இந்நிலையில், 17.10.2023 அன்று நள்ளிரவு இஸ்ரேலில் இருந்து ‘ஆபரேஷன் அஜய்' மூலம் புதுடில்லி வந்தடைந்த 23 தமிழர்கள் தமிழ்நாடு அரசால் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப் பட்டது, கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த 4 பேரை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசின் செல வில் ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தார்.

மேலும் சென்னை விமான நிலையம் வந்த 17 பேரை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோன்று மதுரை விமான நிலையம் வந்த 2 பேர் மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, இஸ்ரேலில் இருந்து 121 பேர் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவி லும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு அயலக தமிழர் நலத்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment