சென்னை, அக்.22- கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பில் லேசர் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2023இல் ஆகஸ்டு மாதம் முடிய 8 மாதங்களில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண் ணிக்கை 2023இல் ஆகஸ்டு மாதம் முடிய 8 மாதங்களில் 19 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகளும், முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் 200 பேர் அமரும் வகையிலான 2 அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணியும், மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக தனி யார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான ஒளிரும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குற்றாலம், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர் வீழ்ச்சி, தூத்துக்குடி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா மய்யங்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
-இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment