புதிய நாடாளுமன்றத்திற்கு சாமியார்கள் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை இதுதான் ஸநாதனமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

புதிய நாடாளுமன்றத்திற்கு சாமியார்கள் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை இதுதான் ஸநாதனமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மதுரை, செப்.21 புதிய நாடாளுமன்றத்துக்கு சாமியார்களை அழைத்தார்கள். குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. அதுதான் ஸநாதனம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.9.2023) நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20ஆம் தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற் றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர் காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

ஒரு மாநாடு எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக் காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞ ரணியின் 2-ஆவது மாநில மாநாடு அமையும். இந்த மாநாட்டில் இளைஞரணியினர் உள்பட மூத்த முன்னோடிகள் அனை வரும் திரளாக கலந்து கொண்டு இளைஞரணி மாநாட்டை வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

மேனாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று (20.9.2023) நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதுரைக்கு நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரிடம் நீங்கள் நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பான ரகசியம் என்ன? என்று கேளுங்கள் என கூறியுள் ளார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கோரி ஒரு செங்கலை மட்டும் வைத்து சென்றீர்கள். அந்த செங்கலையும் நான் எடுத் துக்கொண்டு வந்து விட்டேன்.

நீங்கள் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கும் ரகசியத்தை சொல்லுங்கள். நீட் தேர்வை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டு இருக் கிறோம். நீட் தேர்வுக்கு இது வரை 21 பேர் பலியாகி உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி. ஸநாதனம் குறித்த எனது பேச்சை பா.ஜ.க.வினர் திரித்து பரப்பினர்.

ஸநாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துகளை அ.தி.மு.க. வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழ் நாட்டில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், நாடாளு மன்றத்திற்கும் என்ன சம்பந்தம்?

மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்க வில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந் தவர் என்பதாலும் அழைக்க வில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு.

19.9.2023 அன்று கூட புதிய நாடாளுமன்ற விழாவில் குடிய ரசுத் தலைவரை  அழைக்க வில்லை. ஆனால் அதற்கு சம்பந் தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment