‘விஸ்வகர்மா யோஜனா' குலக்கல்வியை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

‘விஸ்வகர்மா யோஜனா' குலக்கல்வியை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

*  உதயநிதி அரசியல் வாரிசு அல்ல - கொள்கை வாரிசு என்பதை நிரூபித்துவிட்டார்!

* ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டம்தான் ‘விஸ்வகர்மா யோஜனா'!

*  தொழிலுக்கு நிதி உதவி என்பது ஒரு மயக்க பிஸ்கெட், எச்சரிக்கை!

சனாதனம் என்பது சட்ட விரோதமானது! இதனை முறியடிக்க ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவோம்!

சென்னை, செப். 7  ‘விஸ்வகர்மா யோஜனா'  என்ற பெயரில் மோடி அரசு குலக்கல்வித் திட்டத்தைத் திணிக் கிறது - இதனை வீழ்த்தாவிட்டால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டாகிவிடும். இதன் சூழ்ச்சியை மக்களிடத்தில் அம்பலப்படுத்தி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நடக்கவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

நேற்று (6.9.2023) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்றிய அரசின் விஸ்வகர்மா (யோஜனா) திட்டத்தை எதிர்த்து, திராவிடர்  கழகம் ஒருங்கிணைத்து, அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

மூன்றரை மணிநேரம் நிகழ்ச்சி!

ஏறத்தாழ மூன்றரை மணிநேரம் இந்த வள்ளுவர் கோட்டத்திலே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது என்ப தற்கு - உதயநிதி அவர்களுடைய ‘பட்டினிப் போராட் டத்திற்கு' அடுத்து இதுதான் மிகப்பெரிய நிகழ்ச்சி!

இந்தியாவையே 

கலக்கிக் கொண்டிருக்கின்றது

இந்நிகழ்ச்சி ஒரு பெரிய மாநாடுபோல நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2 ஆம் தேதிதான், இந்தப் பக்கம் ஒரு முழக்கம் - அது இந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கின்றது.

உதயநிதி எங்கள் கொள்கை நிதி என்கிற அறிவு நிதி என்று சொல்லக்கூடிய அளவிற்கு எல்லோரும் பெருமையோடு நினைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை  அவர் உருவாக்கித் தந்திருக்கின்றார்.

முதற்கண் இக்கூட்டத்தில் அற்புதமான கருத்துகள் - ஒரு நல்ல மாலையாக, கருத்து மாலையாக, சிந்தனைக் களமாக ஆகி வள்ளுவர்கோட்டம் அருகே இந்தக் கூட்டம் நடைபெறுவது மிகப்பொருத்தமானது.

ஏனென்றால், வள்ளுவர்தான் சொன்னார், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று.

வள்ளுவர் கோட்டத்தை அமைத்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே சாரும்!

அதற்கு எதிரான தத்துவத்தை எதிர்த்து இந்தப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில்தான் தொடங்கு கின்றோம். இந்த வள்ளுவர் கோட்டத்தை அமைத்த பெருமை நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே சாரும்.

வள்ளுவர் கோட்டம் அமைத்து, இந்தக் கோட்டத்தைத் திறந்தபொழுது, அவருக்கு அழைப் பில்லை.

அப்பொழுது இன்றைய முதலமைச்சர், ஒப்பற்ற முதலமைச்சர், இந்தியாவினுடைய முதலமைச்சர் களிலேயே முதல் முதலமைச்சர் என்கிற பெருமைக்குரிய நம்முடைய திராவிட முதலமைச்சர் அவர்களும், நாங்களும் சிறைச்சாலைக்குள் இருந்தோம்.

இதற்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் வந்து, இந்த வள்ளுவர்கோட்டத்தைத் திறந்து வைத்தார்.

எப்பொழுதுமே வாடிக்கை நம்மூரிலே - கோவில் கட்டியவுடன், அதற்கு சம்பந்தமில்லாதவன்தான் மணியை ஆட்டிக்கொண்டு உள்ளே போவான். அவன் இதுவரையில் அந்தக் கோவிலுக்காக ஒரு செங்கல்லைக் கூட தூக்கி வைத்ததாக வரலாறு கிடையாது.

அதுபோன்று, திட்டமிட்டு வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கி, மிகச் சிறப்பாக இந்தத் தேர் மற்றவற்றை உருவாக்கிய நம்முடைய கலைஞர், அந்தத் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்பது மட்டுமல்ல; அவரது பெயர்கூட இங்கு பொறிக்கப்படவில்லை.

என் பெயர் பொறிக்காமல் இருப்பதுதான் மிகவும் முக்கியம்!

அந்த நேரத்தில், செய்தியாளர்கள் எல்லாம் கலை ஞரிடம் கேட்டார்கள், ‘‘உங்கள் பெயர் இல்லையே?'' என்று

என் பெயர் பொறிக்காமல் இருப்பதுதான் மிகவும் முக்கியம். தாஜ்மகாலுக்கு பெயரா போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.

அப்படிப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில், மிக அழகாக, நிதானமாக, அறிவுப்பூர்வமாக இங்கே நீங்கள் எல்லாம் திரண்டிருக்கின்றீர்கள். இது வேடிக்கைப் பார்க்கவந்த கூட்டமல்ல - வினையாற்றக்கூடிய ஆற்றல் உள்ள கூட்டம்.

போராளிகளையும், பாசறை வீரர்களையும் தயாரிக் கின்ற வீரர்கள் அடங்கிய கோட்டம் இது.

அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில், குறுகிய காலத்தில், நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று வந்திருக்கின்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அவர்கள் சொன்னார்; வெறும் நார் - இந்த மலர்களையெல்லாம் ஒன்றாகக்கூடிய நார்.

அதைக் கட்டவேண்டும்; முதலில் தமிழ்நாட்டில் கட்டினோம்; அதன்மூலமாக இந்தியா முழுவதும் வந்திருக்கிறது.

இன்றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டணி!

இப்பொழுது ஒரு சிறப்பு என்னவென்றால், ஓர் இயல்பான மாற்றம் சிறப்பாக வந்திருக்கிறது. அது என்ன மாற்றம் என்றால்,  கடந்த 10 ஆண்டுகளுக்குமுன், தேர்தலுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவான கூட்டணி. நம்முடைய ஒப்பற்ற தளபதி அவர்களுடைய தலைமையில் உருவான கூட்டணி. இந்தப் பகுதியிலேயே நிறைய போராட் டங்களை நாம் நடத்தியிருக்கின்றோம்; அத்துணை கட்சிகளையும் சேர்த்து - அந்த வரலாற்றுக் கூட்டணி இருக்கிறதே, அது இன்றைக்கும், நாளைக்கும், என் றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டணி - ஆயிரம் கலகங்கள் உண்டானாலும் என்கிற பெருமைக்கு என்ன காரணம்?

இப்பொழுது, தமிழ்நாட்டினுடைய திராவிட மாடலைப் பார்த்துதான், இந்தியா கூட்டணியினுடைய வளர்ச்சி, கூட்டத்திற்குக் கூட்டம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

முதலில் 14 கட்சிகள்; பிறகு 19 கட்சிகள்; இப்பொழுது 26 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளன.

இப்பொழுது திட்டங்களைத் தீட்டக்கூடிய அளவிற்கு  நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து திருமா போன்றவர்கள், இராசா போன்றவர்கள், பாலு போன்றவர்கள் எல்லாம் வழிகாட்டக் கூடிய அளவிற்கு அங்கே இருக்கின்றார்கள் என்று சொன்னால், ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் எதிரிகள்.

கலகம் மூட்டலாம், சிண்டு முடியலாம் என்பது ‘ஆரிய மாயை‘யில் அண்ணா சொன்னார், 

‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி! போற்றி!!'' என்று.

ஏதாவது துருப்புச் சீட்டு கிடைக்குமா? என்று பார்த்தார்கள்!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இவர்கள் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்தார்கள்;  ஒன்று சேர்ந்தார்கள். இந்தியா கூட்டணிக்குள் கலகம் வராதா? என்று நினைத்தார்கள்; ஒன்று சேர்ந்தவர்களைப் பிரிப்பது என்பதற்காக இப்பொழுது திட்டமிடுகிறார்கள். அதற்கு ஏதாவது துருப்புச் சீட்டு கிடைக்குமா? என்று பார்த்தார்கள்.

அதற்கு உதயநிதி அவர்களுடைய பேச்சைப் பயன்படுத்தலாமா? என்று பார்த்தார்கள்; நிச்சயம் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.

வெறும் அரசியல் வாரிசுகள் அல்ல; வெறும் பதவி வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்!

ஒரு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது; அது என்னவென்றால், அவரை நீங்கள் வெறும் வாரிசாக மட்டும் அடையாளம் காட்டினீர்கள். இப்பொழுது எங்களிடத்தில் தயாராகிறவர்கள்; வரக்கூடியவர்கள் உதயநிதி போன்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வெறும் அரசியல் வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்; வெறும் பதவி வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள் என்று காட்டக்கூடிய அளவிற்கு நிரூபித்திருக் கிறார்கள்.

நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் அவர்களுடைய தந்தையார் பேராசிரியர் நாகநாதன் என்றால், அவருக்கு முன்னால் இருந்த உறவினர்கள் திராவிட இயக்கத்தில் பூத்த மலர்கள், காய்த்த கனிகள்.

சி.பி.சிற்றரசு

சிற்றரசு என்று பெயர் யார் வைத்திருப்பார்கள்? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். இது பல பேருக்குத் தெரியாது. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில், நன்றாகக் கேள்வி கேட்பார்; நல்ல பேச்சாளர், மேலவையில் தலைவராக இருந்த சி.பி.சிற்றரசு அவர்கள்.

அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள், ‘‘நீங்கள் எந்த நாட்டிற்குச் சிற்றரசு?'' என்று கேட்டார்கள். அப்பொழுது ராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சராக இருக்கிறார்.

‘‘உங்கள் சக்கரவர்த்தி ஆளுகின்ற நாட்டில், நான் சிற்றரசாக இருக்கின்றேன்'' என்றார்.

இப்படி பதில் சொல்லித்தான் இந்த இயக்கம் வளர்ந் திருக்கிறது.  ஒரு போராட்டக் களத்திற்குரிய ஆயத்தப் பாசறையாகத்தான் இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறேன்.

நீண்ட நேரம் ஆனாலும், கடைசிவரையில் கலை யாமல் கருத்துகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சுருக்கமாக சில கருத்துகளை மட்டும் அவர்கள் சொன்னதையொட்டி எடுத்து வைக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ். என்ற 

விஷப் பாம்பு கக்குகின்ற நஞ்சு!

விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்திற்கு வேர் எங்கே இருக்கிறது என்று சொன்னால், இது திடீரென்று முளைக்கவில்லை. திட்டமிட்டே இந்த சனாதனத் தினுடைய ஒரு பகுதியாக இருக்கிற, அடித்தளமாக இருக்கின்ற ஜாதியை, ஜாதி தர்மத்தை, வருண தர்மத்தை - இங்கே இத்தனைத் தலைவர்களும் பேசினார்கள் அல்லவா - அந்த ஜாதி தருமத்தை நிலைநாட்டவேண்டும். ஆட்சி கிடைத்தாலும், வேறு எந்த ரூபத்தில் வாய்ப்புகள் வந்தாலும் நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கையாகும்.

ஆர்.எஸ்.எஸ். என்ற அந்த விஷப் பாம்பு கக்குகின்ற நஞ்சு அதுதான். அந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான், கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றியத்தில், பா.ஜ.க. என்ற அரசியல் போர்வையோடு அது நடந்துகொண்டிருக்கின்றது.

சுருக்கமாக உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனென் றால், இங்கே குழுமியிருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு, இருநூறு பேருக்குச் சமம் - தாய்மார்கள் உள்பட. தெருத் தெருவாக, வீடு வீடாக நம்முடைய எதிர்காலம் குறித்துப் பேசவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

கோல்வால்கரின் தத்துவத்தை 

மோகன் பகவத் செயல்படுத்துகிறார்!

இதோ என் கைகளில் இருப்பது ஆர்.எஸ்.எஸின் தத்துவகர்த்தா எழுதிய ‘‘ஞானகங்கை'' என்ற புத்தகம். இவர் எழுதியதை, இப்பொழுது இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், செயல்படுத்திக் கொண்டே வருகிறார்.

இவர் வெளிப்படையாகப் பேசிடும் பழக்கம் இல்லாத வர். இராஜகோபாலாச்சாரியார் மாதிரி - விஷம், விஷமாகத் தெரியவேண்டும்.

எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னதுபோன்று, இப்பொழுது இருக்கின்ற விஷத்திற்கு, நம்முடைய காலத்தில் செய்யவேண்டிய வேலை என்னவென்றால், விஷத்தில் இரண்டு வகை இருக்கிறது. அந்த விஷத் தினால் கொல்லப்பட்டவர்களது உடற்கூறு ஆய்வினை மருத்துவர்கள் செய்தால், பளிச்சென்று கண்டு பிடித்துவிடுவார்கள்.

ஆனால், இன்னொன்று, கெட்டிக்காரத்தனமாக விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது; எப்படி என்று சொன்னால், மெல்லக் கொல்லும் நஞ்சு (ஸ்லோ பாய்சன்) என்பது. அது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக அழித்துக் கொண்டு வரும். கடைசியாக  உயிர் போனவுடன், அவர் எப்படி இறந்தார் என்று சொல்லுவதற்கு மருத் துவர்கள்கூட சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஆபத்து ஏற்படுகிறது. அதைத்தான் இப் பொழுது ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி, மோடியை முன்னிறுத்தி, அடுத்த தேர்தலுக்குப் பின் னால், வாதத்திற்காக சொல்லுகிறேன், நம்பிக்கைக்காக அல்ல - ஒன்றியத்தில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும்கூட, மோடி பிரதமராக வரமாட்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவர்கள்  திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

மோடியை ‘யூஸ் அன்ட் த்ரோ' என்ற அளவிற்குத்தான் பயன்படுத்துவார்கள்!

ஏனென்றால், மோடியை ‘யூஸ் அன்ட் த்ரோ' என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பயன்படுத் தியவுடன் தூக்கி எறிவது என்ற அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

அங்கே உள்ளே ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் போகப் போக அது வெளியில் வரும். டில்லியிலியிருந்து - சில சில இடங்களில் இப்பொழுது கசிந்து கொண்டிருக் கின்றது. அதை அவர்களுடைய பிரச்சினையாக மட்டும் கருதக்கூடாது.

ஆகவே, கோல்வால்கரின் புத்தகம் இருக் கிறதே, ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்'' என்று ஆங்கிலத்தில் அதற்குப் பெயர். தமிழில் அதற்கு ‘‘ஞானகங்கை'' என்று  தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

கங்கையை சுத்தப்படுத்துவதற்கே 30 ஆயிரம் கோடிக்குமேல் செலவு. ஆனால், இன்னமும் கங்கையில் பிணங்கள்தான் மிதக்கின்றன.

விஷ உருண்டைக்கு சர்க்கரைப் பூச்சு

ஒன்றே ஒன்று சொல்கிறேன், விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எது அடிப்படை? எது முன்னோட்டம்? யார் அதற்கு வித்திட்டவர்கள்? ஏன் அது இப்பொழுது வருகிறது? ஆட்சியினுடைய கடைசி பாகத்திலாவது அதை செய்யவேண்டும்; ஆனால், நேரிடையாகச் செய்யக்கூடாது. அந்த விஷ உருண்டைக்கு சர்க்கரைப் பூச்சைத் தடவவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

விஷ உருண்டையின்மீது சர்க்கரைத் தடவினால், அது முதலில் விஷம் என்று தெரியாது.

ஆர்.எஸ்.எஸினுடைய விஸ்வகர்மா யோஜனா என்பதற்கு என்ன அடிப்படை? எங்கே வித்து இருக் கிறது? என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் புத்தகம்தான் அவர் களுக்குக் கொள்கை வழி காட்டி -ஆட்சியில் இருந் தாலும், இல்லாவிட்டாலும்.

அந்தப் புத்தகத்தில் உள்ளது என்ன?

கோல்வால்கரின் ‘‘ஞானகங்கை!''

‘‘நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதி வாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூகநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.''

இப்பொழுது புரிகிறதா? இதைக் காப்பாற்ற வேண்டுமாம்.

‘‘இந்த நால்வருண அமைப்பில், இழிநிலையையும், தவறான போக்கையும் கண்டு, அதன் ஆரம்ப கால உண்மையை நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டு, வருண அமைப்புதான் நமது கடந்த கால பாரம்பரியம் வீழ்ச்சியுற காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆகவே, இதனைக் காப்பாற்றவேண்டும்'' என்று அந்நூல் உள்ளது.

மயக்க பிஸ்கெட் சாப்பிட்டால் என்னாகும்?

இப்பொழுது சனாதனம், சனாதனம் என்று சொல் கிறார்களே, வருண தர்மத்தைக் காப்பாற்றுவதுதான் சனாதனம். அந்த சனாதனத்திற்கு அரசியலில் வாய்ப்புக் கிடைக்கும்பொழுது, அதை சட்டமாக்குவது; அதை நடைமுறைப்படுத்துவது. அதை நேரிடையாகச் சொன் னால், மக்கள் புரிந்துகொள்வார்கள். நேரிடையாக உங்களுடைய ஜாதித் தொழிலைச் செய்யுங்கள், 18 வயதிற்குமேலே போனால் என்று சொல்லாமல், அதற்கு ஒரு ஊக்கத் தொகை கொடுப்பது என்பது - உங்களுக்கு விளங்கும்படி சொல்லவேண்டும் என்றால், மயக்க பிஸ்கெட்.

ரயில் பயணத்தில் அருகே இருப்பவர் மிகவும் அக்கரையோடு, பரிவோடு கேட்பார், ‘‘பிஸ்கெட் சாப்பிடுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று. 

சரி, அவர் பரிவோடு கேட்கிறாரே என்று நினைத்து, அந்த பிஸ்கெட்டை வாங்கி சாப்பிட்டவுடன், பிஸ்கெட் கொடுத்தவர், எல்லா பொருள்களோடும் ரயிலை விட்டு இறங்கிப் போய்விடுவார்; பிஸ்கெட் சாப்பிட்டவர் மட்டும்தான் மிஞ்சுவார்.

இதுபோன்றதுதான் விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்று சொல்வது.

ஒவ்வொரு ஜாதித் தொழிலுக்குமான படம்!

இங்கே அருள்மொழி மற்றும் தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். ஒவ்வொரு ஜாதித் தொழிலுக்குமான படத்தையே வெளியிட்டு விட்டார்கள்.

தொடக்கப்பள்ளி பாடத் திட்டத்தில் படம் போட் டிருப்பார்கள். நாங்கள் எல்லாம் படிக்கும்பொழுது இருந்தது. ஆனால், இப்பொழுது அது மாறியிருக்கிறது.

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு படம் போட் டிருப்பார்கள்; இவன் வண்ணான், இவன் குயவன், இவன் துணி துவைக்கிறான், இவன் பானை செய்கிறான் என்று போட்டுவிட்டு, அய்யர் ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்று படம் போட்டு, இவர் நல்லவர் - அய்யர் என்று போட்டிருப்பார்கள்.

அப்படி ஜாதி அடிப்படையில் வந்தவுடன், குலக்கல்வித் தொழிலை ஒழித்தது இந்தத் தமிழ்நாடுதான். இந்தியாவிற்கே வழிகாட்டியது.

இராஜகோபாலாச்சாரியாரை பதவியை விட்டே விரட்டிய இயக்கம் 

திராவிட இயக்கம்!

இன்னுங்கேட்டால், உச்சந்தலையிலிருந்து கால்வரையில் மூளை என்று சொல்லப்பட்ட இராஜகோபாலாச்சாரியாரை பதவியை விட்டே விரட்டிய இயக்கம் திராவிட இயக்கம். அவரைவிட புத்திசாலிகள் அல்ல இன்றைக்கு இருப்பவர்கள்.

ஆனால், வேறு ரூபத்தில் குலக்கல்வித் திட்டம் நுழைக்கப்படுகிறது; நம்மாளே நமக்கு மயக்கம் உண்டாக்குகிறான். ஆனால், அதுதான் ஜாதி முறை, அதுதான் வருணாசிரம தர்மம் - அம்பேத்கர் அவர்கள் சொன்னதை, திருமா அவர்கள் எடுத்துச் சொன்னார்.

மற்ற இடங்களில் உள்ளபேதங்களுக்கும், நம் நாட்டில் உள்ள ஜாதி பேதத்திற்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

மற்ற இடங்களில் சமத்துவமின்மை - நம்முடைய நாட்டில், சனாதனத்தின்மூலமாக உருவான ஜாதி பேதம், ஜாதி பிரிவினை என்பது இருக்கிறதே, அது படிக்கட்டு ஜாதி முறை என்பதாகும்.

இங்கே சொன்னார்களே, பிற்படுத்தப்பட்டவன், அந்தப் பிற்படுத்தப்பட்டவன்தான் - இதனைப் பயன் படுத்துகிறான் என்றால், பலியாகின்றான்; அதுதான் விஞ்ஞானப்பூர்வமாக ஏற்பாடு செய்திருக்கின்ற ஒரு திட்டம்.

அதுதான் பார்ப்பான் - அதுதான் வருணசிரம தர்மம் - அதுதான் பார்ப்பனீயம் - அதுதான் ஆரியம்!

ஒரு கை, இன்னொரு கையைத் தொடப் போனால், இந்தக் கைக்கும், இந்தக் கைக்கும் சண்டை என்று தெரிகிறது. ஆனால், நண்பர்களே, இந்த இரண்டு கைகளும் தானாக இயங்குகிறதா? கண் பார்வையில், இரண்டு கைகளும்தான் சண்டை போடுகின்றன.  ஆனால், அவை தானாக இயங்கவில்லை. பிறகு எங்கே இருந்து உத்தரவு கிடைக்கிறது அவற்றிற்கு? மூளை யிலிருந்து உத்தரவு கிடைக்கிறது. மூளை நம் கண் களுக்குத் தெரிகிறதா? அதுதான் பார்ப்பான் - அதுதான் வருணசிரம தர்மம் - அதுதான் பார்ப்பனீயம் - அதுதான் ஆரியம்.

அங்கே இருந்துதான் உத்தரவு வரும்; அதற்குத்தான் புராணங்கள், இதிகாசங்கள், மனுதர்மம்.

அம்பேத்கர் அவர்கள் ஏன் அமைச்சர் பதவியை விட்டுப் போனார்? அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதைக் கொடுத்துவிட்டு, பிறகு அமைச்சராக இருந்து, சட்ட அமைச்சராக இருந்தார். அப்பொழுது அவர் மகளிருக்கு சொத்துரிமை கொடுத்தார்.

பெண்களுக்குச் சொத்துரிமை என்பது சனாதனத்திற்கு விரோதமானதாம்!

மகளிருக்கு சொத்துரிமை கொடுக்கக்கூடாது; அது சனாதனத்திற்கு விரோதம் என்றார்கள். ஏனென்று கேட்டால், படிக்கட்டு ஜாதி முறை இருக்கிறதே, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற இந்த நான்கு ஜாதி - இந்த நான்கு ஜாதிகளுக்கும் கீழே  அவர்ணஸ்தர்கள் - ஜாதியற்றவர்கள் என்பது அய்ந்தாவது ஜாதி - பஞ்சமர்.

அதற்கும்கீழே, எல்லா ஜாதிப் பெண்களும். ஏன் எல்லா ஜாதிப் பெண்களும் என்று வைத்தார்கள் என்றால், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்த கத்தை நாங்கள் எழுதவில்லை; அல்லது இப்பொழுது புதிதாகப் போடப்பட்ட உதயநிதி கருத்தல்ல.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ 

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் நக்கீரன் இதழில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

அதில்,

‘‘நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண் களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனை வருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.

கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.

ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர் களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத் திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு இயைந்தனர்.

‘அடே, குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்.  இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”

“பெண்ணே நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”

இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.

“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக் கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவ ளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.''

இப்படி எழுதியுள்ளார் அந்தப் புத்தகத்தில்.

‘‘பிறவி பேதம் உலகத்தில் 

வேறு எங்கேயாவது உண்டா?’’

அதனால்தான் பெண்களை ‘‘நமோ சூத்திரர்கள்'' என்று சொன்னார்கள். இவர்கள் சூத்திரர்கள்தான், அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உயர்ந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்களும் ‘‘நமோ சூத்திரர்கள்''தான் என்றனர்.

பெரியார்தான் கேட்டார், ‘‘பிறவி பேதம் உலகத்தில் வேறு எங்கேயாவது உண்டா?'' என்று.

இன்றைக்கு ஜாதியை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களே - ஒரு லட்சம் ரூபாயை கட னாகக் கொடுக்கிறோம், உங்கள் பரம்பரைத் தொழிலை செய்யுங்கள் என்று சொன்னால், என்ன அர்த்தம்?

நம்மிடமிருந்து பெறப்பட்ட ஜி.எஸ்.டி. பணம், நம்முடைய வரிப் பணம்!

அதுவும் இலவசமாக அந்த ஒரு லட்சம் ரூபாயைக் கொடுக்கவில்லை; அது யார் பணம்? நம்மிடமிருந்து பெறப்பட்ட ஜி.எஸ்.டி. பணம், நம்முடைய வரிப் பணத்தை வாங்கி, நமக்கே கடனாகக் கொடுக்கிறார்கள்.

பழமொழி ஒன்றைச் சொல்வார்கள் பக்தர்கள், ‘‘வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதிலே கொஞ்சம் கிள்ளி வைத்தேன்'' என்று.

வெல்லத்தில் பிள்ளையார் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டு, வேண்டிக்கொண்டவர் கெட்டிக் காரத்தனமாக, அந்த வெல்லத்தில் செய்த பிள்ளை யாரிலிருந்தே கொஞ்சம் கிள்ளி எடுத்தால் பிள்ளை யாருக்குத் தெரியவா போகிறது என்று நினைப்பாராம்.

அதுபோன்று இன்றைக்கு முழுக்க முழுக்க பெண்களைக் கொச்சைப்படுத்தக் கூடிய அளவிற்குப் பிறவி பேதம்.

பெரியார்தான் சொன்னார் பிறவி பேதத்தின் கொடுமைகளைப்பற்றி - சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும், திராவிடர் கழகமாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், அந்தக் கொள்கைகள் தனித்த கொள்கைகள்.

பொது எதிரி யார்? 

பி.ஜே.பி,. ஆர்.எஸ்.எஸ்.!

அய்யா காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொன்னாரே, ‘‘வேற்றுமையில் ஒற்றுமை'' என்று

இந்தியா கூட்டணியில் சிண்டு முடியலாமா? என்று முயற்சிக்கிறார்கள். அவரவருடைய கொள்கைகள் அவரவர்களுக்கு.

பொது எதிரி யார்? பி.ஜே.பி,. ஆர்.எஸ்.எஸ். அந்தப் பொது எதிரியை வீழ்த்துவதற்கு நாம் ஒன்றாக சேர்கிறோம் என்றுதான் பொருளே தவிர, அவரவர் கொள்கைகள் அவரவர்களுக்கு.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கதர் ஆடைதான் அணிவார். நான் கதர் ஆடை அணியவில்லை. அதனால், இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்வோம் என்று அர்த்தமா? நான் கருப்புச் சட்டைதான் அணிவேன். இன்னொருவர் நீல சட்டை அணிவார். 

அனைவரும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த உதாரணத்தைக்கூட இப்பொழுது சொல்ல முடியவில்லை. ஏனென்று கேட்டால், எல்லா கட்சிக் காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஜே.பி.யைத் தவிர, மற்ற எல்லோரும் அ.தி.மு.க. உள்பட அனைவரும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மாறுதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழலை நினைத்துப் பாருங்கள்.

நாம் இப்பொழுதுதான் தலையெடுத்து இருக்கின் றோம். நம்முடைய பிள்ளைகள் இப்பொழுதுதான் படித்து வருகிறார்கள். அதையும் கெடுப்பதற்குத்தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். அதிலிருந்து விலக்குக்கோரி தான் நாம் போராடிக் கொண் டிருக்கின்றோம். நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, அந்தத் தேர்வு, இந்தத் தேர்வு என்று வரிசையாக எதையாவது ஒன்றை நுழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்பொழுது விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மலம் எடுக்கின்றவர் பிள்ளை மலம் எடுக்க வேண்டுமாம்; 

சிரைக்கின்றவர் பிள்ளை சிரைக்கவேண்டுமாம்.

இவர்களுடைய பிள்ளை அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆகக்கூடாதா?

தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தபொழுது, ‘‘நீங்கள் எல்லோரும் அவரவர் சமுதாயத்தில், அவரவர் ஜாதித் தொழிலை செய்யக் கூடாது. உங்கள் தொழில் உங்களோடு போகட்டும்; உங்கள் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். அதிகாரியாக, அய்.பி.எஸ். அதிகாரியாக, அய்க்கோர்ட் ஜட்ஜாக, மருத்துவராக, பொறியாளராக வரவேண்டும்'' என்றார்.

உனக்கு அடிமையாக இருப்பதற்கு 

இன்னொரு ஆள் தேவையா?

அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர், துண்டுத் தாளில் எழுதி ஒரு கேள்வி கேட்டார்.

அதில், ‘‘அப்படியானால், அந்த வேலையெல்லாம் யார் செய்வது?'' என்று.

உடனே பளிச்சென்று பதில் சொன்னார், அதுதான் தந்தை பெரியார்.

‘‘ஏண்டா, நீதானே வெளிக்கி போறே, நீயே எடுத்துப் போடு. அதற்கு ஏன் இன்னொரு ஆளைத் தேடுகிறாய்? உனக்கு அடிமையாக இருப்பதற்கு இன்னொரு ஆள் தேவையா?'' என்றார்.

நான் இப்படி சொல்கிறேனே, அதிசயமாக இருக்கிறது என்று கைதட்டுகிறீர்களே, குழந்தை வெளிக்கிப் போனால், அதிலும் அப்பன் மடிமேல் வெளிக்கிப் போனால், என்ன செய்கிறார்? யாரையாவது கூப்பிடுகிறாரா, அவரே தானே கழுவிக் கொள்கிறார். அப்படியானால், உன்னுடைய விஷயத்தை நீயே பார்த்துக் கொள்வதுதானே! 

அறிவியலுக்கு விரோதமானது என்று ஜப்பானுக்கு எதிராக 

மோடி போராட்டம் நடத்துவாரா?

அடுத்தபடியாக, பாம்பே லெட்டின் வந்தது; இப்பொழுது ஜப்பான் கழிவறை வந்தாயிற்று. இது,  அறிவியலுக்கு விரோதமானது என்று ஜப்பானுக்கு எதிராக மோடி போராட்டம் நடத்துவாரா?

ஆகவே நண்பர்களே, ஒருபக்கம் விஞ்ஞானம்; இன்னொரு பக்கம் அஞ்ஞானம். இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கின்றோம்.

நாங்கள் மிக முக்கியமாக இன்றைக்கு சனாதனம் ஒழியட்டும் என்று ஏன் சொல்கிறோம்? பேதம் ஒழியட்டும் என்று அர்த்தம் அதற்கு.

தேவதாசி முறையை ஒழித்த இயக்கம் - திராவிடர் இயக்கம், திராவிடர் ஆட்சி

பெண்களைப் பார்த்து கொச்சைப்படுத்து கிறார்கள் - எட்டு வயதிற்குள் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கவேண்டும். பெண் களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டிவிடவேண்டும் என்று கூறுவதுதானே சனாதனம். ஆனால், தேவதாசி முறையை ஒழித்த இயக்கம் திராவிடர் இயக்கம், திராவிடர் ஆட்சிதான்.

பெண்களுக்கு கல்வி கொடுத்தது யார்? பெண் களுக்கு சொத்துரிமை கொடுத்தது யார்?

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தீர்மானம் கொண்டுவந்தார் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்று.

1954-1956 ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத் துரிமை கொடுக்கவேண்டும் என்று சட்டத்தைக் கொண்டு வந்தார் நாடாளுமன்றத்தில்.

அந்த சட்டத்தை நிறைவேற்றவிடமாட்டோம் என்றனர் சனாதனிகள் - குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திரபிரசாத் உள்பட.

இதனால் வேதனைப்பட்டு, அம்பேத்கர் அவர்கள் பதவியை துறந்து வெளியே போனார்.

1929 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார் அவர்கள். அப்பொழுது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 வயது  பிள்ளை. 

சனாதனத்திற்கு ஆணி அடித்தார் 

முத்தமிழறிஞர் கலைஞர்!

அதே கலைஞர், உழைத்து, வெற்றி பெற்று,  திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாவிற்குப் பிறகு நடத்த ஆரம்பித்து, அவர் ஆட்சிக்கு வந்தவுடன், பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத் தைக் கொண்டு வந்தார். இதுதான் சனாதனத்திற்கு ஆணி அடித்த விஷயம். சனாதனத்திற்கு இரும்பு மூடி போட்டார்.

முன்பெல்லாம் கணவன், தன் துணைவியாரைப் பார்த்து, ‘‘என்ன எதிர்த்துப் பேசுகிறாய், உங்கப்பன் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்'' என்று சொல்வார்.

ஆனால், இப்பொழுது யாராவது அதுபோன்று சொல்கிறார்களா, ஏன்?

இப்பொழுது பெண்கள் எல்லாம் படித்திருக்கிறார்கள்; பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். பெண்கள் எதிர்த்துப் பேசுகின்ற துணிச்சல் வந்திருக்கிறதே, அந்தத் துணிச்சலைக் கொடுத்த தத்துவத்திற்குப் பெயர்தான் நண்பர்களே, திராவிடர் இயக்கம்.

மனிதத் தன்மைக்கு விரோதமானது; சமத்துவத்திற்கு விரோதமானது!

சனாதனம் என்றால், மனிதத் தன்மைக்கு விரோத மானது; சமத்துவத்திற்கு விரோதமானது.

ஒரு மனிதன், இன்னொரு மனிதனைத் தொடக் கூடாது என்றார்கள். 

பார்க்கக்கூடாது, தொடக்கூடாது, நெருங்கக்கூடாது, படிக்கக்கூடாது; பார்த்தாலே தீட்டு.

‘புரத வண்ணார்!’

‘புரத வண்ணார்' என்ற ஒரு ஜாதி. மண்டல் கமிசனில் எடுத்துச் சொல்கிறார் - இன்னமும் அந்த சமூகம் இருக்கிறது.

அந்த சமூகத்தையும் சேர்த்து, மறுபடியும் அவர்கள் அந்தத் தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களே, இரவு 12 மணிக்குமேலேதான் அழுக்குத் துணியை வெளுப்பதற்கு ஆற்றுக்குச் செல்லவேண்டும். 

அவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று சொன் னார்கள். இது  என்ன கொடுமை? இதுபோன்ற காட்டுமிராண்டி சமுதாயம் உலகத்தில் வேறு எங்கேயாவது உண்டா?

விடிவதற்குள் அவர்கள் துணியை வெளுத்துவிட்டு, அவரவர் வீட்டுத் துணியை, அவரவர் வீட்டின்முன் வைத்துவிடவேண்டும்.

அவர்களைப் பார்த்தாலே தீட்டு; ஆனால், அவர்கள் வெளுத்த துணியைக் கட்டிக் கொண்டால், அது தீட்டு அல்ல.

என்ன கொடுமை? காட்டுமிராண்டித்தனம். அதை மீண்டும் புதுப்பிப்பதற்கு விஸ்வகர்மா என்ற ஒரு திட்டம் - அந்தத் திட்டத்தைக் கொண்டு வரக்கூடிய ஆட்சி மீண்டும் ஒன்றியத்தில் வரலாமா? என்பதுதான் நம் முடைய கேள்வி.

ஆகவேதான், இந்த சனாதன எதிர்ப்பு என்பது இருக்கிறதே, அது மனிதத் தன்மையை நிலை நிறுத்தல் என்பதாகும்.

ஜாதி ஒழிப்புபற்றி அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதினார், Annihilation of Caste  - ‘‘ஜாதியை அழித்து ஒழித்தல்'' என்று அதற்குப் பெயர்.

தமிழ்நாட்டில் என்னென்னமோ 

செய்து பார்த்தார்கள்!

சனாதன ஒழிப்பு மாநாடு என்றால், அது எப்படி இன்னொருவரை கொலை செய்வது என்று அர்த்த மாகும்?

பொய்யாகத் திரித்து எழுதுகிறார்கள். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வாங்குவதற்காகத்தான். தமிழ்நாட்டில் என்னென்னமோ செய்து பார்த்தார்கள்; ராமனைக் காட்டி வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள். தி.மு.க.வை தோற்கடிக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்காக ராமன் கைகொடுப்பான் என்று நினைத்தார்கள். 

என்னுடைய வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றார் காமராசர்!

இராஜகோபாலாச்சாரியாரும் - காமராஜரும் கூட் டணி வைத்திருந்தார்கள். பிறகு காமராஜர் அவர்கள் வருந்தி சொன்னார், ‘‘என்னுடைய வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்று சொன்னால், இராஜகோபாலாச்சாரியாரோடு கூட்டு சேர்ந்ததுதான்'' என்று.

அந்தத் தேர்தலில் தி.மு.க. அதுவரை இல்லாத சாதனையாக 184 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வரலாறு இப்பொழுது மீண்டும் திரும்பவிருக்கிறது, இந்தியா முழுவதும்.

அதற்குமுன் தமிழ்நாட்டில் மட்டும்தான். இப்பொழுது இந்தியா முழுவதும் வரவிருக்கிறது. ஏனென்றால், இன்றைக்கு மக்கள் புரிந்துகொண்டார்கள். அன்றைக்குத் தயாராக இல்லை, இன்றைக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

வடநாட்டிலும் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்!

வடநாட்டில் இந்தக் கொள்கைகள் உதயநிதி பேசிய தில் சென்றிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கேட்கிறார், அமைச்சர் உதயநிதி பேசியதில் என்னய்யா, தவறு? என்று கேட்கிறார்.

கருநாடக மாநிலத்திலும் ஒருவர் கேட்கிறார், உதயநிதி பேசியதில் என்ன தவறு இருக்கிறது? என்று.

இப்பொழுது இந்தியாவிற்கே நம்முடைய தலைவர் கள், நம்முடைய அமைச்சர்கள், கொள்கையாளர்கள் வழிகாட்டக் கூடிய கொள்கை விளக்க கலங்கரை வெளிச்சமாக இருக்கிறார்கள்.

மனிதத்தன்மைக்காக, பெண்ணுரிமைக்காக!

எனவேதான், இந்தப் போராட்டம் என்பது மனிதத் தன்மைக்காக, பெண்ணுரிமைக்காக.

எட்டு வயதிற்குள் பெண் குழந்தைக்குக் கல்யாணம் செய்யவேண்டும் என்று எழுதுகிறார்கள். அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றார் போட்டி அரசாங்கம் நடத்துகின்ற இங்கே இருக்கின்ற ஆளுநர் ஒருவர். அவர் வெளிப்படையாக சொல்கிறார், நான் குழந்தைத் திருமணம்தான் செய்தேன் என்று.

அப்படியென்றால், அவர் சட்ட விரோதமாகத்தான் திருமணம் செய்திருக்கிறார். 

சனாதனம் சட்ட விரோதமாக நடப்பது; 

சமதர்மம் நியாயத்திற்கு விரோதமாக நடக்காது!

ஆகவே, சனாதனம் சட்ட விரோதமாக நடப்பது; சமதர்மம் நியாயத்திற்கு விரோதமாக நடக்காது. எல்லோ ருக்கும் பாடுபடுவது, சமத்துவத்தை உருவாக்குவது.

அந்த அடிப்படையில்தான் நண்பர்களே, தெளிவாக விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில்  ஜாதியைக் காட்டி கொண்டு வந்திருக்கிறார்கள்.

விஸ்வகர்மா ஜாதியைச் சேர்ந்த எங்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள், அதை நீங்கள் தடுக்கிறீர்களே, நியாயம்தானா? என்று புரியாமல் கேட்கிறார்கள்.

இராஜகோபாலாச்சாரியார், 1938 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபொழுது, ஓர் அரசாணையைப் போட்டார்.

பெரியார் அதைக் கண்டித்தவுடன், அந்த அரசாணையைத் திரும்பப் பெற்றனர்.

ஆச்சாரி என்று போடக்கூடாது;

ஆசாரி என்றுதான் போடவேண்டுமாம்!

அந்த அரசு ஆணை என்னவென்றால், விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும், ஆச்சாரி என்று தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போடும்பொழுது இனிமேல் ஆச்சாரி என்று போடக்கூடாது. ஆசாரி என்றுதான் போடவேண்டும் என்பதுதான் அது.

அதை விரட்டியடித்தது திராவிட இயக்கம்; தந்தை பெரியாரின் இயக்கம். அந்த நண்பர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவேதான், புரிய வைக்கவேண்டியவர்களுக்குப் புரிய வைப்போம்; தெளிய வைக்கவேண்டியவர்களைத் தெளிய வைப்போம்.

இந்தப் போராட்டம் முடிவல்ல; ஒரு தொடக்கம். 

ஒத்துழைத்த அத்துணை பேருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு 

இதுதான் கடைசி காலகட்டம்

மகளிர் ஆனாலும், தோழர்கள் ஆனாலும் 2024 ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொள்ளவேண்டும்.  அந்தத் தேர்தல் முன்பே நடத்தப்பட்டாலும் சரி, அடுத்த ஆண்டு வந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு இதுதான் கடைசி காலகட்டம். இன்னும் 8 மாதங்களுக்குள் இறுதியடையும்.

‘‘இந்தியாவையே மாற்றுகிறோம் என்று சொன் னவர்கள், இந்தியாவை மாற்ற முடிகிறதோ இல்லையோ, ‘இந்தியா' என்ற பெயரை மாற்றுகின்றார்கள்'' என்று இங்கே அழகாகச் சொன்னார்கள்.

கொள்கைப் பயிற்சியையும் 

கொடுங்கள்!

அதைப் புரிந்து, வீடு வீடாகச் சென்று, பிரச்சாரம் செய்யுங்கள். அரசியல் ரீதியாக தி.மு.க., மற்ற கூட்டணிக் கட்சிகள் எல்லாம், வாக்காளர்களைத் தட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக, கழகத் தோழர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்; அதில் கொள்கைப் பயிற்சி யையும் கொடுங்கள்.

ஒரு புதிய விடியலை உருவாக்குங்கள்!

‘‘அய்யா, நீங்கள் மீறிப் போய் பா.ஜ.க.விற்கு வாக் களித்தால், நம்முடைய பிள்ளைகள் படித்த படிப்பு நாசமாகிப் போய்விடும் என்பதை உணர்த்துங்கள்; திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள்! தெருமுனைப் பிரச்சாரம் செய்யுங்கள். அதன்மூலமாக ஒரு புதிய விடியலை உருவாக்குங்கள்!

அதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு இருக்கட்டும்; தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டும்.

திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு அதைச் சொல்லும்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.

No comments:

Post a Comment