எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு, கி.ராஜநாராயணன் விருது வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு, கி.ராஜநாராயணன் விருது வழங்கல்

சென்னை,செப்.26 - கரிசல் இலக்கியவாதி கி.ராஜ நாராயணனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவை, விஜயா வாசகர் வட்டம் சார்பில், பிரபல எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு 2023ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது  மற்றும்  ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கி சக்தி மசாலா நிறுவனம் சிறப்பித்தது.

அண்மையில், கோவையில் நடைபெற்ற இவ்விழாவில், விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் வரவேற்புரையாற்ற, தமிழ்நாடு மேனாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., (ஓய்வு) தலைமை ஏற்று இவ்விருதினை எஸ்.வி. ராஜதுரைக்கு வழங்கினார். 

திரைப்பட கலைஞர் சிவக்குமார், வழக்குரைஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன், சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர்கள் முனைவர் பி.சி.துரைசாமி மற்றும் முனைவர் சாந்தி துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விஜயா பதிப்பக நிர்வாகி  வே.சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எஸ்.வி.ராஜதுரை மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றிய பல நூல் களையும், கட்டுரைகளையும் தமிழிலும் - ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும், கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கும் மேலாக மனித உரிமை இயக்கத்தில் களப் பணியாளராக செயலாற்றிய ராஜதுரை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மய்யத்தின் தலைவராக 2008-இல் நியமிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க பணியைச் செய்தவர். 'இனி' என்ற கலை - இலக்கிய ஏட்டினை நடத்தியுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சுமார் 80-க்கும்  மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment