விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி

சென்னை, செப்.13 விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி அடைந் துள்ளார். சிலைகளை வைத்து ஊர்வல மாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்காத நிலையில் கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படு கிறது. வீதி வீதிக்கு விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக வைத்து பூஜை செய்து அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு, குளங்கள், நீர் நிலைகளில் 'விசர் ஜனம்' என்று கூறி வீசுவார்கள். விநாயகர் சிலை வைப்பதற்கும் ஊர்வலமாக செல்வ தற்கும் தமிழ்நாடு அரசு இடங்களை குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலங் களுக்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செயப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் தாமோதரன் ஆஜராகி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதாக கூறினார். மேலும், அந்தந்த பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் காவல் துறையினர் அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும், ஈரோடு மாவட் டம் அன்னூரில் இருக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது எனக்கூறி மனுக்களை முடித்து வைத்தார். மேலும், சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன் எனவும் காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக கூறிய நீதிபதி, இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment