அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மெகா திட்டம்! பெண்ணியம் தலைநிமிர்கிறது! தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மெகா திட்டம்! பெண்ணியம் தலைநிமிர்கிறது! தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, செப்.14  அறிஞர் அண்ணா பிறந்த செப்.15 ஆம் நாளில் ஓர் அரிய புரட்சி! இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்'' தொடக்கம்!  பெண்ணியம் தலைநிமிர்கிறது, பெண்ணடிமைத்தனம் விரட்டப்படுகிறது; விடியல் தொடர்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

நேற்று (13.9.2023) சென்னை பெரியார் திடலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற் குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செப்டம்பர் 15 ஆம் நாளிலிருந்து ஓர் அரிய புரட்சி

அறிஞர் அண்ணா அவர்களுடைய 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 15 ஆம் நாளிலிருந்து ஓர் அரிய புரட்சி, அமைதிப் புரட்சி தமிழ்நாட்டில் 'திராவிட மாடல்' ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் சிறப்பாகப் புதிய அத்தியாயம் உருவாகவிருக்கிறது.

''கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!''

பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வேண்டுமானால், அவர்களுக்குப் பொரு ளாதார சுதந்திரத்தை, பொருளாதார ஆதரவை அளிக்கவேண்டும். அவர்கள் உழைக்கின்ற உழைப்பை இதுவரையில் யாரும் அங்கீகரிக்கவில்லை என்ற நிலையில், அவர்களுடைய உழைப்பை மதித்து அங்கீகரிக்கக் கூடிய அளவிற்கு ''கலைஞர் மகளிர்  உரிமைத் தொகை'' என்று மாதம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் அவர்களைத் தேடி, நாடிச் செல்லும் என்ற திட்டமாகும். இது இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய திட்டம்; எடுத்துக் காட்டான திட்டம்; பல மாநிலங்களில் தாமும் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப் படுகின்ற திட்டம்.

ஒரு கோடியே 6 லட்சம் பேர் பயன்பெறுவர்!

தமிழ்நாடு அரசிற்கு எத்தனையோ நிதி நெருக்கடி இயற்கையாகவும், செயற்கை யாகவும் உருவாக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில், அதைப் பற்றியெல்லாம் திட்டமிட்டு, 12 ஆயிரம் கோடி ரூபாய் ஓராண்டிற்குத் தேவை; இந்தத் திட்டத் தினால் பயன்பெறக் கூடிய பெண்கள் ஒரு கோடியே 6 லட்சம் பேர் என்று சொல் லக்கூடிய அளவிற்கு, இது ஒரு மெகா திட்டமாகும்.

பெண்ணியம் தலைநிமிர்கிறது, பெண்ணடிமைத்தனம் விரட்டப்படுகிறது

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டம், இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில்கூட இல்லை என்கிறபோது, பெண்ணியம் தலைநிமிர்கிறது, பெண்ணடிமைத்தனம் விரட்டப்படுகிறது; விடியல் தொடர்கிறது. 

'திராவிட மாடல்' ஆட்சியின்  கிரீடத்தில் இது ஒரு தனி முத்து. இந்த முத்துவின் ஒளியில் எழுச்சி பெறவேண்டிய மகளிர், எழுச்சி பெறட்டும்; புதிய வரலாறு படைத்து திருப்பம் ஏற்படட்டும்.

வாழ்க பெண்ணினம்!

வளர்க அவர்களது உரிமைகள்!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தனியார் தொலைக்காட்சி ஒன் றிற்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment