ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்- அறவழியில் போராட்டம் விரைவில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்- அறவழியில் போராட்டம் விரைவில்!

 தந்தை பெரியார் நெஞ்சில் தைத்தமுள்ளை நீக்கி அவர் நெஞ்சில் பூ வைத்தவர் நமது முதலமைச்சர்

ஆகமம் தெரியாதவர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக உள்ளனர்; 

ஆகமப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கின்றனர்!

ஆகமம் தெரியாத பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்; முறையாகப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கிறார்கள். இதற்கொரு முடிவு காண அறவழியில் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும் - ஆட்டம் போடவேண்டாம் ஆரியம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

14.8.2021 அன்று (இரண்டாண்டுகளுக்கு முன்பு) சமூகநீதிக்கான சரித்திர நாயகரும், ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு இதுவரை எந்த ஓர் அரசும் இந்தியாவிலேயே அதிகாரப்பூர்வமாகத் தராத ஒரு சிறப்பு இடம் தந்து, உயர்த்திய சாதனை புரிந்து, ஓர் அமைதிப் புரட்சியைச்  செய்து சரித்திரம் படைத்தார்.

இரத்தம் சிந்தாப் புரட்சி!

அதன்படி உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஆகமப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பணி நியமனத்தை உரிய முறையில் பெற்று, கோவில்களில் பணி செய்து வருகின்றனர்!

அத்துடன் கோவில் கருவறைக்குள் தமிழும், பெண்களும் போகும் வகையில், 29 ஓதுவார்களுக்குப் பணி நியமனம் கிடைத்தது. இது ஒரு பெரும் சமூகப் புரட்சி - இரத்தம் சிந்தாதப் புரட்சி!

25.9.2023 அன்று இந்து அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட (அடுத்த வரிசை) 15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார் களுக்குப் பணி நியமனம் கிடைத்துள்ளது.

இந்த 10 பெண் ஓதுவார்களும் கோவில் களில் ஓதுவார்களாக நியமன வாய்ப்புப் பெற்றுள்ளார்கள்! 

நமது முத்தமிழறிஞர் கலைஞர் விரும் பியதுபோல, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியதோடு, மேலும் கூடுதலாக ‘திராவிட மாடல்' ஆட்சி பெரியாரின் நெஞ்சில் பூ வைத்துள்ளது. எவரும் செய்ய அஞ்சும் பெண்ணியப் புரட் சியைச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத்தான் நமது முதலமைச்சர் அவர்கள் மிகப் பொருத்தமாக சமூக வலை தளப் பதிவில் 26.9.2023 அன்று குறிப் பிட்டுள்ளார்கள்.

நமது முதலமைச்சர் அவர்களையும், இத்துறையில் இத்தகு சாதனைகளை நாளும் செய்துவருகிற அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.

கடந்த 28 மாதங்களில் 10 பெண் ஓதுவார் கள் பல கோவில்களுக்கு நியமனம் ஆகி யிருக்கிறார்கள்.

மொத்தம் உள்ள ஓதுவார் பணிகளில் 107 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன!

இதுபோலவே அர்ச்சகர்கள் பணியில் பார்ப்பனர்கள் தொடுத்த பல வழக்குகளிலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம்,

1.  பரம்பரை நியமனம் ரத்து என்பது செல்லும்.

2. ஜாதி அடிப்படை அல்லாது ஆகமத் தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனங்கள் நடைபெறும் என்று திரும்பத் திரும்பக் கூறினாலும், குறிப்பிட்ட அமைப் பாளர்களும், பார்ப்பனர்களும் ஏதாவது ஒரு சட்ட சந்து, பொந்துக்குள் நுழைந்து  இந்த நியமனங்கள் தங்குத் தடையில்லாமல் நடை பெற, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் - ஒரு நிரந்தர முடிவு இல்லா ததுபோல (No Finality) ஒரு காட்சி ஜோட னைகளைத் தந்து, தங்களது ‘ஆக்டோபஸ்' தனத்தை அப்பட்டமாகக் காட்டியே வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

வல்லடி வழக்குகளைப் போடுவதா?

தமிழ்நாடு ‘திராவிட மாடல்' அரசு - பொறுமையாகவும், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளாமலும் சட்டப் போராட்டத்தை உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து சளைக்காமல் நடத்தி வருகிறது!

‘‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நியமனம் செய்கிறார்கள்'' என்கிற பொய் யான குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே புதிய ஆட்டுக்கல்லில் போட்டு அரைப்பது போல, வம்படியாக வல்லடி வழக்குகள் போட்டு வருவது கண்டு தமிழ்நாட்டு ஒடுக் கப்பட்ட மக்கள் கொதித்து வருகின்றனர்!

தரக்குறைவாக நடந்துகொள்ளும் 

பார்ப்பனர்கள்!

தமிழ்நாடு அரசின், முதலமைச்சரின் பெருந்தன்மையை அவர்கள் பலவீனம் போல கருதி, சட்ட சிலம்ப சதிராட்டம் ஆடுகிறார்கள் பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் - கோவில் பாதுகாப்பு குழு என்ற ஓர் அக்கிரகார அவதாரக் குழுவினர்.

அவர்கள் எந்த எல்லைக்குச் சென்றுள் ளார்கள் என்றால், சமயப் பெரியவர்கள் சுகிசிவம் போன்ற அறிஞர்களைத் தரக்குறை வாய்ப் பேசி, தாக்குதல் நடத்தத் துணியும் அளவுக்குத் தரம் தாழ்ந்த தங்கள் வன்மத்தை வெளிப்படையாகக் காட்டி வருகின்றனர்!

முதலமைச்சரையும், அமைச்சர்களை யும், அரசையும் நாராச நடையில் விமர்சிக்கின்றனர்!

தமிழ்நாடு அரசின் மனிதாபிமானம்

பல பிரபல கோவில்களில் நீண்ட காலம் - ஆகமப் பயிற்சியே அறவே இல்லாத அர்ச்சர்களை மனிதாபிமான - கருணை அடிப்படையில் அவர்களை வெளியேற்ற வில்லை - உடனடியாக இந்து அறநிலையத் துறை மறுபரிசீலனை செய்து அவர்களை வெளியே அனுப்பிட, சலுகைகளை நிறுத்திட ஆவன செய்ய, முடிவு எடுக்க பார்ப்பனரல்லாத பக்தர்களும், பயிற்சி பெற்று, வேலை கேட்டு விண்ணப்பித்தவர் களும் வீதிக்கு வந்து - கோவில்களுக்குமுன் வந்து தங்களது பயிற்சிக்குப் பின்னும் வேலை கிடைக்கவில்லை என்ற நிலையில், பயிற்சியே பெறாதவர்களை, ஆகமம் அறியாத அவ்வகை தற்குறிகள் அர்ச்ச கராகத் தொடர்ந்து, தங்களது வாய்ப் பிற்குத் தடையாக இருக்கலாமா? என்று போராடக் கிளம்பும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா?

பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவுக் காலம் வேலை கிட்டாமல் மனக்குமுறலுடன் இருப்பது?

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் 

தெருவில் நிற்பதா?

மற்றவற்றில் வருண தர்மம் பாராது எல்லா தொழில்களிலும் பார்ப்பனர் வயப் படுத்தும்போது, அதற்குரிய படிப்புப் படித்தும், எங்கள் சகோதரர்கள் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று தெருவில் நிற்பதா? என்னே, கொடுமை!

இதுபற்றி மிக வேகமாக சிந்திக்கவேண் டிய - அறவழியில் போராட்டக்களம் காணும் அவசரம் நெருக்குகிறது என்பதை ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.9.2023


No comments:

Post a Comment