வாச்சாத்திப் பாலியல் வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனை உறுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

வாச்சாத்திப் பாலியல் வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனை உறுதி!

சென்னை, செப்.29  தருமபுரி மாவட்டம் வாச் சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சுய தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட் டிருக்கிறார். அவர்கள் இறந்து போயிருந்தால் அவர்களது குடும்பத்துக்கு இந்த உதவி களைச் செய்ய வேண்டும் என நீதிபதி குறிப் பிட்டிருக்கிறார்.

"பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டிருந் தால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதில் குற்றம் புரிந்த வர்களிடம் ₹ரூ.5 லட்சம் வசூலிக்க வேண் டும்" என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தர விட்டிருக்கிறார்.

"அப்போதைய காவல்துறை கணகாணிப் பாளர், மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என கடந்த 2011 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு ஒன்றுமுதல் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

வாச்சாத்தி கிராமத்தில் 

நடந்தது என்ன?

சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்தவர்கள் சந்தனமரங்களை வெட்டிக் கடத்துவதாக புகார் தெரிவித்த தமிழ்நாடு வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறை யினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தை யும் சுற்றிவளைத்து பலமணி நேர தேடுதல் நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிரா மத்தைச் சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.

அதேசமயம், சந்தனக் கட்டை கடத்த லுக்கும், தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர்,  இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக் குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத் தியைச் சேர்ந்த 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் தெரிவித் தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர் களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டி லிருந்த பொருள்கள் நாசப்படுத்தப்பட்ட தாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இந்தப் புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22 ‌ஆம் தேதி முறையான புகார் பதிவு செய்யப்பட்டது. இதன் மீதான விசார ணையை தமிழ்நாடு காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.அய். எனப்படும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.அய்., அதிகாரிகள் வழக்கை விசா ரித்து, 4 அய்.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

215 பேர் குற்றவாளிகள் என்று 

மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்து விட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி தீர்ப்பளித்தார். அவர்களில் 126 பேர் தமிழ்நாடு அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழ்நாடு காவல்துறையினர். மீதமுள்ள அய்ந்து பேர் தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களுக்கு ஓரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


No comments:

Post a Comment