2024 தேர்தலில் பி.ஜே.பி.க்குப் பாடம் கற்பிப்பீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

2024 தேர்தலில் பி.ஜே.பி.க்குப் பாடம் கற்பிப்பீர்!

*    வன்முறைக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.

* இரண்டு முறை ஏமாந்து வாக்களித்த மக்கள் வரும் தேர்தலில் ஏமாறமாட்டார்கள்!

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் ராமன் கோவில், மகளிர் ஒதுக்கீடு; அதுவும் பிறகே, என்று திசை திருப்பும் பி.ஜே.பி.!

மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். - உருமாற்றங்களை அடிக்கடி மேற்கொள்ளும் தந்திரம் கொண்டது. இரு முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒன்றிய பி.ஜே.பி. அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், புதிய புதிய தந்திரங் களை - போலி வாக்குறுதிகளைக் கொடுக் கிறது - வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் ஏமாறாமல் பி.ஜே.பி. ஆட் சியை வீட்டுக்கு அனுப்புவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். ஆட்சி ஒன்றியத்தில் ‘பி.ஜே.பி.' என்ற அரசியல் பெயருடன்; 1980 ஆம் ஆண்டுதான் அது தொடங்கப் பெற்றது. அதற்கு முன்பிருந்த ‘பாரதீய ஜனசங்' என்பதின் மாற்றமே இது!

தற்போது 36 அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் நூற்றாண்டை வரும் 2025 இல் கொண்டாட விருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்ட் கட் சியும் அவ்வாண்டில் தொடங்கப்பட்டவையே!

1925 முதல் பல உருமாற்றங்கள்

முதலில் பார்ப்பனர் - பனியா இவர்களின் நலனைப் பாதுகாக்கவே ‘ஹிந்து சங்காத்தனில்' தொடங்கி, பிறகு ‘ஹிந்து மஹாசபை' என்று மத அடிப்படையில் அமைப்புகளை முக விலாசமாக மாற்றி, அதுவும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இளைஞர்களிடையே வளராததால், தொண்டுக்கான நிறுவனம் என்ற பெயரில், தொண்டு முகமூடி போட்டுக்கொண்டு 1925 இல் உருவாக்கப்பட்டதுதான் ‘ராஷ்டிரிய சுய சேவக் சங்கம்' (RSS) என்ற அமைப்பு!

இதனுடைய பணிகள் எதுவும் வெளிப்படை யான கொள்கை ரீதியானவை என்பதில் லாமல், முகமூடி அணிந்து அவ்வப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றி, முதலில் தொண்டு, பிறகு கலாச்சார அமைப்பு என்று கூறி பிறகு, பல்வேறு அரசியல் உருமாற்றங்கள் முதலியன.

வன்முறைக்காக மூன்றுமுறை 

தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ்.

இந்நாட்டில், அதன் வன்முறைகளுக்காக, ரகசிய செயல்பாடுகளுக்காக மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு   உள்ளது என்றால், அந்தப் ‘‘பெருமை'' ஆர்.எஸ்.எஸ் அமைப்பையே சாரும்! இதன் தலைவர் பொறுப்பில் ஒரே ஒருவரைத் தவிர (ராஜேந் திரசிங்), அதுவும் சிலகாலம்தான் - மராத்தி சித்பவன் பார்ப்பனர்கள் - உயர்ஜாதி அமைப்பு - ‘ஹிந்துத்துவா' என்ற அரசியல் கோட்பாடு களுக்கும் அவர்களே தோற்றுநர்கள்.

1. ஹெட்கேவார்

2. கோல்வால்கர்

3. பாலா சாகேப் தேவரஸ்

4. ராஜேந்திரசிங் (குறுகிய காலம்)

5. மோகன் பாகவத்

இதில் கோல்வால்கர் காலத்திலும், தேவரஸ் காலத்திலும் மும்முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்!

காந்தியாரை கோட்சே சுட்டுக் கொலை செய்தபோதும் (1948), 

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்திய காலகட்டத்திலும் (1976), 

பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத் திலும் (1992) - தடை செய்யப்பட்டது.

இருமுறை ஆட்சியிலும் 

பொய்யான வாக்குறுதிகள்!

பா.ஜ.க. அரசியலில் கொஞ்சம் காலம் தனியே நின்று படுதோல்வி அடைந்து, பிறகு கூட்டணி தயவில் 23 நாள் ஆட்சி முதல் இன்றுவரை பல அவதாரங்கள், ‘உத்திகளை, வித்தை'களைக் காட்டி வந்தது ஆர்.எஸ்.எஸ்.  அதன்மீதான தடையின்காரணமாக (1914 முதல்) சிறையில் இருந்தபோது, அதன் தலைவர் அன்றைய பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பட்டேல் போன்றவர்களிடம் அடங்கி ஒடுங்கி, தங்களது செயலில் மாற்றம் உருவாக்கும் உறுதிமொழிக் கடிதங்கள் எழுதுவது - பிறகு வழமைபோல ரகசிய முறையில் வன்முறைகளைக் கையாண்டு, பல வித யுக்திகளை மேற் கொள்வது அதன் வழமையான குணாம்சம்! கடந்த இரண்டு முறையும் ‘வளர்ச்சி' போன்ற பொய்யை, ‘வளப்படுத்துதல்' போன்ற பொய்யுரைகளைக் கூறி, இளைஞர்களுக்கு வாக்குறுதித் தேனை வாயில் தடவி, எப்படியோ ஆட்சியைப் பிடித்து, தங்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு, ‘‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்'' என்று அரசியல் களத் தில் ஆட்டம் நடத்துகின்றனர் பா.ஜ.க.வினர்!

இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள்!

கடந்த முறை இவர்களைப் புரிந்துகொள் ளாத வாக்காளர்கள், இம்முறை சாமான்ய மக்கள் படும் துயரம்மூலமாக - ‘‘படமுடியாதினி துயரம் பட்டதெல்லாம் போதும்'' என்று முடிவுக்கு வந்து தேர்தல் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்!

அதை நன்கு புரிந்துகொண்டனர் - தங்களது பழைய வித்தைகள், சொத்தைகள் ஆகிவிட்டன! பிரதமர் மோடி, அமித்ஷா என்ற முகங்கள் வாக்குகளை வாங்கித் தராது என்பதை தெற்கே கருநாடக மாநிலத்திலும், வடக்கே இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண் மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் புரிந்துகொண்டனர்!

இராமர் கோவில் கட்டினால் விலைவாசி குறையுமா? மக்கள் கேள்வி!

இராமர் கோவிலை இவர்கள் கட்டினால், உழைக்கும் மக்கள் ‘‘எங்களுக்கு ‘ரொட்டி எங்கே?' வேலை எங்கே? விலைவாசி விண்ணை முட்டுகிறதே -  மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதும், மனித உயிர்கள் பலியும், பசுப் பாதுகாவலர்களின் அட்டகாசமும்தானே மிச்சம்?'' என்று உணர்ந்து வரும் நிலை வந்துவிட்டதால், தங்களது ஒப்பனையை மாற்றி, திடீரென்று ஒடுக்கப்பட்டோர் சமூகநீதிபற்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது பழைய எதிர்ப்பை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில், கசிந்துருகி கண்ணீர் பெருக ‘அய்யோ, 2000 ஆண்டுகளாக இப்படி மக்கள் கல்வி, வேலை வாய்ப்பற்று இருக்கிறார்களே' என்று ஒப்பனை கலையும்போது ஒப்பாரிப் பாட்டை ஒப்புக் காகப் பாடுகிறார்கள்!

மகளிர் வாக்கைப் பெற 

இட ஒதுக்கீடு மசோதாவா?

மகளிர் வாக்கும் அவர்கள் எதிர்பார்த்தபடி வராது போலிருக்கிறதே என்று நினைத்த அவர்கள், மூலையில் போடப்பட்டிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திடீரென்று நிறைவேற்றி, அதையும் நிபந்தனைக்குட்படுத்தி மகளிர் வாக்குகளைப் பெற, சமூகநீதியோடு இதனையும் சேர்க்க முயலுகின்றனர்! அதிலும் ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சும்.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு-ஒற்றுமை இவர்களது வயிற்றில் புளியைக் கரைக்கிறது!

வாக்காளர்களே, எச்சரிக்கை!

இதற்கு மூலகாரணம் தமிழ்நாடு அல்லவா? தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் அல்லவா! எனவே, அவர்களை வேறு ‘திரிசூலம்'மூலம் அச்சுறுத்தி, அபாண்டம் கூறி, அவதூறு அம் புகளை ஏவிவிட்டு, தேர்தல் வெற்றியைக் குறுக்கு வழியில் பறிக்கலாமா? என்று திகைத்துக் குழம்பிப் போய் உள்ளனர்!

‘மயக்க பிஸ்கெட்டு'களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, மேலும் சில புதிய வித்தை களைக் காட்டுவார்கள் அந்த அரசியல் வித்தைக்காரர்கள்!

வாக்காளர்களே, எச்சரிக்கையாக எதையும் ஆராய்ந்து செயல்படுங்கள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.9.2023


No comments:

Post a Comment