பார்ப்பனியத்திற்குத் துணை போகும் பார்ப்பனரல்லாதவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

பார்ப்பனியத்திற்குத் துணை போகும் பார்ப்பனரல்லாதவர்கள்

பார்ப்பனியம் எங்கே இருக்கிறது, அது செத்துப் போய்விட்டது, 'பார்ப்பனர்கள் மாறிப் போய்விட்டார்கள்’, 

இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்த நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இந்த முடிவுக்கு எப்படி வந்தனர்? வேறு எப்படி? வழக்கம் போல பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டுத்தான்.

எவையெல்லாம் பார்ப்பனியத்தின் உயிர் என்பதனைக் கீழ்க்காணுமாறு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஏனென்றால் பார்ப்பனியம் என்பது வெளி ஆச்சாரம் மட்டுமல்ல. அது கருத்தியல் (ideology) ஆகும். அது மட்டுமன்று, அது பார்ப்பனரல்லாதார் மீதான ஒடுக்குமுறைக் கருத்தியலும் ஆகும்.

பிறவியினால் ஒருவனை மேல், கீழ் என அடையாளம் காணுவது, நினைப்பது, காட்டுவது.

கடுமையான உடல் உழைப்புள்ள தொழில்களைத் தாழ்வாக எண்ணுவது, உடல் உழைப்புத் தொழில்களைத் தவிர்ப்பது.

ஒவ்வொருவரையும் குலத் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தி அதிலிருந்து வெளியே வராமல் இருக்கச் செய்வது.

வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் பார்ப்பனக் கருத்தாக்கங்களை நம்பி அவற்றினைப் பிரச்சாரம் செய்வது (குறிப்பாக சங்கராச்சாரியார், அஹிம்சை, கணபதி ஹோமம், இந்து மதம் முதலிய சொற்களில் நம்பிக்கை வைப்பது).

பார்ப்பனியம் நேற்று வரை வேதத்தின் புனிதம், புராணக் கதைகள், சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் மூலம் தனக்கு வேண்டிய கருத்துக்களை மற்றவர்கள் மூளைக்குள் திணித்தது. இன்றும் அதே கருத்தாக்கங்களை மறைமுகமாகப் பத்திரிகைகள் மூலம் மற்றவர்கள் மூளையில் திணித்து வருகிறது.

மேற்குறித்த வகையான கருத்துகளை அறிந்தே கடைப்பிடித்து வரும், ஏமாறும் தமிழர்களை நாம் பார்ப்பன அடிவருடிகள் என்று அழைப்பதே பொருத்தமானது. இவர்கள் பார்ப்பனியம் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலுக்குப் பலியாகிப் போனவர்கள்.

ஏனென்றால் பார்ப்பனரல்லாதவரான படித்த ஒருவருக்குப் பார்ப்பனியம் ஒரு உளவியல் தடையாக மாறி விடுகிறது. ஒட்டு மொத்தமாக பார்ப்பனரல்லாதாரின் சமூக உளவியல் தடையாகவும் பார்ப்பனியம் வளர்ந்திருக்கிறது. இனி மேற்குறித்த கருத்துகளை விரிவாகக் காண்போம்.

நண்பர்கள் மற்றொரு தனி நபரைப் பாராட்டும் போதும் இகழும்போதும் அவரது ஜாதியையும் சேர்த்துப் பேசுவது சாதாரணமாக உரையாடல்களில் நாம் காணுவதாகும். ஜாதிப் புத்தி என்ற தொடரைப் பயன்படுத்தும் இவ்வகையான பேச்சுக்களில் 'ஜாதிப் புத்தி' என்பதனை நண்பர்கள் ‘பிறவிப் புத்தி' என்றே கொள்கிறார்கள். இந்த மேல்தட்டு மனோபாவம் பார்ப்பனியக் கூறுதான்.

மலம் அள்ளும் கவுண்டரைக் கண்டதுண்டா? வன்னியரைக் கண்டதுண்டா? செட்டியாரைக் கண்டதுண்டா? என்பது போன்ற கேள்விகளை முற்போக்குப் பார்ப்பனர்கள் நயவஞ்சகமாகக் கேட்கிறார்கள். இங்கு ஒரு செட்டியாரோ, வன்னியரோ, கவுண்டரோ, சக்கிலியரோ, பள்ளரோ தங்கள் ஜாதித் தொழிலை மட்டுமே செய்கிறார்கள் என்பது அந்த ஜாதியின் வெற்றியல்ல. அது வருணாசிரமத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு ஜாதிப் பிரிவும் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என ஏற்பாடு செய்து வைத்த பார்ப்பனியக் கருத்தாக்கத்தின் (வருணாசிரம முறையின்) தாக்கம் இன்னும் வலிமையோடு உள்ளது என்பதுதான் உண்மையான பொருளாகும்.

ஆயினும், இன்றையப் பொருளாதாரச் சூழலில் பார்ப்பனரல்லாதார் அதிகம் பாதிக்கப்பட்டு வேறு சில தொழில்களில் ஈடுபடுகின்றனர். இன்று செருப்பு தயாரித்தல், முடி திருத்துதல், அனைத்து வகையான விவசாயத் தொழில்கள், கல்லுடைத்தல், பாரவண்டி இழுத்தல் போன்ற வேலைகளை ஜாதி வேறுபாடில்லாமல் பார்ப்பனரல்லாதார் பார்க்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்பகுதி மக்களின் தொழிலாகிய விவசாயத்தில் கூடப் பார்ப்பனர்கள் இன்னும் ஈடுபடவில்லை. அப்படிப்பட்ட நெருக்கடி அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஜாதிக்கும் வரையறுக்கப்பட்ட ஜாதி ஆச்சாரத்தைப் பார்ப்பனியம் நம்மீது திணித்து வைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட ஜாதியார் மட்டுமே பசு, பன்றி இவற்றின் மாமிசத்தை உண்ணும் வழக்கம் இருந்தது. இன்று இராணுவத்திலும், நட்சத்திர உணவு விடுதிகளிலும் அனைத்து ஜாதியாரும் இவற்றை உண்ணுகிறார்கள். இருப்பினும் பொது இடங்களிலும் இவ்வகை இறைச்சி மட்டும் அல்லாமல் பிற வகை ஆடு, கோழி இறைச்சிகளும் தவிர்க்கப்பட்டு மரக்கறி (சைவ) உணவும், மிகப்பெரிய சைவ உணவு விடுதிகளும் மேட்டிமையின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

மணமுறிவும், மறுமணமும், விதவை மறுமணமும் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் குறைந்தது 60% மக்களால் நேற்று வரை கைக்கொள்ளப்பட்டு வந்தன. இவை பெண் உரிமையின் அடையாளங்களாகும். தன்னுடைய குடும்பத்தில் இவை நடைபெறுவது 'நாகரிகக் குறைவு' அல்லது 'கேவலம்' என்கிற மனப்போக்கு இப்பொழுது பார்ப்பனரல்லாதோரிடையே பெருகி வருகிறது. இவ்வகை உணர்வுடைய நண்பர்களை நாம், 'பார்ப்பனியத்திற்குப் பலியாகிப் போனவர்கள்' என்று கொள்ளுதல் வேண்டும்.

ஜாதிக்குரிய நல்ல மரபுகளை மறைத்துக் கொள்வது என்று நாம் இதனைத்தான் குறிப்பிடுகின்றோம்.

மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கணிப்பொறி ஆகிய தொழிற்கல்லூரி படிப்புகளின் மீது பார்ப்பனரல்லாத நடுத்தர வர்க்கம் வெறிகொண்டு அலைகிறது. இதற்கான போலித்தனமான மனப்பாடக் கல்வியைத் தங்கள் பிள்ளைகளின் மீது திணித்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்தக் கல்வியின் மீது இவர்களுக்கு என்ன இப்படித் திடீர்க் கவர்ச்சி? மிகப்பெரிய பணக்காரன்கூட இந்தப் படிப்பினை நாடிப் போவது ஏன்? இந்தத் தொழில்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் கருப்புப் பணத்தின் ஊற்றாகவும், அதன் மூலம் அதிகார மய்யங்களை நெருங்குவதற்கு வாயிலாகவும் அமைந்து விடுகிறது. அதாவது மாதம் இரண்டு இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வியாபாரியை விட மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் டாக்டர் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரையோ, அமைச்சரையோ எளிதில் சந்திக்க முடியும். உலக அதிகார மய்யங்களாகிய அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ எளிதில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். இப்போதுள்ள தொழிற்கல்விப் படிப்பின் மீதான போலிக் கவர்ச்சி கருப்புப் பணத்தின் மீதான கவர்ச்சி. இது பொது நல உணர்வோடு பிறந்ததல்ல. உள்நாட்டுத் தொழில் நுட்பத்தோடு இந்தக் கல்வி முறை மாற்றம் பெறும் வரை இது எளிய மக்களுக்குப் பயன்படாது. இருப்பினும் பார்ப்பனர்களுக்கு மாற்றாக இந்தத் துறையில் பார்ப்பனரல்லாதார் நுழைகிறார்கள் என்பதில் மட்டுமே நாம் நிறைவு கொள்ளலாம்.

நேரடியாக அரசு அதிகாரப் பதவிகளை அடைவதில் சிலர் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். குறிப்பாக காவல்துறை, வனத்துறை சோதனைப் பணிப்பிரிவுகள் ஆகிய துறைகளில் பணி செய்பவர்கள் தங்கள் பதவிக்குரிய அதிகார வரம்பினை மிக எளிதாக மீறுவது கண்கூடு. தங்களின் பண வருவாயினை விட எசமான், துரை, அய்யா போன்ற சொற்களால் தங்களைப் பிறர் அழைக்க வேண்டும் என்ற உணர்வுடன் பலர் நடந்து வருகின்றனர். அதிகாரம் இங்கே போதையாக மாறிவிடுகிறது. தங்களுக்குப் பிறர் அடிமை செய்வதைப் போலத் தங்களை விட உயர்ந்த பதவிகளில் நிறைய அதிகாரத்துடன் இருப்பவர்களுக்கு இவர்கள் கூசாமல் அடிமை வேலை செய்யத் தயாராகி விடுவார்கள். ஆக மொத்தத்தில் பணிவு, சட்டம் என்ற பெயரில் சுயமரியாதை உணர்வும் விடுதலை உணர்வும் பார்ப்பனியத்தால் பலியிடப்படுகின்றன.

பார்ப்பனர் அல்லாத படித்தவர்களையும், பார்ப்பனருக்குத் துணை போகச் செய்வதில் பெரும் பங்கு வகிப்பன வெகுசனப் பத்திரிகைகளே. இந்தப் பத்திரிகைகளின் சிந்தனைத் தாக்கத்திற்கு இரையாகாத பார்ப்பனரல்லாதாரே இல்லை எனலாம். கல்கி, ஆனந்த விகடன், தினமலர் - இவை இலேசாக வாசிப்புப் பழக்கமுடைய பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றுகின்றன. இதைத் தாண்டி வாசிக்கும் ஆர்வமுடையவர்களை இந்தியா டுடே, மஞ்சரி, கலைமகள், பன்னாட்டு அறிவாளி சோவின் துக்ளக் மற்றும் தினமணி ஆகியவை ஏமாற்றும். ஆங்கில வாசிப்புப் பழக்கமுடையவர்களை எக்ஸ்பிரஸ், இந்து ஆகியவை மிக நாகரிகமான நடையில் எழுதி ஏமாற்றும். இவையே அன்றி மிச்சம் இருக்கிற திருப்பணிகளை குங்குமம், சுமங்கலி, வாசுகி, தினத்தந்தி, குமுதம் போன்ற சுத்தத் தமிழர்களின் பத்திரிகைகள் இலாப நோக்கத்திற்காகச் செய்து முடிக்கும்.

'சங்கராச்சாரியார் உலகத்திற்கே வழிகாட்டக் கூடியவர்’. எல்லோரும் ஜாதியை மறந்து ஒன்றாக இருக்க வேண்டும். ஆங்கில மீடியத்திற்குப் பிள்ளைகளை அனுப்புவது நாகரிகமான விசயம் ஆகிய கருத்தாக்கங்கள் மேற்கூறிய பத்திரிகைகளால் மீண்டும் மீண்டும் தமிழர்களின் மூளையில் திணிக்கப்படுகின்றன. இதே மூளைச் சலவை வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றால் நாள் தோறும் தொடர்ந்து செய்யப்படுகின்றது. அதன் விளைவாக தீபாவளிக்குச் சங்கராச்சாரியார் ஏன் தமிழர்களுக்கு ஆசி வழங்க வேண்டும். வானொலியில் ஏன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தெலுங்கிலும் வடமொழியிலும் பாடல் ஒலிப்பரப்பப்பட வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பும் சிந்தனைத் திராணியையே தமிழர்கள் இழந்து போய்விடுகிறார்கள். ஜாதிமல்லி என்ற படத்தை பாலசந்தர் (அய்யர்) எடுப்பதன் மூலம் மண்டல் அறிக்கைக்கு மீண்டும் நெருப்பு வைக்கிறார் என்பது இவர்களுக்கு உறைக்கவில்லை.

இப்பொழுது நமக்குத் தெளிவாகப் புரிகிறது. பார்ப்பனியத்தை எதிர்த்துப் போரிட விரும்பும் எவரும்,

1. பார்ப்பனியத்தின் பாதுகாவலராக இருக்கும் பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும்.

2. சுயநல காரணங்களுக்காகத் தெரிந்தே பார்ப்பனியத்திற்குத் துணை போகும் பார்ப்பனரல்லாதவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

3. அறியாமையால் பார்ப்பனியத்திற்குத் துணை போகின்றவர்களை விமர்சன ரீதியில் தெளிவுபடுத்தி பார்ப்பனியத்திற்கு எதிராக அணி திரட்ட வேண்டும்.

இந்தச் சிறிய பகுதி பார்ப்பனியத்தின் ஆதிக்க உணர்வினையும், பார்ப்பனிய எதிர்ப்பின் வரலாற்றினையும் ஓரளவு உங்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இது சுயமரியாதை உணர்வு கொண்டு சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கான முதல் பாடம் மட்டுமே ஆகும். விரிவான செய்திகளையும் கருத்துக்களையும் தெரிய விரும்புபவர்கள் முதலில் படிக்க வேண்டியன கால வரிசைப்படி பெரியாரின் அனைத்து எழுத்துக்களையும், பேச்சுக்களையும் ஆகும். பெரியாருக்குப் பின்னர் வந்த திராவிடர் இயக்கம் பற்றிய ஆய்வு நூற்களையும் அவசியம் படிக்க வேண்டியதாகும்.

பார்ப்பனியத்தோடு நாம் தொடுத்த போர் இன்னும் முடியவில்லை என்பதுதான்.

அடிக்குறிப்பு: "தென்புலத்து மன்பதை" - என்ற நூலிலிருந்து... - பேராசிரியர் தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும் - தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம், பக்கம்: 393-398)

No comments:

Post a Comment