ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள தடையா? ரத்து செய்தது நிர்வாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள தடையா? ரத்து செய்தது நிர்வாகம்

ஈரோடு, ஆக. 8 - மொடக்குறிச்சி அருகே ஜாதி மறுப்பு திருமணம் செய்த 70 குடும்பத்தினர் கோயிலில் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை ரத்து செய்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பெரிய காண்டியம்மன், அண்ணமார் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கீழ், 27 உப கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் ஜாதி மறுப்பு திருமண உறவு வைத்துள்ள, 70 குடும்பங்களை ஒதுக்கி வைத்து, வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மொடக்குறிச்சி வட்டாட்சியர் இளஞ்செழியன் தலைமையில் இரு தரப்பினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இதன் அடிப்படையில் எடுக்கப் பட்ட முடிவு குறித்து வட்டாட்சியர் இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு: 

ஜாதி மறுப்பு திருமண உறவு வைத் துள்ள குடும்பத்தினருக்கு, கோயில் வழிபாட்டு உரிமை மறுப்பது தவறான நடைமுறை. இது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். 

எனவே, ஜாதி மறுப்பு  திருமணம் செய்துகொண்ட குடும்பங்களில் இருந்து வரி மற்றும் நன்கொடைகளை கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக்  கொள்ள வேண்டும். மகாசபை கூட்டம், சுப நிகழ்ச்சிகள், அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு ஏதுவும் தெரிவிக்க கூடாது.

மேலும், அவர்களுக்கு சமுதாய வழக்கப்படி சீர் மற்றும் சடங்கு செய்யும் நிகழ்வுகள், குலதெய்வ வெண்கல சிலை வழிபாடு போன்றவற்றில் கலந்து கொள்ள, மறுப்புத் தெரிவிக்க கூடாது. 

இந்த உத்தரவு தொடர்பாக ஆட்சேபணை இருந்தால், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அல்லது அல்லது உரிய நீதிமன்றத்தை அணு கலாம்" என அவர் உத்தரவில் அந்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment