"நீட்" - அறுத்துக் கட்டும் அவாள்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

"நீட்" - அறுத்துக் கட்டும் அவாள்கள்


'நீட்' ஏன் கூடாது என்று கூறுகிறோம். அவர்கள் வேண்டும் என்கிறார்கள் ஏன் வேண்டும் என்கிறார்கள் என்பதற்கு துக்ளக் இதழின் ரீடர்ஸ் க்ளப் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு ரிடையர்ட் மகாராட்டிரா செக்ரட்டிரியேட் தமிழ் பார்ப்பன அதிகாரி ஒருவரின் பதிவே சான்றாக உள்ளது,  பிறகு இந்த நீட் என்கின்ற சூழ்ச்சி புரியும்.

"பிராமணக் குழந்தைகளே, நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு! பிராமணக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!

உங்களில் பலருக்கு டாக்டராக வேண்டுமென்ற கனவு இருக்கும். 

நேற்றுவரை, நாமெல்லாம் ஃபார்வர்ட் கம்யூனிட்டி நமக்கு டாக்டர் சீட்டெல் லாம் கிடைக்காது என்று நாமே சொல்லிக் கொண்டிருந்தோம். அதில் உண்மையும் இருந்தது ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நீட் தேர்வு முறை நமக்கு நல்ல பலன்களை தரத் தொடங்கியுள்ளது. இது தொடர் பாக சில புள்ளி விவரங்களை உங்க ளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 22 - அவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு சீட்களின் எண்ணிக்கை 2,652. 

கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சேருவதற்காக விண்ணப்பித்த முற்படுத்தப் பட்ட மாணவர்கள் (Forward Community - FC) எண்ணிக்கை 4.6 சதவீதம் மட்டுமே. அவர்களில் 48 பேர் மட்டுமே.  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முற்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே பிராமணர்கள் கிடையாது. 

அதில், நாட்டுக்கோட்டை செட்டியார், முதலியார், சைவப் பிள்ளைகள் என பல சமூகத்தவரும் அடங்குவர். ஆக, இந்த 48 பேரில் எத்தனை பிராமணக் குழந்தைகள் இருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆனால், இந்த முறை நீட் தேர்வு மூலம் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. 

முற்படுத்தப்பட்ட மாணவர்கள் 6.7 சதவீதம் பேர் நீட் தேர்வை நம்பிக்கையோடு எழுதினர். கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியான போது, திசி சமூகத்தினர் மட்டும் 8 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். 

அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட 2652 மாணவர்களில் 8 சதவீதம் பேர், அதாவது 211 பேர் முற்படுத்தப்பட்ட மாணவர்கள்.  கடந்த முறை வெறும் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 211 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னைக் காட்டிலும் 4 மடங்கு 400 சதவீதம் அதிக தேர்ச்சி விகித்த்தை முற்படுத்தப்பட்ட மாணவர்கள் சாதித்துள்ளனர்.  

இதற்கு காரணம் நீட் தேர்வு முறை. முன்பெல்லாம் மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. 

இப்போது அப்படியல்ல. இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள். 

(முன்னர் இவர்கள் எண்ணிக்கை 99 சதவீதமாக இருந்தது) 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 37 சத வீதத்தினர் பிற போர்டுகளில் பயின்றவர்கள். தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பிளஸ் 2 எழுதும் மாணவர்களில் பிற போர்டுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம் மட்டுமே.  

ஆனால், எம்.பி.பி.எஸ்.க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிற போர்டு மாணவர் எண்ணிக்கை 37 சதவீதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரேகாரணம் நீட்தேர்வுமுறை தான்.  எனவே, நீட் தேர்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். கடவுள் நம்பிக்கையோடு நீட் தேர்வுக்கு படித்தால், பிராமணக் குழந்தைகள் டாக்டராவது உறுதி. 

கட்டண விவரம் 

நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தால் ஆண்டுக்கட்டணம் ரூ.13,600 மட்டுமே. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தால் ரூ.11,600 மட்டுமே. (இந்தக் காலத்தில்  LKG க்கு வசூலிக் கப்படும் கட்டணத்தைவிட பல மடங்கு இது குறைவு.)  

நீட்தேர்வு முறையில் அரசு கோட்டாவின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கிடைத்தால், ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை கட்ட வேண்டும்.  தனியார் பல் மருத்துவமனையென் றால், ரூ. 2 லட்சம். நீட் தேர்வு மூலம் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் (Management quota) எம்.பி.பி.எஸ். கிடைத்தால் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். எனவே, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க செலவில்லாமல் எம்.பி.பி.எஸ். படிக்க முனைப்புடன் நீட் தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் சிபிஎஸ்இ மாணவர்களாக இருந்தால் இன்னும் சுலபம்.  ஏனெனில், நீட் தேர்வு வினாத்தாளை செட் பண்ணுவதே சிபிஎஸ்இ போர்டு தான். எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் பாடங்களை (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) ஒழுங்காகப் படித்தாலே போதும். நீட் தேர்வை சிறப்பாக எழுத முடியும். வருங்கால பிராமண சமுதாயம் நிறைய டாக்டர்களை உருவாக்க வேண்டும். அதற்கு முதற்படி, நீட் தேர்வில் நிறைய பிராமணக் குழந்தைகள் நம்பிக்கையோடு பங்கேற்க வேண்டும்.  எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் பிராமணக் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 5 சதவீதத்துக்குமேல் இருந்தால், கிட்டத்தட்ட 300 பிராமணக் குழந்தைகள் ஆண்டு தோறும் டாக்டர்களாக வாய்ப்புண்டு.

எனவே, உங்களுக்கு தெரிந்த பிராமணக் குழந்தைகளை நீட் தேர்வு எழுத உற்சாகப்படுத்துங்கள். மீண்டும் பழைய உன்னதமான காலத்தை மீட்டு எடுப்போம். இது ஒன்றும் முடியாத காரியமல்ல." 

நாங்கள் நீட்தேர்வை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம் என்று இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு புரியும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment