நாங்குநேரி: ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

நாங்குநேரி: ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம்!

ஜாதிவெறி பள்ளி மாணவர்களிடம் இருக்கலாமா?

ஜாதி ஒழிப்பு - சமூகநீதி விழிப்புணர்வுக்காக தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!ஜாதிவெறி பள்ளி மாணவர்களிடம் இருக்க லாமா? ஜாதி ஒழிப்பு - சமூகநீதி விழிப்புணர் வுக்காக தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று  ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பி காபதி இணையரின் மகன் (வயது 17) பன்னி ரெண்டாம் வகுப்பும், மகள் (வயது 14) ஒன்பதாம் வகுப்பும் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங் களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. 

பள்ளிக்குச் சென்றவரிடம் ஆசிரியர்கள் விசா ரித்தனர். அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னைத் தாக்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள வீட்டில் அம் மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த அவர்களின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

வேதனையான செய்தி!

அரிவாள் வெட்டால் கடுமையாகப் பாதிக் கப்பட்ட மாணவர் சின்னத்துரையும், அவரது தங்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்னும் செய்தி நம்மை பெரிதும் வேதனையடையச் செய்கிறது.

கல்வி பெற வேண்டிய பள்ளிப் பருவத்தில் ஜாதி வெறி உணர்வும், அதனால் மனதில் குரோத - வெறுப்பு உணர்ச்சியும் ஏற்படுவதும், அது அம்மாணவர்களை அரிவாள் தூக்கிக் கொடூரமான கொலைவெறித் தாக்குதலைத் தொடுக்கும் அளவுக்குத் தூண்டியிருப்பதும் அதிர்ச்சிக்கும், தீவிர சிந்தனைக்கும் நம்மை ஆளாக்குகிறது. 

தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க முயற்சிகள்!

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டும், பின்தங்கிய பகுதிகளில் வசிப்போருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், அரசுப் பள்ளி மாண வர்களுக்கும் எளிதில் கிடைக்காத வாய்ப்பு களெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற் காகத் தமிழ்நாடு அரசும், சமூகநீதிக்கான  சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் முனைப்புடன் செயலாற்றி வரு கின்றனர். ஏராளமான திட்டங்கள், ஆசிரி யர்கள், கல்வித்துறை அலுவலர்கள் உதவி யுடன் மாணவர்களின் சிந்தனையைச் செதுக் கவும், அவர்களைக் கலைத் துறை, அறிவியல், வாசிப்பு என்று பயனுள்ள வகையில் வழி நடத்தவும் பெரும் இயக்கத்தையே அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தகைய செய்திகள் அந்தப் பணிகளின் தேவையை இன்னும் அதிகப்படுத்துகின்றன.

பள்ளிக்கூடம் வெறும் புத்தகக் கல்வியை மட்டும் தரும் இடம் அல்ல; மனிதநேயத்தை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை உரு வாக்குவதற்கான அடித்தளம் என்னும் நோக்கில் செயல்பட்டு வரும் இவ் வரசுக்குப் பெற்றோரும், ஆசிரியர்களும், கல்வியாளர் களும், கலைத் துறையினரும், சமுகநீதி உணர்வாளர்களும் உடனிருந்து உதவ வேண்டியது அவசியமாகும்.

காவல்துறையும் - உளவுத் துறையும் 

தீவிர கவனம் செலுத்துக!

“இருட்டறையில் உள்ளதடா உலகம், ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே?” என்னும் புரட்சிக் கவிஞரின் கோபம் இன்றும் தேவை. ஜாதி உணர்வைத் தூண்டுகிறவர்கள் யாராயினும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிளம்பும் சின்னச் சின்னப் பொறிகளுக்குப் பின்னால் இருக்கும் தீக்குச்சிகள் யார் என்பதைக் காவல்துறையும், குறிப்பாக உளவுத் துறையும் தொடர்ந்து கவனித்துக் களையெடுத்திட ஆவன செய்ய வேண்டும்.

சாதாரணமாக ஜாதிப் பெருமைகள் பேசும் மனநிலைதான், அதை வன்முறை வரை வளர்த்துவிடுகிறது. மனிதரெனும் நிலையை இழக்க வைக்கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் நேற்று (11.8.2023) காணொலி ஒன்றில் மாணவர்களுக்கு விடுத் திருக்கும் உருக்கமான வேண்டுகோளும், எடுத்துக் காட்டியிருக்கும் செய்திகளும் மாணவர் களைச் சென்றடைய வேண்டும். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைக் கொண் டாடுவதன் வாயிலாக சமத்துவச் சிந்தனையை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு விரும்பு வதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே வேளையில், ‘பள்ளிகளில் சில மாணவர்கள் ஜாதி சின்னம் என்று கையில் கயிறுகளைக் கட்டி வருகிறார்கள்; அது எளிதில் மாணவர்கள் ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்தவும், ஒன்று திரளவும், வீண்பெருமைகள் சச்சரவுகளுக்கும் வழி வகுக்கிறது என்பதால், ‘பள்ளிகளில் இத் தகைய கயிறுகள் கட்டி வரக் கூடாது’ என்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்ட போது, அதை மத அடையாளம் என்று மடை மாற்றியது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பார்ப் பனர்கள் தான். 

ஜாதிக் கயிறுகளுக்கு 

ஆதரவு தெரிவித்தது யார்?

“கையில் கயிறை அகற்றச் சொன்னால், சிலுவையையும், தொப்பியையும் அகற்றச் சொல்வீர்களா?” என்று குதர்க்கமாகவும், மத வெறுப்புடனும் கேள்வி கேட்டவர்கள் யாரென்பதை அடையாளம் கண்டால், ஜாதி என்னும் கொடிய நெருப்பு அணையாது எரிந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவோர் யாரென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  ருத்திராட்சக் கொட்டை களையும், கடவுள் டாலர்களையும், பட்டை, நாமங்களையும், ஏன் பூணூலையும் கூட அரசு அகற்றச் சொல்லவில்லை என்பதை வசதியாக மறைத்துவிட்டு, ஜாதிக் கயிறு களைக் காப்பாற்றிய மகானுபாவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டால், இதன் பின்னணியில் இருந்து தூண்டிவிடுவோர் யாரென்பதையும் எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும்.

வெறுப்புணர்வைத் தூண்டும் இந்துத்துவா

ஆங்காங்கே ஜாதிப் பிரச்சினைகளை, ஜாதி வெறியைத் தூண்டுவதன் பின்னணியில் இந்துத்துவ சக்திகள் இருக்கின்றன என்பதை நம்மால் அறிய முடிகிறது. ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்துவது மட்டுமல்ல, ஒன்றுபட்டு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் பெரும்பான்மையான தமிழ் நாட்டின் எண்ணவோட்டத்தைப் பிளவு படுத்தும் நோக்கமும் இதன் காரணங்களாகும். ஏற்கெனவே, நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஜாதியப் பெருமிதங்களையும், ஜாதிய வெறுப் புணர்வுகளையும் மறைமுகமாகத் தூண்டி விடும் சதி, திராவிட அரசுக்கு எதிராக நடப்பதை உணர முடிகிறது. 

ஜாதி வெறியைத் தூண்டுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கிடுக!

ஜாதி ஒழிப்புக்கான திசையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைப் பின் னிழுக்கும் ஜாதி-மதவாதச் சக்திகளின் கூட்டணியை முறியடிக்க வேண்டும். ‘சோஷியல் எஞ்சினியரிங்' என்ற பெயரில் மக்களைப் பிளவுபடுத்த அவர்கள் பல மாநிலங்களிலும் செய்த முயற்சிகள் பெரு மளவில் தமிழ்நாட்டில் பலனளிக்காவிட் டாலும், அவர்களின் குறி தமிழ்நாடு என்ப தால், தொடர்ந்து அத்தகைய சூழ்ச்சிச் சதித் திட்டங்களை அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜாதி என்பது கட்டடமல்ல; போய் இடித்துவிட்டு வருவதற்கு! அது மக்கள் மூளையில் பரவியிருக்கும் நோய். அதை தொடர் பிரச்சாரத்தாலும், அறிவுப் புகட்ட லாலும் தான் ஒழிக்க முடியும். அதன் விளைவுகள் ஒடுக்குமுறைகளாகவோ, அடக்குமுறைகளாகவோ தோன்றும் வாய்ப்பு இருந்தால் அவற்றையெல்லாம் அரசும், சட்டமும் முன்னெச்சரிக்கையுடன் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலம் கடும் நடவடிக்கையும் எடுத்தல் அவசியமாகும்.

ஜாதி நோய்க்கு சிகிச்சையும் - 

நோய்த் தடுப்பும்!

நோய்க்குச் சிகிச்சை எவ்வளவு முக்கி யமோ, அதைவிட முக்கியம் நோய்த் தடுப்பு மருத்துவமும்கூட!

பிஞ்சு உள்ளங்களில் - குறிப்பாக மாண வர்களின் கல்விப் பயிற்சியில் சகோதரத் துவமும், தோழமையும், எப்போதும் வாழ்வில் தங்கும் வற்றாத பாசமும், ஊற்றெடுத்துப் பெருகவேண்டும். அதில் ஜாதி, மத, வெறுப்பு உணர்வை விதைப்பதோ, தூண்டுவதோ அத்தகைய குடும்பத்தவர்களுக்கும், ஊரார் களுக்கும், சமூகத்திற்குமே கேடு செய்து, பிறகு சமூகத்தின் தீரா தொற்றுநோய் போலப் பரவி, மக்களை பேதமெனும் பெருங் கொடுமை மனநோய்க்கு வாழ்நாள் அடிமை களாக ஆக்கிடும். மக்களுக்கு இதை நன்கு உணர்த்திடவேண்டும்.

பிரச்சாரம் பெருகட்டும்! மனிதம் பொங்கட்டும்!!

எனவே, இதனை எதிர்த்து, நெல்லை, குமரி மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு தீவிரப் பிரச்சாரக் குழுவை ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து மேற் கொள்வதுபற்றி விரைவில் அறிவிப்போம்! மக்கள் மன்றத்தை மனிதம் பொங்குவதாகவே வைத்திருக்கவேண்டும்.

இந்த சமூகநீதி மண்ணில் - பெரியாரின் பகுத்தறிவு பூமியில் இப்படிப்பட்ட ஜாதி வெறி, சமய வெறி விஷக் கிருமிகளை அடியோடு அகற்றவேண்டிய பணி, நமது அவசர அவசியப் பணியாகும்! 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.8.2023

No comments:

Post a Comment