அமைச்சர், பிரதமர் பேச்சு அவை நடத்தை விதிகளுக்கு முரணானது அவைக்குறிப்பில் இருந்து நீக்குக : டி.ஆர். பாலு கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

அமைச்சர், பிரதமர் பேச்சு அவை நடத்தை விதிகளுக்கு முரணானது அவைக்குறிப்பில் இருந்து நீக்குக : டி.ஆர். பாலு கோரிக்கை

சென்னை ஆக 12  ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ஆகஸ்ட் 9 மற்றும் 10-ம் தேதிகளில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, எ.வ. வேலு பேசி யதாகத் தெரிவித்த கருத்துக்கள், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி திமுக எம்பி டி.ஆர்.பாலு, மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "9.8.2023 மற்றும் 10.8.2023 ஆகிய தேதிகளில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் பதிலளித்துப் பேசுகையில், 5.8.2023 அன்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற் றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச் சர் எ.வ.வேலு ஆற்றிய உரையை, மக்களவையில் தவறாக மேற்கோள் காட்டி, கருத்துகளைப் பதிவு செய் துள்ளனர்.

ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மக்கள வையில் ஆற்றிய உரைப் பகுதிகள், அவையைத் தவறாக வழிநடத்தும் வகையிலும், அவர்களது விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்துவது போன்று இருப்பதாலும், அவதூறு பரப்பக்கூடிய மற்றும் குற்றம் சாட் டக்கூடிய வகையில் இருப்பதாலும், அவை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

மேலும், அமைச்சர் எ.வ.வேலு மக் களவையில் உறுப்பினராக இல்லை. அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் குறித்து, மக்களவை தலைவருக்கு போதிய முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல், அவர்கள் இருவரும் எந்தக் குற்றச்சாட்டும் எ.வ. வேலு குறித்துக் கூற முடியாது. எனவே, ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், 9.8.2023 மற்றும் 10.8.2023 ஆகிய தேதி களில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, எ.வ. வேலு பேசியதாகத் தெரிவித்த கருத்துகள், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே, அவற்றை நீக்கவேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், 5.8.2023 அன்று பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆற்றிய உரையின் காணொ லிக் காட்சி இத்துடன் இணைக்கப்பட் டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment