புதுடில்லி, ஆக.16 - நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப மாநில அரசுகளிடம் பேசுமாறு, ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 11 ஆம் தேதி முடிந்த நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகளின் நிலைக்குழு ஒரு முக்கியமான அறிக்கையை சமர்ப்பித் திருந்தது தெரிய வந்துள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான விவேக் தாக்கூர் தலைமையிலான இந்த நிலைக்குழு நாடு முழுவதிலும் 2022 - 2023 கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மீது ஒன்றிய அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதில், ’2022-2023 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் 62,72, 380. இவற்றில் 9,86,585 பணியிடங்கள் பல் வேறு காரணங்களால் காலியாகி நிரப்பப் படாமல் உள்ளன. இவற்றில், 7,47,565 துவக்கப்பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளில் 1,46,334 மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 92,666 பணியிடங்களும் காலியாக இடம் பெற்றுள்ளன.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றின் மீது தனது கருத்துகளை முன்வைத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ’இவற்றை உடனடியாக நிரப்பினால்தான் ஒன்றிய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் சதவிகிதத்தை விரைந்து அமலாக்க முடியும் என அந்த நிலைக்குழு கருத்து கூறியுள்ளது.
இந்த ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் வெளிப் படையாக இல்லை. இதை சரிசெய்ய, ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து நியமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.’ எனப் பதிவு செய்துள்ளது.
கல்வி என்பது ஒன்றிய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது சம்மந்தப் பட்ட மாநில அரசுகளின் கடமை என ஒன்றிய அரசு கூறியிருந்தது. இதை ஏற்க மறுத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கூறி அனைத்து மாநில அரசு களிடமும் ஒன்றிய அரசு பேசவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதை ஏற்று மத்திய கல்வித் துறை சார்பில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர் களை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் காலி நிலை
நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து கடந்த வாரம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான டி.ரவிகுமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சரான அன்னபூர்ணா தேவி பதி லளித்திருந்தார். தனது பதிலில் அமைச்சர், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 1,44,968 அதில் 1,43,215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment