சுதந்திர நாள் - 1947-2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

சுதந்திர நாள் - 1947-2023


1947இல் தலைநகர் டில்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடி ஏற்றிக்கொண்டு இருக்கிறார். அதே டில்லி, மேவாட் பகுதியில் (இன்றைய குர்காவ், நூஹ், பரிதாபாத் மாவட்டங்கள் அடங்கிய பகுதி) கடுமையான கலவரம், இசுலாமியர் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். சாலைகளில் கொலை வெறியாட்டக் கும்பல் பாகிஸ்தானில் ஹிந்துக்களை கொல்கின்றனர் முசல்மான்களுக்கு, இங்கே விருந்துவைக்கவேண்டுமா? என்று வெறியாட்டம் போட்டு வன்முறையில் இறங்குகிறார்கள். 

காந்தியார் தன்னுடைய பட்டினிப் போர் ஆயுதத்தை எடுக்கிறார். 

அதே நேரத்தில் மேவாட் சமஸ்தான மன்னர் சவாய் தேஜ்சிங் பிரபாகர் ஒரு அறிக்கை விடுகிறார். இந்தக் கலவரங்கள் அடங்க வேண்டுமென்றால் இசுலாமியர்கள் பாகிஸ்தான் சென்றுவிடுங்கள். அங்கு உங்களுக்கு பாதுகாப்பு உண்டு - நான் ஏற்பாடு செய்கிறேன் - ஆகவே சென்றுவிடுங்கள் என்று கோரிக்கை விடுகிறார். 

அப்போது வன்முறையில் தனது மனைவி, மகள்,  மருமகன் மற்றும் மூன்று பேரன்களை கண்களுக்கு முன்பாகவே பறிகொடுத்த மேவாடிகான்பிரஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சையத்து முத்தலீக் கூறுகிறார்.

ஏன் போகவேண்டும் நாங்கள் - அங்கே? இது ஹிந்துஸ்தான். எனது மண், இந்த மண் தான் எனது சதைகளில் உள்ளது, இந்த மண்ணில் ஓடும் நதிகள் தான் எனது ரத்தத்தில் ஓடுகிறது. 

எனது குடும்பத்தை இழந்தேன், அது வேதனைதான், ஆனால் எனது மண் அதைவிட எனக்கு மாண்பானது, இந்த மண்ணை விட்டு என்னை போகச் சொல்வது உயிரை மாய்த்துக்கொள் என்று கூறுவதை விடக் கொடுமையானது, 

எனது உடல் கூட இந்த மண்ணோடு தான் கலந்து மண்ணாகவேண்டும். ஜின்னாவிடம் அரசு கோரிக்கை விடுக்கட்டும் அங்குள்ள மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கச் சொல்லி, அதைவிட்டு விட்டுவிட்டு எங்களை போகச் சொல்வதற்கு இவர்கள் யார்? எனது உடல் கூட இந்த மண்ணைவிட்டுச் செல்லக்கூடாது, இந்த மேவாட் முசல்மான்கள் ஹிந்துஸ்தானில் தான் உயிர்விடுவார்கள். காரணம் ஹிந்துஸ்தான் எங்கள் உயிர், உடல், உதிரம் அனைத்துமே என்று முழங்கினார். 

இதனை அடுத்து மேவாட்டின் ஒட்டுமொத்த இசுலாமியர்களும் பாகிஸ்தான் செல்லும் முடிவை கைவிட்டு எங்களை கொலை செய்யுங்கள். ஆனால், எங்கள் உடல் கூட இங்கேதான் புதைக்கப்பட வேண்டும் என்று காந்தியாரின் வழியில் ஆங்காங்கே பட்டினிப் போராட்டத்தைத் துவங்கிவிட்டனர். வன்முறையாளர்கள் பின்வாங்கினர். இதுதான் மேவாட் (இன்றைய பரிதாபாத், குருகாவ், நூஹ் மாவட்ட) இசுலாமியர்களின் வீரவரலாறு. 

ஆனால், பாஜகவும் ஹிந்துத்துவ அமைப்பினரும் 2023 ஜூலை 31ஆம் தேதி வன்முறை வெறியாட்டம் நடத்தி இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டும். இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் என்று கூறிக்கொண்டு அலைகின்றனர். 

அம்மாநில பாஜக அரசு இசுலாமியர்களின் வீடுகளை, கடைகளை இடித்து அவர்களை நடுத்தெருவில் குடும்பத்தோடு வசிக்கவிட்டு மகிழ்ச்சி அடைகிறது. 

No comments:

Post a Comment