பிளாஸ்டிக்கைத் தின்னும் பூஞ்சை: சுற்றுச்சூழலுக்கு இது பயன் தருமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

பிளாஸ்டிக்கைத் தின்னும் பூஞ்சை: சுற்றுச்சூழலுக்கு இது பயன் தருமா?

"தானியங்கள் நிறைந்த கண்ணாடிக் குடுவை யிலிருந்து ஒரு காளான் முளைத்து எழுந்தால் எப்படி இருக்கும்? அப்போது அது பெரிய அதிசயமாகத் தெரியவில்லை. ஆனால் அந்த பூஞ்சை அடுத்து செய்த வேலை ஆச்சரியமானது" என்கிறார் சமந்தா. பயோம் என்கிற உயிரியல் நிறுவனத்தில் உள்ள முதன்மை உயிரித் தொழில்நுட்பவியலாளர் இவர்.

இந்த குடுவையை ஒரு பிளாஸ்டிக் பஞ்சால் மூடி வைத்திருந்தார்கள். அந்தப் பஞ்சைத் தின்றுவிட்டு பூஞ்சை வெளியில் வந்துவிட்டது. உயிரியல் அடிப் படையில் காப்பிடுத் தகடுகள் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில், முற்றிலும் புதிய ஒரு வழியை இந்தப் பூஞ்சை திறந்து வைத்திருக்கிறது. இப்போது இந்தப் பூஞ்சையை இன்னும் செயல்திறன் மிக்கதாக மாற்றி, ப்ளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்று பயோம் ஆராய்ந்து வருகிறது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கிப் போடும் பிளாஸ்டிக் ஒரு பெரிய பிரச்சினையாக உருமாறியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு வந்த க்ரீன்பீஸ் அறிக்கை, இதுவரை 6.3 பில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. அதில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது, மற்ற எல்லா கழிவுகளும் எரிக்கப்படுகின்றன அல்லது குப்பைமேடுகளில் சேர்க்கப்படுகின்றன.

இந்த நிலை இப்போது சற்றே முன்னேறியிருக்கிறது. அய்ரோப்பிய யூனியனில் 40% பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 2025க்குள் இது 50%ஆக அதி கரிக்கும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஆனாலும், தண்ணீர் பாட்டில்கள் செய்ய உதவும் பாலி எத்திலீன் டெரிதாலேட்  போன்ற சில வகை ப்ளாஸ்டிக்குகளை வழக்கமான முறைகளை வைத்து மறுசுழற்சி செய்ய முடியாது. இதுபோன்ற சூழலில் உயிரியல் முறைகள் நல்ல தீர்வைக் கொடுக்குமா?

பெட் மற்றும் பாலியூரிதேன் வகை பிளாஸ்டிக்கு களின் மீதும் தன் பூஞ்சையை ஜென்கின்ஸ் பரிசோ தித்துப் பார்த்தார். "நீங்கள் பிளாஸ்டிக்கை உணவாகக் கொடுத்தால் பூஞ்சைகள் அதை சாப்பிட்டுவிட்டு இனப் பெருக்கம் செய்து மேலும் பூஞ்சைகளை உருவாக்கு கின்றன. அதன்பிறகு அதிலிருந்து நாம் உணவுக் காகவோ தீவனத்துக்காகவோ ஆன்டிபயாட்டிக் உருவாக்கவோ பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்.

வேறு சிலரும் இந்த முயற்சியில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

பெட் பிளாஸ்டிக்கிலிருந்து கிடைக்கும் ஒரு மூலக் கூறான டெரிதாலிக் அமிலத்தோடு வேதிவினை புரியும் ஒருவகை ஈ.கோலை பாக்டீரியாவை மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலமாக எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியா, டெரிதாலிக் அமிலத்தை சுவையூட்டி யான வெனிலினாக மாற்றுகிறது.

"இந்த ஆய்வு இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. இதன் செயல்திறனை அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் இன்னும் பல வழிகள் கண்டுபிடிக்கப்போகிறோம்" என்கிறார் பல்கலைக் கழகத்தின் உயிரியல் துறையைச் சேர்ந்த முனைவர் ஜோனா சாட்லர்.

"ஆனால் இதன் ஆரம்பகட்டமே அருமையானது தான். அடுத்தடுத்த மேம்பாடுகள் நடந்தபிறகு இது எதிர் காலத்தில் வணிக ரீதியாகவும் வெற்றிபெறும்" என்கிறார்.

லெய்ப்ஸிக்கைச் சேர்ந்த ஹெம்ஹோல்ட்ஸ் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மய்யத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, பாலியூரிதேனை சாப்பிடக்கூடிய பாக்டீரி யாவைக் குப்பை மேட்டிலிருந்து கண்டறிந்திருக் கிறார்கள். இதற்கு சூடோமோனாஸ் 1 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பிடும் ப்ளாஸ்டிக்கில் பாதி அளவை உடல் எடையை அதிகரிப்பதற்கு இந்த பாக்டீரியா பயன்படுத்திக் கொள்கிறது. மீதி அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவாக வெளியேற்றப் படுகிறது.

இந்த பாக்டீரியா நொதிகள் மூலமாக ப்ளாஸ்டிக்கை உடைக்கிறது. இந்த நொதிகளை உருவாக்கும் மரபணுக்களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற முறைகள் குறைவான செலவில் பயன்பாட்டுக்கு வருமா என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

"பெட் பிளாஸ்டிக்கை நொதிகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் மூலமாகவும் உடைக்கும் அறிவியலில் இன்னும் பல ஆராய்ச்சிகள் நடக்கவேண்டும். ஆனா லும் இப்போது இருக்கிற, தண்ணீரை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பங்களோடு இவை போட்டி போடவேண்டியிருக்கும்" என்கிறார் மிச்சிகன் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரமணி நாராயண்.

No comments:

Post a Comment