ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 28  ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்மீது வன்கொடுமை நிகழ்த்தப்படுவதால்  இடைநிற்றலும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மை கழகம், தேசிய தொழில்நுட்பக்கழகம் போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையில் வெளியேறியிருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

நேற்று (27.7.2023) நாடாளுமன்றத் தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் அளித்த பதிலில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந் துள்ளன. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட சார்ந்த மாணவர்கள் 2019 இல் 186, 2020 இல் 287, 2021 இல் 318, 2022 இல் 229 மாண வர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடை நிற்றல் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல, மற்ற ஒன்றிய கல்வி நிறுவனங்களிலும் இடைநிற்றலின் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. 

மேலும், இதே காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த 33 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வும் அமைச்சரின் புள்ளி விவரம் உறுதிப்படுத்துகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கல்வி நிறுவனங்களில் இடை நிற்றலும், தற்கொலைகளும் ஏன் நிகழ்கிறது? எதற்காக நிகழ்த்தப்படுகிறது? குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கு எதிராக ஒன்றிய கல்வி நிறு வனங்களில் வன்கொடுமை நிகழ்த்தப் படுவதால் இத்தகைய இடை நிற்றலும், தற்கொலைகளும் நிகழ்வதாகக் கூறப் படுகிறது. 

இது பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கவலையைத் தருகிறது. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது பொருளாதார வளம் மிக்க நாடாக இந்தியா உயரும் என்று நேற்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பேன் என்று கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.  

கடந்த 80 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாள் தோறும் அப்பாவி இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படு கிறார்கள். இதுவரை சுதந்திர இந்தியா காணாத பாலியல் கூட்டு வன்கொடுமை மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிராக நிகழ்ந்து வருகிறது. இதை சமூக ஊடகங்களில் பார்க்கிற நாட்டு மக்கள் எதிர்கொள்கிற மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் அளவே இருக்க முடியாது. மணிப்பூர் சகோதரிகளுக்காக நாடே இன்றைக்குக் கண்ணீர் வடிக்கிறது. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்காத பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டு வந்திருக் கிறார்கள்.  ஆனால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரோம் நகரம் தீப் பற்றி எரிந்து கொண்டிருக்கிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக பிரதமர் மோடி வாய்மூடி மவுனியாக இருக் கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் சொல்லத் தயாராக இல்லை. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார். 

குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போது அதைத் தடுக்க தவறிய மோடியும், அமித்ஷாவும் இன்றைக்கு பிரதமராகவும், உள்துறை அமைச்சராக வும் இருக்கிறார்கள். ஆனால், மணிப்பூர் கலவரத்தின் போது அப்பாவி பெண் களுக்கு எதிராக நடக்கிற வன்கொடு மைக்கும், தாக்குதலுக்கும் நாடாளு மன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினை விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment