அரசு இடத்தை அபகரித்தாரா? அமைச்சர் க. பொன்முடி மீதான வழக்கு தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

அரசு இடத்தை அபகரித்தாரா? அமைச்சர் க. பொன்முடி மீதான வழக்கு தள்ளுபடி

சென்னை, ஜூலை 7 தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை சிறீநகர் வடக்கு காலனி பகுதி யில், அரசுக்குச் சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக 2003 ஆகஸ்ட் 27-ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் க.பொன்முடி, அவருடைய மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு, தற்போதைய சென்னை துணை மேயர் மகேஷ்குமார் உள்பட 10 பேர்மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, அமைச்சர் க.பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகிய மூன்று பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து, சட்ட மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப் பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், பொன்முடி உள்ளிட்ட மற்ற ஏழு பேர்மீதான வழக்கில், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப் பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, நேற்று (6.7.2023) தீர்ப்பளிக்கபட்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் க.பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் நீதிபதி ஜெய வேல், ``குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங் களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே சரஸ்வதி, புருபாபு, கிட்டு ஆகியோர் இறந்துவிட்ட காரணத்தால், அவர்கள்மீதான வழக்கு கைவிடப் படுகிறது. பொன்முடி உள்பட மற்ற ஏழு பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப் படுகின்றனர்" என்று தெரிவித்திருக் கிறார்.


No comments:

Post a Comment