காவிரி நீரை தாமதமின்றி வழங்கிட உத்தரவிடுக! முதலமைச்சர் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

காவிரி நீரை தாமதமின்றி வழங்கிட உத்தரவிடுக! முதலமைச்சர் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார்

சென்னை, ஜூலை 21- காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கருநாடகம் திறந்துவிடாததால், தமிழ் நாட்டில் தற்போது குறுவை சாகு படிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித் தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று  கோரியும்,  ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 19.-7.-2023 அன்று எழுதியுள்ள கடிதத்தை,  தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்  ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சரை நேற்று (20.-7.-2023) புதுடில்லியில் நேரில் சந்தித்து வழங்கினார்.  

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத் தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது என்றும், 2018 பிப்ரவரி 16 ஆம் நாளிட்ட  உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்ட வணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண் டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.   

இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே என்றும், இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ள  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர் வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக் கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடை நிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலு வரை பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 

தென்மேற்கு பருவமழை துவங்குவ தில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கருநாடகம் தண்ணீர் திறந்து விட வில்லை என்றும், இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்றும், தற் போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும் என்றும் தெரிவித்துள்ள  தமிழ்நாடு முதலமைச்சர்   தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை குறைவாக இருப்ப தால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும், தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கருநாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும் எனவும்  முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் கடந்த 5.-7.-2023 அன்று  ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரைச் சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கருநாடகத்திற்கு அறிவுறுத்து மாறு கேட்டுக் கொண்டதை தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள   முதலமைச்சர்  3.-7.-2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்ற தாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4-.7.-2023 தேதியிட்ட தனது கடிதத்தில்,  உச்சநீதிமன்றத்தால் திருத் தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கருநாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கருநாடக அரசு,  உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தக் கடினமான சூழ்நிலையில், கருநாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ் நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சி னையில்  ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு,  உச்ச நீதிமன்றம் வகுத் துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கருநாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிடுமாறு  தமிழ்நாடு முதல மைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment