ஜெர்மனியில் திருவள்ளுவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

ஜெர்மனியில் திருவள்ளுவர்!

(ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழரும், பெரியாரிய கொள்கையாளருமான வி.சபேசன் அவர்களின் செய்தி)

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன!

ஜெர்மனியின் டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள"Rheinischestr" என்னும் முதன்மையான வீதியின் மய்யப் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பெரும் பணியை முன்னெடுத்திருக்கிறோம். இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்! 

திருவள்ளுவர் சிலை ஜெர்மனியிலேயே செய்யப் படுகிறது. கத்தரீனா பொக் என்னும் ஜெர்மனிய சிற்பி ஒருவர் சிலையை வடிவமைக்கின்றார். அநேகமாக திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த முதலாவது அய்ரோப்பிய சிற்பி எனும் பெருமையை இவர் பெறுவார்! 

முதலில் திருவள்ளுவர் சிலையின் சிறிய மாதிரி வடிவம் செய்யப்பட்டது. அப்பொழுது நாம் அடிக்கடி பட்டறைக்கு  சென்று மாதிரி சிலையைப் பார்வையிட்டதோடு, செய்ய வேண்டிய திருத்தங்களையும் கூறினோம். 

சிலையின் தோற்றத்தில் எங்களுக்குத் திருப்தி ஏற்படும் வரை சிற்பி கத்தரீனா  மீண்டும், மீண்டும் சில திருத்தங்களை செய்து தந்தார். இது நாம் அனைவரும் இணைந்து திருவள் ளுவர் சிலையை உருவாக்குவது போன்ற மகிழ்வான உணர்வைக் கொடுத்தது!

திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம் 3 மீட்டர் ஆகும். 1.5 மீட்டர் உயரத்தில் பீடமும், அதற்கு மேல் 1.5 மீட்டர் உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைய இருக்கிறது. தற்பொழுது 1.5 மீட்டர் உயரமான மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது. அதையும் நாம் பார்வை யிட்டு சம்மதத்தை தெரிவித்ததன் பிற்பாடு, இறுதியான சிலை வடிவமைக்கப்படும்!

மறுபுறம் பீடம் அமைப்பதற்காக, அந்த வேலையைப் பொறுப்பெடுத்துக் கொண்ட நிறுவனத்தினர் சிலை அமைகின்ற இடத்தில் மண் மாதிரிகளை பெற்றுக் கொண்டு பரிசோ தனைகளை மேற்கொண்டார்கள். சில முடிவுகள் வந்து சேர்ந்ததும் இரண்டு, மூன்று வாரங்களில் பீடம் அமைக்கின்ற வேலை ஆரம்பமாகும் என்று எமக்கு அறியத் தருகிறார்கள்!

எல்லோருமாக இணைந்து திருவள்ளுவருக்கு சிறப்பான தொரு  சிலை அமைப்போம்!

தகவல்: வி.சி.வில்வம்


No comments:

Post a Comment