பத்திரிகையாளரையும் தாக்கிய பா.ஜ.க. எம்.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

பத்திரிகையாளரையும் தாக்கிய பா.ஜ.க. எம்.பி.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இது வரை கைது செய்யப்படாத ஒரே நபர் மல்யுத்த வீரர் பிரிஜ் பூஷன் எம்.பி. மட்டுமே!

இந்திய குற்ற வரலாற்றில் பாஜகவின் மாபெரும் சாதனை. தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தில் கூட திமிரைக் காண்பிக்கிறது பாசிசம். 

டில்லி காவல்துறையின் இதுவரையிலான விசாரணை யில் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன் கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசமாக சீண்டுவது பேசுவது போன்ற குற்றங்களுக்காக “விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்” என்று டில்லி காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

குற்றப்பத்திரிகையில், 6 மல்யுத்த வீராங்கனை களின் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சிகளின் உறுதிப் படுத்தும் அறிக்கைகளை டில்லி காவல்துறை சேர்த்துள்ளது.

என்னென்ன குற்றச்சாட்டுகள்?

“நான் உணவு விடுதியில் இரவு உணவிற்கு வெளியே இருந்தேன், குற்றம் சாட்டப்பட்டவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) என்னை அவரது உணவு மேசைக்கு அழைத்தார். என் மார்பில் கையை வைத்து கேவலமாக நடந்து கொண்டார். 

“நான் அறையில் படுத்திருந்தேன், குற்றம் சாட்டப் பட்டவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தார். என் அனுமதியைப் பெறாமல் என் டி-ஷர்ட்டை இழுத்தார். மல்யுத்த சம்மேளன அலுவலகத்தில், நான் குற்றம் சாட்டப்பட்டவரின் அறைக்கு அழைக்கப்பட்டேன்; என் சகோதரனை வெளியே நிற்கும்படி கேட்டுக் கொண்டார். குற்றம் சாட்டப் பட்டவர் கதவை மூடிக்கொண்டார். என்னைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு வலுக் கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்

 “அவர் என்னை என் பெற்றோருடன் தொலைபேசியில் பேச வைத்தார். குற்றம் சாட்டப்பட்டவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) என்னை அவரது படுக்கைக்கு அழைத்தார்.  

“நான் கடைசி வரிசையில் (அணி ஒளிப்படத்திற்காக) நின்று கொண்டிருந்தேன். குற்றம் சாட்டப்பட்டவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) வந்து என்னுடன் நின்றார்.  

“என்னுடன் ஒளிப்படம் எடுப்பதற்காக, அவர் எனது தோளைப் பிடித்து இழுத்தார். என்னைப் பாதுகாத்துக் கொள்ள, நான் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து விலகிச் செல்ல முயற்சித்தேன். மிகவும் புத்திசாலித்தனமாக செயல் படுகிறாயா? எதிர்காலத்தில் போட்டிகளில் விளையாட விருப்பம் இல்லையா? என்று கேட்டார்.

இந்த 6 குற்றச்சாட்டுகளும் 6 மல்யுத்த வீராங் கனைகள் அளித்த புகார்களை விசாரித்து அந்த சமயத்தில் இருந்த சாட்சியங்களை விசாரித்து பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம் வாங்க இவர்களின் பாலியல் இச்சைக்கு பலியாகித்தான் பதக்க போட்டிக்குச் செல்ல முடியும் என்ற நிலை வெட்கப்பட வைக்கிறது.

மேலும் இது மாதிரிநிகழ்வுகள் இனி வரும் வீராங் கனைகளை உளச்சோர்வடைய செய்யும்.. இது நாட்டு நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல் இல்லையா? அதை விடக் கொடுமை இந்த ஒழுக்கம் கெட்ட ஆளை இன்னும் விசாரிக்கவோ - கைது செய்யவோ இல்லை என்பதுதான்! இது இந்தியாவில் சட்டத்திற்கு என்ன மரியாதை என்ற கேள்விக்கு உள்ளாக்குகிறது. இது தான் பாசிசத்தின் உண்மையான முகம்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட உடன் பெண் ஊடகவியலாளர் இவரிடம் கேள்வி கேட்ட போது - பொது மேடையிலேயே காமிராவின் முன்பே பெண் ஊடக வியலாளரை 'சீ போடி' என்று பேசியுள்ளார். மேலும் அவரது கையை காரின் கதவில் வைத்து நசுக்கப் பார்த்தார்  - அவர் சிறிது சுதாரித்த போதும் அவரது ஒலி வாங்கி (மைக்) கீழே விழுந்து உடைந்து போனது.  பொது இடத்தில் காமிராவிற்கு முன்பாக பெண் ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை குறித்து ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகளிர் உரிமை வாரியத்தின் உறுப்பினர் குஷ்பூ சுந்தர் போன்றோர் இந்த நிமிடம் வரை வாயைத் திறக்கவில்லை!

பி.ஜே.பி.காரர் என்றால் எந்த எல்லைக்கும் செல்ல லாமா? அத்துமீறலில் ஈடுபடலாமா?

தார்மீகத்தைப்பற்றி வாயில் நுரை தள்ளப் பேசு வோரின் யோக்கியதையைத் தெரிந்து கொள்வீர்! 

No comments:

Post a Comment