தமிழ்நாடு ஆளுநரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தேசிய தலைவர்கள் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

தமிழ்நாடு ஆளுநரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தேசிய தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடில்லி ஜூலை 1 அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேசிய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கி கடந்த 29.6.2023 அன்றிரவு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப் பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை இல்லாமல் ஆளுநர் எடுத்த நடவடிக்கை அரச மைப்புச் சட்டத்தை மீறியதாக கூறி அனைத்துத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக நள்ளிரவில் ஆர்.என்.ரவி அறிவித்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தேசிய அளவிலும் கண்டனங்கள் குவிந்துள்ளன. அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. 

இதுபற்றி தலைவர்களின் கண்டன அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி: இந்திய அரசமைப்புச் சட்டம் எந்த அளவுக்குப் புதைக்கப்பட்டுள்ளது என்பது திகைக்க வைக்கிறது. நமது மதச் சார்பற்ற ஜனநாயக குடி யரசை அழிக்கும் மோடி அரசு தோற் கடிக்கப்பட வேண் டும். 

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக நீக்க வேண்டும். ஆளுநருக்கு அவரின் வரம்புகள் எதுவும் தெரிய வில்லை. இது போன்ற அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயல்களை ஆளு நர் செய்து இருக்கக் கூடாது. தனது பொறுப்புகள் என்னவென்றும் அரசமைப்புச் சட்டம்பற்றியும் ஆளுநருக்குத் தெரியவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே: ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக அல்ல, பா.ஜ.க.வின் ஆளுநர் போல் செயல்பட்டுள்ளார். அவரது நடவடிக்கை சர்வாதிகாரம். இதில் அரசமைப்புச் சட்ட மும், ஜனநாயகமும் எங்கே இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே இதுபோன்ற நிகழ்வு நடக்குமானால், மற்ற மாநிலங்களிலும் நடக்கலாம். 

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன் பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மீண்டும் தனது அதிகார வரம்பை மீறி, சாகசச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மோடி அரசில், அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான போர் நாளுக்கு நாள் அசிங்கமாகி வருகிறது. கூட்டாட்சி அமைப்பை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. 

மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ: ஆளுநரின் நடத்தை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று. தமிழ்நாடு அரசியலில் தலையிடுவது மட்டுமல் லாமல், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளிலும் தலையிட்டு மேலும் சில தவறான நடவடிக்கைகளை ஆளுநர் ரவி எடுத்துள்ளார். அவர் ஆளுநர் பதவியை வகிக்க தகுதி இல்லாதவர்.

No comments:

Post a Comment