நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து ஒலி முழக்கப் போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து ஒலி முழக்கப் போராட்டம்!

 பிரதமரே, அவைக்கு வாருங்கள்! 

மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்

புதுடில்லி, ஜூலை 27  மக்களவையில் எதிர்க்கட்சியினர், ”பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்” என்று உரக்க முழக்கம் எழுப்பினர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத் தால் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் பல ஒத்திவைப்புகளைக் கண்டுவரும் சூழலில் இன்று (27.7.2023) காலை அவை கூடியதும் பிரதமர் அவைக்கு வரவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியு றுத்தியதால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார். எதிர்க்கட்சியினர், ”பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப் பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்” என்று உரக்க முழக்கம் எழுப்பினர்.

மோடி Vs இந்தியா முழக்கம்

மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பெருமைகளை அடுக்கி உரைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சியினர் பிரதமர் அவைக்குவர வலியுறுத் தியும், மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தியும் பேசினர். அப்போது என்டிஏ கூட்டணியினர் ‘மோடி, மோடி..’ என்று குரல் எழுப்ப,  ‘இந்தியா’ கூட்டணியினர் ‘இந்தியா, இந்தியா’ என்று குரல் எழுப்பினர். இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்ப அவை அதிர்ந்தது. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் முழக்கம் தொடர்ந்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.

கருப்புச் சட்டையில் வந்த எம்.பி.க்கள்: 

அவைக்கு இன்று இ ந் தி யா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பலரும் கருப்புச் சட்டை அணிந் தும் அப்படியில்லாதோர் கையில் கருப்புத் துணி கட்டியும் வந்திருந்தனர். ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சட்டா இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அளித்தப் பேட்டியில், "மணிப்பூர் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதி ராகவும், அங்கே நிகழும் காட்டு மிராண்டித்தனங்களைக் கண்டித்தும் இன்றைய தினம் இ ந் தி யா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். இது ஓர் அடையாளப் போராட்டம். மணிப்பூர் மக்களின் துயரில் நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை நிறுவுகிறோம். 

மணிப்பூரும் இந்தியாவின் பகுதி என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். மணிப்பூர் பற்றி எரியும் இவ்வேளையில் அரசு தனது அரசியல் சாசனக் கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மணிப்பூரில் ஆளும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

நாங்கள் நிர்ப்பந்திக்கபட்டோம் 

காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்: "நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச வாய்ப்பில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் பிரதமர் பேச வேண்டும் என்று நாங்கள் கோரு கிறோம். ஆனால் பிரதமர் ஏன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்று தெரிய வில்லை. அதனாலேயே நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நிர்பந்திக்கப்பட்டோம். அந்தத் தீர்மானத்தால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்பது எங்களுக்கே தெரியும். ஆனாலும் வேறு வழியில்லையே! நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் முன்னர் வந்து மணிப்பூர் பற்றி பேச வேண்டும்" என்றார்.

நாடாளுமன்றத்தை முடக்கப்போவதில்லை

 சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ராம் கோபால் யாதவ் அளித்த பேட்டியில், "இன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை. மாறாக கருப் புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். அல்லது உறுப்பினர்கள் கருப்புத் துணியை கையில் கட்டி வருவார்கள். நாங்கள் மணிப்பூர் விவகாரத்தில் அக்கறை காட்ட இன்னொரு காரணம் அது மியன்மார் எல்லையை ஒட்டி இருப்பதும்கூட. மியன்மாரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கே தீவிர வாதிகள் அட்டகாசமும் இருக்கிறது. இந்தச் சூழலில் மணிப்பூர் அமைதி முக்கியம்" என்றார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அடுத்த வாரம் விவாதம் நடக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment