முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி முரசம்!
சென்னை, ஜூன் 19 சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கும் இடங்கள் என்பவை வெறும் சலுகை களால் அல்ல; உறுதிமிக்கப் போராட்டங்களால் பெறப்பட்டவை என்று தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘‘உங்களில் ஒருவன்'' என்று தலைப்பிட்டு இன்றைய (19.6.2023) ‘முரசொலி'யில் எழுதியதாவது:
‘‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவ மனைக்கு அடுத்ததாகத் திருவாரூரில் கோட்டம் திறப்பு விழா என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையிலே, கோவையிலும் கலை ஞரின் புகழ் போற்றி, தி.மு.க.வின் வலிமையைக் காட்டும் வகையிலே தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணும் வகையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியிருக்கிறது. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலி மையை உடன்பிறப்புகளாகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் துணிந்து நடைபோடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டனக் கூட்டம் விடுத்துள்ள செய்தி.
குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் கழக உடன்பிறப்புகளை, ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள ‘கலைஞர் கோட்டம்' திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.''
- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment