ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி, ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மெரினா புரட்சி போன்று இளைஞர்கள், மாணவர்க ளிடையே அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் நீட் தேர்வு, பட்ட மளிப்பு விழா நடைபெறாததை எதிர்த்து புரட்சி, கிளர்ச்சி வெடித்தால்தான் தமிழ் நாடு ஆளுநர் அடங்குவார் போல் தெரிகிறதே?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 1: தங்களுடைய கணிப்பு சரிதான், சிறு பொறி பெருந்தீயாக மாறுவது தவிர்க்க இயலாததுதானே!

கேள்வி 2: இந்தியாவிலேயே தமிழ்நாடு ஆளுநருக்குத்தான் அதிகமாக செலவு செய்யப் படுகிறதாமே, ஆண்டிற்குப் பல கோடியாமே - இது தேவையா?

- மீ.முரளிதரன், மதுரை-9

பதில் 2: தனி ஆவர்த்தனம், கச்சேரிக்கான செலவோ? கண்காணிக்க வேண்டியது நிதித் துறையின் கடமையாகும்.

கேள்வி 3: செந்தில் பாலாஜி மீதான வன்மம் தனிப்பட்ட பகையா? திராவிட மாடல் மீதான கோபமா?

- க.காளிதாசன், காஞ்சி

பதில் 3: இரண்டும் சேர்ந்தே உள்ளன!

கேள்வி 4: கோவில்களுக்கு யானைகள் வாங்கக் கூடாது என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை?

- த.ஆறுமுகம், திருத்தணி

பதில் 4: இடைக்கால தடைவிதித்த நீதிபதிகள் ஆழ்ந்து பரிசீலித்து உருப்படியான செலவுகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் கோயில்கள் மூலமாகச் செய்வதற்கு வழி செய்யலாமே - ஏழை பக்தர்களின் பசி தீர்க்க அந்த நிதியைப் பயன்படுத்தலாமே! யானை - பூனையெல்லாம் எதற்கு? 'சூ'வுக்கு (ஞீளிளி) வாங்கி விடலாமே! கோயிலுக்கு அவை எதற்கு?

கேள்வி 5:  பிரதமர் மோடி திறந்து வைத்த கேதர்நாத் கோவில் தங்கத் தகடுகளைத் திருடி விட்டு பித்தளையை வைத்துள்ளார்கள், குற்ற வாளியை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்கிறதே உத்தரகாண்ட் காவல்துறை?

- வே.சீனிவாசன், வந்தவாசி

பதில் 5: பகவானும் ஏமாந்தார்! அரசுகளும் 'கோட்டை' விட்டன! இரட்டை என்ஜினின் பெருமையைப் பார்த்தீர்களா?

கேள்வி 6: மணிப்பூர் எரியும்போது அமெரிக்கா விற்குச் சென்று 'நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்' என்று கூறுகிறாரே பிரதமர் மோடி, இவர் என்ன வேற்றுக் கோள் மனிதரா?

- த.சுப்பிரமணியன், திண்டிவனம்

பதில் 6: தலைசிறந்த வித்தைக்காரர் அல்லவா? எவ்வளவு அருமையான பிரதமர் நமது பிரதமர்! பார்த்தீர்களா?

கேள்வி 7: ஜிதன் ராம் மாஞ்சி மதில் மேல் பூனையாக இருந்து தற்போது காவிக்கூட்டத்தின் பக்கம் தாவிவிட்டாரே?

- தி.வேலுசாமி, மதுரை

பதில் 7: அரசியல் 'சடுகுடு' அவரது வாடிக்கை யான பொழுதுபோக்கு ஆயிற்றே! அதை விட்டு விட அவரால் முடியுமா?

கேள்வி 8: "ஹிந்தித் திணிப்பை உயிரைக் கொடுத்தும் தடுப்போம்" என்று தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா கூறியுள்ளாரே?

- மா.ராதாகிருஷ்ணன், நெல்லை

பதில் 8: அப்படியா? வரவேற்க வேண்டிய அறிவிப்பு அவருடையது! ஹிந்தி எதிர்ப்பு அகில இந்திய எதிர்ப்பாக நாளும் மாறி வருகிறதே!

கேள்வி 9: "பாகிஸ்தான் தனது பாவங்களுக்குத் தண்டிக்கப்படுகிறது" என்று சாமியார் முதல மைச்சர் கூறியுள்ளாரே?

- பா.மணிமொழி, வேளச்சேரி

பதில் 9: சாமியார் வரிசை வாய்ப்பு எப்போதாம்?

கேள்வி 10: அன்று ராம்நாத் கோவிந்த் பிரம்மா கோவில் வாசலில் வைத்து திருப்பி அனுப்பப் பட்டார்? இன்று திரவுபதி முர்மு கட்டைக்கு அப்பால் நின்று சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார்? முன்னேற்றம் என்பது இதுதானா?

- வே.சுந்தரமூர்த்தி, புரசைவாக்கம்

பதில் 10: இதுதான் 'சப் கா சாத்', 'சப்கா விகாஸ்', 'சப்கா விஸ்வாஸ்' போலும்!


No comments:

Post a Comment