எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைப்பு: அச்சப்படும் பாஜக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைப்பு: அச்சப்படும் பாஜக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், ஜூன் 26 -  எதிர்க் கட்சிகள் ஒன்றிணைப்பு பாஜக வுக்கு அச்சத்தை ஏற்படத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (25.6.2023) நாகர்கோவிலில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான 

பாலியல் வன்முறை

பெண்களுக்கு எதிரான வன் முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள் ளது. சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரதத்தை படித்தால் சுகப் பிரசவம் நடக்கும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது.

சட்டமன்றம், நாடாளுமன்றத் தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தமிழ் நாட்டில் உள்ளாட்சி பொறுப்பு களில் பெண்கள் இருந்தாலும், அதிகாரம் அவர்கள் சார்ந்த ஆணின் கையில் உள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப வன்முறை, பாலியல் வன் முறை அதிகரித்துள்ளது. 

2019_-2020ஆ-ம் ஆண்டு கணக் கெடுப்பின்படி அதிகமான குடும்ப வன் முறை நடந்ததில் இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆ-வது இடத்தில் உள் ளது.

சிதம்பரத்தில் தீட்சிதர் ஒருவர் குழந்தைத் திருமணம் செய்த விவ காரத்தில் கைது செய்யப்பட்டார். ஆளுநர் இந்த நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும். ஆனால் அவர் தீட்சிதர்களுக்கு ஆதரவாக காவல்துறையை விமர்சித்து பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை விமர்சிக்கும் பாஜக

ஆளுநர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார். சனாதன தர் மத்தை எதிர்த்து பேசிய வள்ளலா ரையே சனாதன தர்மத்தின் உச்சம் என்று பேசி இருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார். பாட்னாவில் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருப்பது பா.ஜனதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் போது மாறுபட்ட கருத்துகள் இருக்கத்தான் செய்யும். தமிழ் நாட்டில் அண்ணாமலை தலை வராக இருந்தால் தேர்தல் கூட் டணிக்கு வரமாட்டோம் என்று அ.தி.மு.க.வினர் கூறினார்கள். ஆனால் கூட்டணி வைக்காமல் போய்விடுவார்களா? 

விலைவாசி உயர்வுக்கு பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கைதான் காரணம். மின் கட்டணத்தை தற் போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள் ளார்கள்.

அமலாக்கத்துறை மூலம் மிரட்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண் டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறை கள் உள்ளன. அதை மீறி அமலாக் கத்துறை செயல்பட்டுள்ளது. 

முறைப்படி சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத்துறை மூலமாக எதிர்க் கட்சிகளை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment