ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: "உதய சூரியன்" ஆளுநர் மாளிகையை அதிகம் சுடுகிறதோ?                                                                                                      - ஆறுமுகம், வேலூர்

பதில்: சூரியன் சுட்டெரித்தால், அந்த வெப்பத்தை ஆளுநர் மாளிகையால் தாங்க முடியாது. பொறுமைக் கும் ஓர் எல்லை உண்டு.

---

கேள்வி 2: குஜராத் மாநிலத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க - நான் முதலமைச்சராக இருக்கும் போது வெளிநாடுகளுக்குச் சென்றேன் - என்று 2014ஆம் ஆண்டு மோடி பேசியதை ஆளுநர் மறந்துவிட்டாரா?

விஷ்ணுபிரசாத், திருத்தணி

பதில்: மறதி மட்டுமா? மனநலப் பரிசோதனைக்காகவும் பரிதாபத்திற்குரிய அவருக்குப் பரிந்துரை தேவைப் படுகிறது!

---

கேள்வி 3: கோரமண்டல் ஷாலிமார் ரயில் விபத்தில் அத்துறை அமைச்சர் 51 மணி நேரம் உழைத் திருக்கிறார் என்று தேவேகவுடா கூறியுள்ளாரே?

சிவசுப்பிரமணியம், வேளச்சேரி

பதில்: பாவம் தேவகவுடா! கருநாடகத் தோல்விதான் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் தந்த பரிசு என்பதால், பா.ஜ.க.வின் கதவுகளைத் தட்ட இப்படியெல்லாம் பேசிடும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார் போலும்!

---

கேள்வி 4:  புதிய நாடாளுமன்றத்தில் வரையப் பட்டுள்ள அகண்ட பாரத வரைபடம் பற்றி நேபாளம் கேள்வி கேட்ட போது அது அசோகர் காலத்து வரைபடம் என்று சமாளித்துள்ளார்களே? இவ்வளவு பயப்படுகிறவர்கள் ஏன் அகண்டபாரதம் பற்றி பேச வேண்டும்?

கோவிந்தசாமி, திண்டிவனம்

பதில்: ஒவ்வோர் ஆண்டும் கோட்சே நினைவு நாளில் (15 - நவம்பர்) - அஸ்திக் கலசத்தின் முன் ஆர்.எஸ்.எஸ். எடுக்கும் உறுதிமொழியில் உள்ள அகண்ட பாரதமும் அதுதானா? அட கோய பெல்ஸ் குருநாதர்களே!

---

கேள்வி 5: அமெரிக்காவில் ராகுல் பேசும் தமிழ் பற்றிற்கும் - மோடி பேசும் தமிழ்பற்றிற்கும் என்ன வேறுபாடு?

கவியரசு, திண்டுக்கல்

பதில்: ஒன்று இயல்பானது; மற்றது செயற்கையான நடிப்பு! நம் மக்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும்.

---

கேள்வி 6: இன்றும் கோவில் நுழைவு மறுக்கப்படுகிறதே?

மலர்மொழி, சேலம்

பதில்: பெரியாரும் - அம்பேத்கரும் என்றும் தேவைப்படுகிறார்கள் என்பதே அதன் பொருள்!

---

கேள்வி 7: நன்றாக சென்றுகொண்டு இருக்கும் ஆவின் நிறுவனம் குறித்து எதிர்மறையான செய்திகளை அதிகம் பரப்புகிறார்களே?

காத்தவராயன், மதுரை

பதில்: திட்டமிட்ட புளுகுப் பிரச்சாரம். ஆதாரமற்ற புனைவுகள்! அலட்சியப்படுத்தப்பட வேண்டும்.

---

கேள்வி 8: இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடாத தமிழ்நாட்டில் அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்று இல்லாமல் மேனாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.பி. - எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளின் அழைப்பிதழில் அவரைத் தவிர தனது குடும்ப உறுப்பினர்கள், ரத்த சொந்தங்களின் பெருக்குப் பின்னால் ஜாதியை இணைத்துக் குறிப்பிடும் நடைமுறை தொடங்கியுள்ளதே?

மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: இந்த நோயைக் கண்டித்து ஒரு பிரச்சார இயக்கத்தை கட்சித் தலைவர்களைக் கொண்டே துவங்கப்பட வேண்டும் - அவசரமாக.

---

கேள்வி 9: தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சரவையில் மிகச் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதை வைத்து ஜாதி, மதத் துவேசம் செய்தும், வாரிசு அரசியல் என்றும், பூதாகரமாக்கி விஷமப் பிரச்சாரம் செய்து தனித்தனியே தலைப்பிட்டு மூன்றுக்கும் மேற்பட்ட செய்திகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளதே பூணூல் நாளிதழ்?

புத்தன், மன்னார்குடி

பதில்: பூணூல் நாளிதழின் குரைப்புகள் - ஊளை யிடல்கள் தி.மு.க. ஆட்சிக்கு உரமாகப் பயன்படும் என்பதுதான் உண்மை!

---

கேள்வி 10: பெரியார் கொள்கைகளை பின்பற்றினால் வாழ்க்கை சுதந்திரமாகவும் லேசாகவும் இருக்கும் என்று திரைக்கலைஞர் சத்யராஜ் கூறுகிறாரே?

- மீ.முரளிதரன், மதுரை-9

பதில்: அதற்கு தனது வாழ்க்கையே சாட்சி என்றும் கூறுவாரே நம் இனமுரசு சத்யராஜ். அதை ஏன் விட்டுவிட்டீர்கள்! உண்மைதான் அது!


No comments:

Post a Comment