பிரதமர் அறிவித்துள்ள பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

பிரதமர் அறிவித்துள்ள பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி, ஜூன் 29 பொது சிவில் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித் துள்ளன. மக்கள்மீது பொது சிவில் சட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது என்று அவை கருத்துத் தெரிவித்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:

மத்தியப் பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, போபாலில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்தலாக் இஸ்லாமிய மதத்தில் அவசியமானது என்றால் எதற்காக பல இஸ்லாமிய நாடுகளில் அது தடை செய்யப்பட் டுள்ளது. முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் வாக்கு வங்கி பசியில் இருக்கிறார்கள்.

அவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். ஒரு குடும்பம் இரு விதிமுறை களின்கீழ் இயங்குமா? அதேபோல் ஒரு நாடு எப்படி இருவிதமான சட்டங்களின்கீழ் செயல் படும்? இந்தச் சட்டத்தின் பேரில் எதிர்கட்சியினர் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். அப்படி அரசியல் செய்பவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்கட்சியினரின் அரசி யலுக்குப் பலியாகும் இஸ்லாமிய மக்களிடம் பாஜகவினர் பொது சிவில் சட்டத்தை பற்றி தெரியப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார். 

பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் உள் ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 

ஒன்றிய மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

இதுகுறித்து மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பொது சிவில் சட்டத்தை, ஒரு நிகழ்ச்சி நிரலால் இயங்கும் பெரும்பான்மை கொண்ட அரசால் மக்களிடையே திணிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது எளிதான நடைமுறை என்பது போல் பிரதமர் மோடி மக்களிடையே தோன்றச் செய்கிறார்.

ஆனால், அது சாத்தியமில்லை என்கிற கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை அவர் படிக்க வேண்டும். பாஜகவின் சொல்லாலும் செய லாலும் தேசம் இன்று பிளவுபட்டுள்ளது. பொது சிவில் சட்டம் மக்களிடையே திணிக்கப்பட்டால் அது பிளவை மேலும் விரிவுபடுத்தவே செய்யும்” எனப் பதிவிட்டுள்ளார் 

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் 

டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் 

டி.கே.எஸ். இளங்கோவன், “பொது சிவில் சட்டம் முதலில் ஹிந்து மதத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் உள்பட அனைத்துத் தரப்பினரும் நாட்டில் உள்ள எந்தவொரு கோயிலிலும் பூஜை செய்ய அனு மதிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக், "கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தின் 44 ஆவது பிரிவும் அதையேதான் வலியுறுத்துகிறது. ஆனால், இது அனைத்து மதங்களையும் தொடர்புடையது என்பதால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் முன்பு, பரந்த அளவில் ஆலோசனை நடத்தவேண்டும். ஒரு மித்த கருத்து உருவான பிறகு இதில் அடுத்தகட்ட நடவடிக் கையை நாம் எடுக்க வேண்டும். நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 44 ஆவது பிரிவை எடுத்துப் பார்த்தீர்கள் என்றாலும்,  அது பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாகவே இருக் கிறது”எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment