காந்தியாரே, “ஜஸ்டிஸ் கட்சிக்குச் செல்வாக்கு வந்ததன் காரணம்! படிப்பு பட்டம் - பதவி - சமஉரிமை தந்ததுதான்” என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள், தீண்டாமை ஒழிக்கப்பட்டு கோயில், குளம், கிணறு இவை தேவை என்று வந்தவுடன் காந்தியார் என்ன செய்தார் தெரியுமா? அதற்காக 25லட்சம் ரூபாய் தந்து தாழ்த்தப்பட்டவர் களுக்கென, தனியான கோயில், குளம், கிணறு கட்டித் தரும்படி செய்தார்.
அதற்கு நான் தான் தலைவன். நான் அவர்களுக்குத் தனிக் கிணறு, தனிக்குளம், தனிக்கோயில் என்பது கூடாது. இப்போது இருப்பவைகளிலே அவர்களும் நுழையலாம்; தண்ணீர் எடுக்கலாம். என்று இருக்க வேண்டும், இப்படித் தனியாக கிணறு, குளம், இருப்பதைவிட அவர்கள் அவை இல்லாமல் சாகட்டும் என்று கூறி ஆட்சேபித்தேன்.
அப்போதே சி.ஆர், “நாயக்கரே சத்தம் போடாதீர்கள்! நமக்குள் சரி பண்ணிக் கொள்ளலாம்“ என்றார். இதை இப்படியே விட்டுவிடாமல் புத்தி கற்பிக்க நினைத்தேன். தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிணற்றைத் திறப்பதற்காக என்னை அழைத்திருந்தார்கள். நானும் போனேன். “செட்டியாருக்குப் (காந்தியாருக்கு) புத்தி கற்பிக்க வேண்டுமென்பதற் காகத்தான் வந்தேன். இதைத் திறப்பதற்காக நான் வரவில்லை. இம்மாதிரி தனிக் கிணறு என்று இருப்பதை வெறுப்பவன் நான். எனவே திறக்க மாட்டேன்” என்று கூறி திறக்காமல் வந்துவிட்டேன்.
சிதம்பரம் வட்டம் காட்டு மன்னார் கோயிலில் 15-10-1959 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (‘விடுதலை’ 28-10-1959)
No comments:
Post a Comment