நிதிநுட்ப நகரம் - நிதிநுட்ப கோபுரம் மூலம் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

நிதிநுட்ப நகரம் - நிதிநுட்ப கோபுரம் மூலம் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 18 சென்னையில் அமையும் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் மூலம் தமிழ்நாட்டில் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை, நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத் தால் ரூ.116 கோடி மதிப்பீட்டில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அங்கு முதற்கட்டமாக ரூ.254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் பன் னாட்டு தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.6.2023) அடிக்கல் நாட்டினார். 

விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் நாடு கடந்த 2 ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநி லமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக் கின்றன.

அதேபோல, தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ் வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத் தினைக் கொண்டதாக இருக்கின்றது. அதேபோல், அனைவரையும் உள்ளடக் கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகு வாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடு களை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. இதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள இளைஞர்களும், பெண் களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவ லாக, மாநிலம் முழுவதும் இம்முத லீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

மேலும், நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச் சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இணைய விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக் கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந் திடவேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில், ஏடி எம்மில் பணம் எடுப்பதைவிட, அலை பேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறிவிட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரு கின்றன. முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரயும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்ட மிடுதல்கள் இருக்கவேண்டும். தற் போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழ் நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

அதேபோல, பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நான் உறுதியாக நம்புகிறேன். நிதிநுட்பத்தொழில் சூழலமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதற்கு இங்கு அமையப் பெற்றுள்ள நிறுவனங்களே சாட்சி. அதன்படி, படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 

இதனை, அடுத்த கட்டத் திற்கும் எடுத்துச் செல்லவேண்டும். எதிர் காலத்தில் வரப்போகும் தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

அதன் ஒரு பகுதியாகத்தான், ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.  இவ்வாறு அவர் பேசினார். 

இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசு, செஞ்சி மஸ்தான், டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெய முரளிதரன், செயல் இயக்குநர் ஜெயசந்திர பானு ரெட்டி மற்றும் பல்வேறு நாடுகளை சார்ந்த தூதரக அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment