ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்: பயங்கர விபத்து - 300 பேர் பரிதாப பலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்: பயங்கர விபத்து - 300 பேர் பரிதாப பலி!

பாலசோர், ஜூன் 3 ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். 

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் ஒன்று, அவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஆகும். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பயணித்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் அவர்களின் நிலை என்னவென்று இன்னும் முழுமையாக தெரிய வில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விபத்து நேரிட்ட பாலசோருக்கு விரைந்துள்ளனர்.  விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழ்நாடு பயணிகளில் முதல் கட்டமாக 250 பேர் மீட்கப்பட்டு, சிறப்பு ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு பயணிகள் எத்தனை பேர்?

கொல்கத்தா மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது நேற்றிரவு (2.6.2023) மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகே இருந்த தண்ட வாளத்தில் விழுந்தன.

அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த் பூரில் இருந்து அவுரா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 600-க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு முதல் விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விபத்தின்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகளும் கணிசமான அளவில் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள் ளான ரயிலில் மொத்தம் 867 பயணிகள் சென்னைக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கணக்கிடப்பட்டு வருவதாகவும் இன்று (3.6.2023) காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்தார்.

நேற்று இரவே ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்புகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விபத்து குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து, இன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை தமிழ்நாடு அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிறப்பு ரயில் ஒடிசாவின் பத்ரக் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த ரயிலில் சுமார் 250 பயணிகள் வந்துகொண்டுள்ளனர். அதேபோல விபத்தில் சிக்கிய வர்களின் உறவினர்களை ஒடிஷா அழைத்துச் செல்வதற்கான சிறப்பு ரயில் இன்று மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப உள்ள தாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய் தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரி ழந்தவர்களின் உடல்களைக் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்துவருவதாகத் தெரிவித்தார்.

மேலும், விபத்து குறித்த தகவல்களை அறிய 9445869843 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவும் மாநில கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம்.

விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பாலசோருக்கு விரைந்துள்ளனர். அவர் களுடன் அதிகாரிகள் குழுவும் உடன் சென்றுள்ளது.

அடுத்த 4 நாள்கள் அங்கே தங்கியிருந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.

தமிழ்நாடு அரசின் நிதியுதவி

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப் படும் என்றும், ரயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் நேற்று (2.6.2023) அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமுற்ற வர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 நேற்று மாலை 6.50 மணியில் இருந்து 7.10 மணிக்குள் இந்த மொத்த துயரமும் நடந்துமுடிந்துள்ளது. ரயில் விபத்துத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து இருக்கும் நிலையில், ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்த விசாரணைக்கு பிறகே ரயில் விபத்து நடைபெற்றது எப்படி? என்ற முழு விவரங்களும் தெரியவரும்.

No comments:

Post a Comment